தமிழ்நாடு (Tamil Nadu)

மாநில கல்வி கொள்கையை அறிவிக்காததால் மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்- ஓ.பன்னீர் செல்வம்

Published On 2023-01-19 09:12 GMT   |   Update On 2023-01-19 10:03 GMT
  • மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவச் செல்வங்களின் கல்வி மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.
  • வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ- மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில், 920 கிராமங்களில் உள்ள 3 முதல் 16 வயது வரையிலான 30,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஒன்றாம் வகுப்பு பயிலும் 42 விழுக்காடு மாணவர்களால் 1 முதல் 9 வரையிலான எண்களைக்கூட படிக்க இயலவில்லை என்றும், இதேபோன்று ஆங்கில வார்த்தைகளை படிக்கும் திறன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே வெகுவாக குறைந்துவிட்டதாகவும், ஒன்றாம் வகுப்பு பயிலும் 53 விழுக்காடு மாணவ, மாணவியர் மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் 23 விழுக்காடு மாணவ, மாணவியரால் ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்துகளைகூட படிக்க இயலவில்லை என்றும், வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை குறைந்ததற்கு கொரோனா தொற்று நோய் காரணமாக கூறப்பட்டாலும், பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே போவதும், கல்விக் கொள்கை குறித்து ஒரு திடமான முடிவை அறிவிக்காததும்தான் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

தி.மு.க. ஆட்சி அமையப்பெற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவச் செல்வங்களின் கல்வி மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

இந்த நிலை நீடித்தால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். மாணவ, மாணவியரிடையே, குறிப்பாக தொடக்கக் கல்வி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் களைய முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

'திராவிட மாடல்' என்று சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல், 'எண்ணும், எழுத்துமாகிய இரண்டும் மக்களுக்கு கண் போன்றது' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ- மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News