தமிழ்நாடு (Tamil Nadu)

தனிக்கட்சி தொடங்க மாட்டேன்; முடிவு கிடைக்கும் வரை போராடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-02-24 08:05 GMT   |   Update On 2023-02-24 08:05 GMT
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சட்ட விதியைத்தான் இன்று காப்பாற்ற நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
  • ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

சென்னை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பொதுக்குழு சம்பந்தப்பட்டவை தவிர அதில் உள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஜூலை 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று தான் கூறப்பட்டுள்ளது. நியாயம், நீதி எங்கள் பக்கம் இருகிறது.

இந்த வழக்கில் 5 நாட்கள் வாதங்கள் நடந்துள்ளன. எங்கள் தரப்பு விவாதங்கள் கேட்கப்பட்டுள்ளது. எதை தீர்மானிக்க வேண்டுமோ அதை தீர்மானிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவில்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை கோர்ட்டை அணுக உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் எந்த இடத்திலும் இடைக்கால பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்றதாக குறிப்பிடப்படவில்லை.

பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்பதற்கு தான் பொதுக்குழு செல்லும் என்று கூறி இருக்கிறார்கள். இதுதவிர வேறு ஒன்றையும் குறிப்பிடவில்லை. தீர்மானங்கள் செல்லும் என்று வழக்கின் தீர்ப்பில் கூறப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த சட்ட விதியைத்தான் இன்று காப்பாற்ற நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இன்று வரை தொண்டர்களை காப்பாற்றும் இயக்கமாகவே இந்த இயக்கம் இருக்கிறது.

இது ஓ.பி.எஸ். தாத்தாவோ, எடப்பாடி பழனிசாமியின் தாத்தாவோ ஆரம்பித்த கட்சி அல்ல. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அதற்காகத்தான் நாங்கள் இன்று தர்மயுத்தத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

அதற்கு விடிவு வரும் வரை, நல்ல தீர்ப்பு வரும் வரை நாங்கள் போராடுவோம். இதற்காக மக்கள் மன்றத்தை நாடி செல்வதற்கு எங்களது படை தயாராகி விட்டது. மக்களிடம் உறுதியாக நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

இந்த தீர்ப்பு வந்ததற்கு பின்னர்தான் எங்களுடைய தொண்டர்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் இருக்கிறார்கள். எந்த தேர்தல் வந்தாலும் எம்.ஜி.ஆர். வகுத்த சட்ட விதிகளை காப்பாற்றுபவர்கள் பக்கம்தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள்.

தி.மு.க.வின் பி டீம் என்று யாராவது சொன்னால் அதுபற்றி எங்களிடம் கேள்வி கேட்பதா? எடப்பாடி பழனிசாமி அணிதான் தி.மு.க.வின் பி டீம். அதுமட்டுமல்ல ஏ டூ இசட் டீமும் அவர்கள்தான்.

எங்களை பார்த்து ஏதாவது குறை சொல்ல முடியுமா? ஆனால் அவர்களை பற்றி குறை சொல்ல ஆயிரம் இருக்கிறது. அவை ஒவ்வொன்றாக வெளிவரும். கட்சி உடையக்கூடாது என்று இதுவரை நாங்கள் பொறுமை காத்திருந்தோம்.

இன்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சேர்க்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது அவரது தாத்தா ஆரம்பித்த கட்சியா? ஆணவத்தின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறார். அந்த ஆணவத்தை அடக்குகின்ற சக்தி அ.தி.மு.க. தொண்டர்களிடம் இருக்கிறது.

நான் எந்த காரணத்தை கொண்டும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். முடிவு கிடைக்கும் வரை போராடுவேன். நாங்கள் தர்மத்தின் வழிநின்று நீதி கேட்போம். தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News