தமிழ்நாடு

டிரைவர்களை அரசே நேரடியாக அமர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-11-01 09:31 GMT   |   Update On 2023-11-01 09:31 GMT
  • பணியாளர்களின் உழைப்பை சுரண்டும் குத்தகை நியமன முறையை கடந்த காலங்களில் தி.மு.க.வே எதிர்த்துள்ளது.
  • வேலைவாய்ப்புகளிலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 234 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை குத்தகை முறையில் அமர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு எழுந்த எதிர்ப்புகள் அடங்குவதற்குள்ளாக, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 75 ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் மூலம் குத்தகை முறையில் அமர்த்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டும் குத்தகை நியமன முறையை கடந்த காலங்களில் தி.மு.க.வே எதிர்த்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்ட நிலையில், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்காக பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளைத் தான் மக்கள் நம்பியிருக்கின்றனர். அந்த வேலைவாய்ப்புகளிலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கக் கூடாது.

எனவே, மாநகரப் போக்குவரத்துக்கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் குத்தகை முறை நியமனங்களை கைவிட்டு, அரசே நேரடியாக பணியாளர்களை நியமிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News