தமிழ்நாடு (Tamil Nadu)

குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்து: ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

Published On 2023-11-06 08:13 GMT   |   Update On 2023-11-06 08:13 GMT
  • சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
  • சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதி ர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

ஆனால் அன்று சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. இதை அடுத்து இன்று காலை சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) வழக்கை வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

முன்னதாக சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News