தமிழ்நாடு

காங்கயம் அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி

Published On 2023-04-21 05:45 GMT   |   Update On 2023-04-21 05:46 GMT
  • சிறுத்தை சிக்காமல், வனத்துறையினருக்கு போக்கு காட்டியது.
  • கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால் தடங்கள் எதுவும் தென்படவில்லை.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை மலையடிவாரப்பகுதியில் பதுங்கியதுடன், அங்குள்ள தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் வைத்து, பொதுமக்கள் மாலை , இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை சிக்காமல், வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை குறித்த கால் தடங்கள் எதுவும் தென்படவில்லை.

இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்ததா? அல்லது வேறு எங்கேயும் வனப்பகுதியில் உள்ள குகைகளில் பதுங்கி இருக்கிறதா? என்ற குழப்பத்தில் வனத்துறையினர் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் மலையடிவார பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு பின் நேற்று ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கட்டி இருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்றது.

நாயை சிறுத்தை தூக்கிச்சென்றதை ஊதியூர் பகுதியை சேர்ந்த ராஜா(வயது40) என்பவர் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராஜா கூறும் போது, நேற்று ஊதியூர் - காசிலிங்கம் பாளையம் சாலை பகுதியில் வந்த போது சிறிது தொலைவில் அப்பகுதியில் உள்ள ஒரு பாறை மீது சிறுத்தை உட்கார்ந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் சிறுத்தையை பார்த்துக்கொண்டிருந்தேன். சுமார் 10 நிமிடங்கள் அமைதியாக பாறை மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை பின்னர் மெதுவாக எழுந்து அவ்விடத்தை விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன் என்றார்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மீண்டும் ஊதியூர் வனப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறுகையில்,ஊதியூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்று சிறுத்தையின் கால்தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதன் மூலம் சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.

கூண்டுகளை தயார்படுத்தி மீண்டும் சிறுத்தையை பிடிக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த உள்ளோம். பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். சிறுத்தை எங்காவது தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சிறுத்தையை பிடிக்க ஊதியூர் வனப்பகுதியில் ஏற்கனவே 3 கூண்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. கூண்டுக்குள்ளும், அதனை சுற்றியும் இறைச்சிகள் போடப்பட்டு இருந்தது. ஆனால் கூண்டு அருகே வரை வந்த சிறுத்தை இறைச்சியை மட்டும் தூக்கி கொண்டு சென்று விட்டது.சில நாட்களாக சிறுத்தை தென்படாத நிலையில் தற்போது மீண்டும் வேட்டையை தொடங்கி உள்ளதால் கூண்டுகளை வேறு இடங்களில் மாற்றி வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 20 இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை பணியாளர்கள் 16 பேர் ஊதியூரில் முகாமிட்டு வனப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10 நாட்களாக சிறுத்தை தென்படாததால் வேறு பகுதிக்கு நகர்ந்து சென்று இருக்கும் என்று எண்ணி அப்பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். தற்போது மீண்டும் வேட்டையை தொடங்கியுள்ளதால் அச்சமடைந்துள்ளனர். எனவே சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News