கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திர ஏரி, ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் கொடைக்கானல் எங்கும் வண்ணமயமாக இருந்தது.
- குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட வழிசெய்தது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை எழில்கொஞ்சம் சுற்றுச்சூழல் நிலவுவதால் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் குளுகுளுவென காலநிலையும், குளிர்ச்சியான காற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்களின் விடுமுறையை உற்சாகமாக களிக்கின்றனர். உயரமான மலையிடங்கள், அருவிகள், படகுசவாரி, பூங்காக்கள், வண்ணமலர்கள் என கொடைக்கானலில் உள்ள அனைத்துமே பொழுது போக்கு அம்சமாக விளங்குவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கிறது.
மேலும் நேற்றுமுதல் பள்ளிகளில் அரையாண்டு த்தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்காகவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காகவும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணாகுகை, அப்பர்லேக்வியூ, பைன்மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள எழில்கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திர ஏரி, ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் கொடைக்கானல் எங்கும் வண்ணமயமாக இருந்தது. இது குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட வழிசெய்தது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ணமலர்களை கண்டு ரசித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பூத்துகுலுங்கிய சிலுவை பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர்.
மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி, ஏரிச்சாலையில் குதிரைசவாரி, சைக்கிள் சவாரி என விடுமுறையை கழித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வாறு அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டுள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.