தமிழ்நாடு

தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படும் என நினைத்தவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது- திருமாவளவன்

Published On 2024-09-18 09:39 GMT   |   Update On 2024-09-18 09:39 GMT
  • பெரியார் அரசியல் என்பது தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு மட்டுமானது அல்ல.
  • நாடு முழுவதும் மது விலக்கு கொள்கை வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னை:

தியாகி ரெட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரியார் நினைவிடத்தில் நடிகர் விஜய் மரியாதை செலுத்தியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அதனை பாராட்டி எனது சமூகவலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளேன்.

சமூக நீதிப் பார்வையோடு அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையும் அளிக்கிறது.

பெரியார் அரசியல் என்பது தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு மட்டுமானது அல்ல. சமூக நீதியின் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் அன்பு இளவல் நடிகர் விஜய்க்கு இருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன். பாராட்டுகிறேன்.

தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்படும் என தேர்தல் கணக்கு போட்டவர்களின் மூக்கு அறுபட்டுள்ளது. அவர்களது கூக்குரலும் புலம்பலும் இது. அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எப்படியாவது பிளவை ஏற்படுத்த வேண்டும் என முயற்சித்தனர். அது நடக்கவில்லை. ஏமாற்றம் அடைந்தனர். அதனால் விரக்தி அடைந்துள்ளனர்.

விடுதலை சிறுத்தை மது ஒழிப்பு மாநாட்டிற்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வருகிறார்கள் என்றால் கொள்கை தளத்தில் தி.மு.க.வும் விடுதலை சிறுத்தையும் இணையாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

தேசிய கல்விக் கொள்கையில் தி.மு.க.விற்கும், விடுதலை சிறுத்தைக்கும் உடன்பாடில்லை. நாங்கள் ஏன் அதை ஏற்க வேண்டும்.

நாடு முழுவதும் மது விலக்கு கொள்கை வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். குடி நோயாளிகளாக மக்கள் மாறுவது வேதனை அளிக்கிறது. அதனால் தான் தேசிய மதுவிலக்கு கொள்கை குறித்து பேசுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News