தமிழ்நாடு (Tamil Nadu)

தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைக்கின்றனர்- திருமாவளவன்

Published On 2024-09-16 04:49 GMT   |   Update On 2024-09-16 04:49 GMT
  • இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன.
  • மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும்.

திருவாரூர்:

மது போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்க மண்டல செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

மது ஒழிப்பு என்கிற உணர்வு பூர்வமான பிரச்சனையை கையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் மதுவேண்டாம், மதுவிலக்கு வேண்டும் என்பார்கள், ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும் மது என்பது மிகப்பெரிய லாபம் தரும் தொழில், மிகப்பெரிய கட்டமைப்பினை கொண்டது. மதுக்கடைகளை மூடுவது என்பதை விட மது ஆலைகளை மூட வேண்டும்.

டாஸ்மாக் கடையை மூடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டாஸ்மாக் என்பது கார்பரேசன் தமிழ்நாடு அரசே உருவாக்கி உள்ளது. இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழில் அதிபர்களுடன் முரண்படுகின்ற விசயம். மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும். இது குறித்து தொடக்கத்தில் இருந்து பேசி வருகிறேன்.

நாங்கள் மது ஒழிப்பு குறித்து பேசுவதால் தற்போது தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைத்து பேசி வருகின்றனர். தேர்தலில் அரசியல் வேறு, மதுவிலக்கு கொள்கை வேறு என்று கூறுகிறோம். மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைவரும் கூறுகிறோம். தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு என்பது மட்டுமல்ல, தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பயன் அளிக்கும்.

தூய்மையான நோக்கத்துக்கு தேர்தல் அரசியல் முடிச்சு போட வேண்டாம். மது ஒழிப்பு கொள்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்க தயார். கூட்டணி உறவில் பாதிப்பு வந்தாலும் வரலாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். இப்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் தொடர்கிறோம், தொடரும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News