தமிழ்நாடு

மரக்காணம் அருகே முயல்வேட்டைக்கு சென்ற 3 பேர் மின்வேலியில் சிக்கி பலி

Published On 2022-07-20 04:16 GMT   |   Update On 2022-07-20 04:16 GMT
  • முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் மின்வேலியில் சிக்கினர்.
  • போலீசார் அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி பத்மநாபனை தேடி வருகிறார்கள்.

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், (வயது 45), வெங்கடேசன் (44) சுப்பிரமணி (38) இவர்கள் அடிக்கடி இரவு நேரங்களில் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம்.

அதன்படி இந்த 3 பேரும் நேற்று இரவு முயல்வேட்டைக்கு சென்றனர். அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுபன்றிகள் அட்டகாசம் நீடித்து வருகிறது. இந்த பன்றிகள் வாழை, மரவள்ளி கிழங்கு செடியை நாசம் செய்து வருகிறது. எனவே காட்டுபன்றி தொல்லையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி பத்மநாபன் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.

இதனை கவனிக்காமல் முயல்வேட்டைக்கு சென்ற 3 பேரும் நிலத்தை தாண்டினர். அப்போது முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் மின்வேலியில் சிக்கினர். இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை அந்தவழியாக சென்ற விவசாயிகள் 3 பேர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டனர்.

தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவ சாயி பத்மநாபனை தேடி வருகிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News