தமிழ்நாடு (Tamil Nadu)
திருப்பூர் சாலை விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
- விபத்தில் சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர்.
- படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே லாரி மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த 40 பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர்-கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவருக்கு திதி கொடுத்து விட்டு திரும்பியபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.