தமிழ்நாடு (Tamil Nadu)

உயர்ந்து வரும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்

Published On 2024-10-03 04:25 GMT   |   Update On 2024-10-03 04:25 GMT
  • குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்றது.
  • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடந்த ஜூலை மாதம் குறைக்கப்பட்ட பிறகு, அதன் விலை குறையத் தொடங்கியது. அதற்கு முன்னதாக தாறுமாறாக விலை அதிகரித்து வந்ததால், விலை குறைந்தது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.

அதன் பின்னர், அமெரிக்க பெடரல் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பா நாடுகளின் மத்திய வங்கியும், அதே நடைமுறையை கையில் எடுத்தது.

 

இந்த காரணங்களால் குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்றது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதியில் இருந்து புதிய உச்சத்தில் தங்கம் பயணித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தையும் தொட்டது. தொடர்ந்து அதிகரித்து, கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்து 800 என்ற நிலைக்கு வந்தது. விலை மேலும் உயர்ந்தால், ரூ.57 ஆயிரத்தையும் தாண்டும் என பேசப்பட்ட நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து விலை சற்று குறைந்தது.

 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கனவே ரஷிய-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் பதற்ற காலங்களில், பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை குவித்ததால், அப்போது அதன் விலை எகிறியது. தற்போது இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றச்சூழல் இருப்பதால், தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News