தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை- இன்றைய நிலவரம்
- மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கட்டுக்கடங்காமல் மீண்டும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஜூலை மாதம் வரை இப்படியாக உயர்ந்து வந்த நேரத்தில், மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக தங்கம் விலை அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்து காணப்பட்டது.
அதன் பின்னரும் விலை குறையத் தொடங்கியது. இதனால் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்றே அப்போது சொல்லப்பட்டது. ஆனால் அமெரிக்க பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தங்கம் விலை எந்த அளவுக்கு குறைந்ததோ, அதே வேகத்தில் மீண்டும் உயரத்தொடங்கியது.
அந்த வகையில் கடந்த 21-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனை ஆகி, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து நேற்றும் விலை அதிகரித்து சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.