தமிழ்நாடு

நொறுங்கி கிடக்கும் கார்.

மேலூர் அருகே லாரி மீது கார் மோதல்- சென்னை வாலிபர் பலி

Published On 2023-05-24 08:07 GMT   |   Update On 2023-05-24 08:07 GMT
  • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
  • விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலூர்:

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுடலைராஜன் (வயது41). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். அவருடன் அவரது தாயார், மனைவி மற்றும் 2 குழந்தைகள் பயணம் செய்தனர்.

இன்று மதியம் 12.30 மணியளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. காரின் முன்பு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் பாலம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது.

இதை கவனிக்காத சுடலைராஜன் வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த சுடலைராஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவருடன் பயணித்த தாய், மனைவி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் காரில் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து 45 நிமிடம் போராடி காரில் சிக்கியிருந்த சுடலை ராஜன் உடலை மீட்டனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News