தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி-யை முடக்க நினைக்கும் விடியா திமுக அரசு- எடப்பாடி பழனிச்சாமி

Published On 2024-06-18 13:54 GMT   |   Update On 2024-06-18 13:54 GMT
  • அம்மாவின் ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.
  • குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு எதிராக கண்டன பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

2007-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் ஒருசில குடும்ப காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவி நிறுவனமானது, முறையான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் எவ்வித செயல்பாடும் இன்றி கிடப்பில் இருந்தது.

அதன் பின்பு, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசு கேபிள் டிவி நிறுவனம் புதுப்பிக்கப்பட்டு அதற்கான வாரியத் தலைவர், நிர்வாக இயக்குநர், பொது மேலாளர், அலுவலர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்றது. நாட்டிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலமாக, 40 லட்சம் இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த அரசு கேபிள் டிவி நிறுவனமானது, அம்மா அவர்களின் சீரிய முயற்சியால் மத்திய அரசின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து டிஜிட்டல் லைசென்ஸ் பெறப்பட்டது.

அதன் பின்பு, அம்மா அரசில் இந்நிறுவனம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு சுமார் 30 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 24 ஆயிரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு

வந்தது.

இந்நிலையில், தற்போதைய விடியா திமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை காரணமாகவும், சேவை மையங்களின் குறைபாடுகள் காரணமாகவும், செட்டாப் பாக்ஸ் தட்டுப்பாடு காரணமாகவும், அம்மாவின் ஆட்சியில் 30 லட்சமாக இருந்த இணைப்புகள் தற்போது சுமார் 10 லட்சமாகக் குறைந்து, பரிதாபமான நிலையில் உள்ளது.

இந்நிலையில், கண்டிஷனல் அக்சஸ் சிஸ்டம் (CAS) நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய AMC தொகையை முறையாக செலுத்தாத காரணத்தால், அந்நிறுவனத்தினால் கடந்த 15.6.2024 அன்று காலை முதல் தமிழகமெங்கும் உள்ள அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொழிலை நம்பியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும், 10 லட்சத்திற்கும் அதிகமான அரசு கேபிள் டிவி நேரடி வாடிக்கையாளர்களும், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி தொழில்நுட்ப ஊழியர்களின் குடும்பங்களும் மிகுந்த துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளது.

இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு, தன் குடும்ப கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவாக, தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி-ஐ முடக்க நினைக்கும் விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News