தமிழ்நாடு (Tamil Nadu)

கல்பாக்கம் அணுஉலை தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்காதது ஏன்?: தி.மு.க விளக்கம்

Published On 2024-03-05 03:14 GMT   |   Update On 2024-03-05 03:14 GMT
  • கல்பாக்கம் பகுதியில் மக்களுக்கு அதிகளவு புற்றுநோய் ஏற்படுகிறது.
  • வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள்.

கடலூர்:

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலமாக குஜராத் உள்ளது.

அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்க போதைப் பொருள் பரவலுக்கு காரணம் பா.ஜனதாதான்.

அ.தி.மு.க. ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார், யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தன.

கட்சியை சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக செயல்பட்டார் என கேள்விபட்டவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா?

கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதபோதே புரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆலையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், முதலமைச்சர் நாகரீகமாக பங்கேற்கவில்லை.

கல்பாக்கம் பகுதியில் மக்களுக்கு அதிகளவு புற்றுநோய் ஏற்படுகிறது. வெளிநாட்டினர் மாமல்லபுரத்தில் மீன் சாப்பிட மாட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத்திற்கு சென்று எப்படி தடுத்து நிறுத்தினோமோ அதேபோல், இந்த ஆலையையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News