தமிழ்நாடு (Tamil Nadu)

அணையின் நுழைவாயில் இரும்பு கதவை சேதப்படுத்திய காட்டுயானை

Published On 2024-09-13 07:45 GMT   |   Update On 2024-09-13 07:46 GMT
  • வன விலங்குகள் அணையின் தண்ணீர் உள்ள பகுதியில் வந்த தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம்.
  • சில வருடங்களுக்கு முன்பு அணையின் இருபுறம் முள்வேலி அமைக்கப்பட்டு நுழைவாயிலில் இரும்பு கதவு போடப்பட்டது.

டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடியாகும். தற்போது அணை நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. அணையின் மூலம் 2498 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணைக்கு நீர்வரத்தானது குன்றி உட்பட அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரப்பப்பட்டு இங்கு கட்லா, லோகு, சிலேப்பி உள்ளிட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டு பெரிதானதும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வரும் நீரால் இந்த மீன்கள் வளர்வதால் ஆரோக்கியத்துடனும், சுவையாகவும் இருப்பதால் உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குண்டேரிப்பள்ளம் மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

மேலும் பண்டிகை காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருவர். அப்படி குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் பொது மக்கள் உணவு பொட்டலங்கள், பழவகைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்து மீதமாவதை அணைக்கு உள்ளும் அணையை ஒட்டிய பகுதியில் வீசி செல்கின்றனர்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சுற்றுலா பயணிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் வீசி செல்வதால் அணையின் நீர் மாசுபட்டு மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறக்க வாய்ப்பு உள்ளதால் சில வருடங்களுக்கு முன்பு அணையின் இருபுறம் முள்வேலி அமைக்கப்பட்டு நுழைவாயிலில் இரும்பு கதவு போடப்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டுயானை அணையின் நடைபாதை வழியாக வந்த நுழை வாயிலில் அமைக்கப்பட்ட இரும்பு கதவை உடைத்து நொறுக்கி தாறுமாறாக வீசி சென்றது.

குண்டேரிப்பள்ளம் அணை வனத்தையொட்டியே அமைந்துள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அணையின் தண்ணீர் உள்ள பகுதியில் வந்த தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம்.

ஆனால் அன்று இரவு யானை இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் சுற்றுலா பயணிகளிடத்தில் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News