கொடைக்கானலில் மருத்துவக்குணம் கொண்ட நெய்மிளகாய் சீசன் தொடக்கம்
- தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது.
- 180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு தொழில்களுக்காக தமிழர்கள் சென்றனர். இதில் தாயகம் திரும்பிய தமிழர்கள் நெய்மிளகாய் கொண்டு வந்தனர். இந்த மிளகாய்களை கொடைக்கானல் மலைக்கிராமங்கள், ஏற்காடு, ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில சாகுபடி செய்தனர். சீதோசன நிலை நெய்மிளகாய் வளர்வதற்கு ஏற்றதாக இருந்ததால் ஆண்டு முழுவதும் மலை ஸ்தலங்களில் நெய்மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
பம்பரம் போன்று தோற்றமளிக்கும் நெய்மிளகாய் நாட்டு மிளகாயை விட காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். ஒரு மிளகாய் அதிகபட்சம் 10 கிராம் வரை இருக்கும். குழம்பில் போடும்போது நெய்போன்று வாசனை கமகமக்கும். கொடைக்கானலில் தொடர்ந்து சாகுபடி செய்யப்பட்ட போதும் மழைக்காலமே இதன் சீசனாகும். தற்போது தொடர்மழை காரணமாக நெய்மிளகாய் வரத்து அதிகளவில் உள்ளது.
180 கிராம் கொண்ட 1 பாக்கெட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் ஒருசில விவசாயிகள் மட்டுமே நெய்மிளகாய் சாகுபடி செய்கின்றனர். இதன் காரணமாகவே விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் சமையலில் பயன்படுத்தினால் நெய் சேர்த்தது போல் ருசியாக இருக்கு ஒருதடவை சுவைத்து பார்த்தவர்கள் மீண்டும் அதனை தேடி வந்து வாங்கிச்செல்கின்றனர். தற்போது சீசன் தொடங்கி உள்ளநிலையில் மேலும் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.