செய்திகள் (Tamil News)

2012 அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு மந்திரி பதவி: டிரம்ப் பரிசீலனை

Published On 2016-11-20 06:17 GMT   |   Update On 2016-11-20 06:17 GMT
2012 அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு மந்திரி பதவி வழங்க டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.

நியூயார்க்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் வருகிற ஜனவரி மாதம் அதிபராக பதவி ஏற்கிறார். அதை தொடர்ந்து தனது நிர்வாகத்தில் புதிய மந்திரிகள் மற்றும் அதிகார பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். அவர்கள் அனைவரும் சர்ச்சையில் சிக்கியவர்கள் ஆவார்.

அவர்களில் ஜெய் செசன்ஸ் என்பவர் அட்டர்னி ஜெனரல் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது இன வெறி புகார் உள்ளது. எனவே கடந்த 1986-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

லெப்டினென்ட் ஜெனரல் மைக்கேல் பிலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாம் கொள்கைக்கு எதிரானவர். தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்புக்கு பக்க பலமாக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது மிட்ரோம்னியை வெளியுறவு உள்துறை மந்திரி பதவிக்கு நியமனம் செய்ய ஆலோசித்து வருகிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

மேலும் இவர் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை கூறியவர். டிரம்பை வஞ்சகன், ஏமாற்றுக்காரன், கொடுமைக்காரன், என வசை பாடியவர். அதே போன்று மிட்ரோம்னி அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவியவர் என பதிலடி கொடுத்துள்ளார்.

இப்படி தனக்கு எதிராக கருத்துக்களை கூறிய மிட்ரோமினிக்கு உள்துறை மந்திரி பதவி வழங்க டிரம்ப் தீர்மானித்துள்ளார். அதற்காக நியூஜெர்சியில் பெட்மினிஸ்டரி என்ற இடத்தில் உள்ள தனது கோல்ப் மைதானத்துக்கு இவரை அழைத்திருந்தார்.

அதன்படி அங்கு சென்று ரோம்னி அவரை சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 80 நிமிடம் நடந்தது. அப்போது அவருக்கு மந்திரி பதவி வழங்குவதாகவும் அதை ஏற்றுக் கொள்ளும்படியும் டிரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால் அதற்கு மிட் ரோம்னி பதில் எதுவும் கூறவில்லை. மந்திரி பதவியை அவர் ஏற்பாரா? மாட்டாரா? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

Similar News