செய்திகள்

அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை 30 நாட்களில் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு

Published On 2018-06-27 09:04 GMT   |   Update On 2018-06-27 09:04 GMT
அமெரிக்காவில் அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை 30 நாட்களில் பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #USmigrantchildren #USzerotolerance
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் தொடக்கம் வரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுடன் வந்த சுமார் 2,300 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் தலைவர் ஸைட் ராட் அல் ஹுசைன் டிரம்ப்பின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார். இதைதொடர்ந்து, குழந்தைகளை அகதிகளிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் ரத்து செய்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அகதியாக வந்த பெண்ணிடமிருந்து 6 வயது குழந்தை பிரிக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் சார்பாக அமெரிக்கன் மக்கள் உரிமை யூனியன் சான் டியேகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபடி டான சப்ரா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், அகதிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை 14 நாட்களில், 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை 30 நாட்களில் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  #USmigrantchildren #USzerotolerance
Tags:    

Similar News