செய்திகள் (Tamil News)

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பிடியில் இருந்து முக்கிய மாவட்டத்தை ராணுவம் கைப்பற்றியது

Published On 2019-06-07 09:36 GMT   |   Update On 2019-06-07 09:36 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் கஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தை ராணுவம் அரசுப்படைகள் இன்று கைப்பற்றின.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான்வழியாக சென்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த ஓராண்டுக்கும் மேலாக கஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த காஜா ஓமரி மாவட்டத்தை மீட்பதற்காக அரசுப்படைகள் ஆவேச தாக்குதல் நடத்தி வந்தன.

இந்நிலையில், காபுல் நகரின் தெற்கே சுமார் 125 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காஜா ஓமரி மாவட்டத்தை ஆட்டிப்படைத்து வந்த தலிபான்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்டதாகவும், அந்த மாவட்டம் முழுவதும் ஆப்கானிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இன்று காலை கொண்டு வரப்பட்டதாகவும் அந்நாட்டின் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News