உலகம் (World)

பாலஸ்தீன பிரச்சனை குறித்து கவலை இல்லை.. கைவிரித்த சவுதி இளவரசர்

Published On 2024-09-30 01:38 GMT   |   Update On 2024-09-30 01:38 GMT
  • சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை அல்- உலா என்ற பாலைவன சோலையில் வைத்து சந்தித்துள்ளார்.
  • போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா எந்த விதத்திலும் தொடர்புபடுத்தப்படக்கூடாது

பாலஸ்தீனம் 

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 11 மாதங்களுக்கும் மேலாக நடத்தி வரும் தாக்குதலில் 41,000 துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 95,000 துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். போரை நிறுத்த இஸ்ரேலுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்துவந்தாலும் அதற்கு எதிர்மாறாக தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் 800 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிளிங்கன் வருகை 

இந்நிலையில் பாலஸ்தீன பிரச்சனை குறித்து தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று சவுதி அரேபியாவின் இளவரசர் கூறியுள்ளதாக அட்லான்ட்டிஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நிற்கும் நிலையில் சவுதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு கவனம் பெற்று வருகிறது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா சார்பில் அதன் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

அல்- உலா

அவ்வாறு கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை அல்- உலா என்ற பாலைவன சோலையில் வைத்து சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பாலஸ்தீனம் பிரச்சனை குறித்து பிளிங்கன் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, பாலஸ்தீன பிரச்சனை குறித்து தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கவலையும் இல்லை, ஆனாலும் சவுதி மக்கள் அந்த பிரச்சனையை முக்கியமானதாகப் பார்க்கின்றனர்.

போர் நிறுத்தம்

சவுதி அரேபியா மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளதால் அவர்களை இந்த விவகாரம் ஈர்த்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து பிளிங்கன் எழுப்பிய கேள்விக்கு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா எந்த விதத்திலும் தொடர்புபடுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக அட்லான்ட்டிஸ் இதழ் கூறியுள்ளது. அட்லான்ட்டிஸ் செய்தி சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள சவுதி உயர் அதிகாரி ஒருவர், அதை முற்றிலும் மறுகாதது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News