உலகம்

மியான்மரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது - ஏன் தெரியுமா

Published On 2024-07-03 09:14 GMT   |   Update On 2024-07-03 10:10 GMT
  • மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
  • மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கடைக்காரரின் 3 செல்போன் கடைகளையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பது நல்ல விஷயம் தானே, பின்னர் எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்று கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மார் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் இந்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப ஆரம்பிப்பார்கள். இது அரசுக்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

மியன்மார் நாட்டின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News