உலகம் (World)

நடுவானில் குலுங்கிய விமானம்: காயமடைந்த பயணிகளுக்கு நிவாரணம் அறிவித்த நிறுவனம்

Published On 2024-06-11 13:24 GMT   |   Update On 2024-06-11 13:24 GMT
  • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
  • மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.

லண்டன்:

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.

இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News