செய்திகள் (Tamil News)

வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி - பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ்

Published On 2019-06-27 07:52 GMT   |   Update On 2019-06-27 07:52 GMT
வீரர்களின் கூட்டு முயற்சியால் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.
பர்மிங்காம்:

உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து நியூசிலாந்து முதல் தோல்வியை தழுவியது.

பர்மிங்காமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்னே எடுக்க முடிந்தது. ஜேம்ஸ் நீசம் 97 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), கிராண்ட்ஹோம் 64 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 41 ரன்னும் எடுத்தனர். சகீன்ஷா அப்ரிடி 3 விக்கெட்டும், முகமதுஅமீர், சதாப்கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி பாபர் ஆசாமின் சதத்தால் வெற்றி பெற்றது. அந்த அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழத்தியது.

பாபர் ஆசம் 127 பந்தில் 101 ரன்னும் (11 பவுண்டரி), ஹாரிஸ் சோகைல் 68 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட், பெர்குசன், காலின் முன்ரோ தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி அரை இறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 7 புள்ளியுடன் அந்த அணி 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்ததாக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மிகவும் கடுமையாக விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். வீரர்களின் கூட்டு முயற்சி வெற்றிக்கு காரணமாக இருந்தது. அனைத்து பந்து வீச்சாளர்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர்.

பாபர் ஆசம், சோகையில் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. நான் பார்த்த சிறந்த பேட்டிங் இதுவாகும். 238 ரன் கடினமான இலக்கு என்பது தெரியும். இதனால் 50 ஓவர் வரை ஆடுவது என்று விரும்பினேன். ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு பாபரும், ஹாரிசும் பொறுப்புடன் ஆடினர்.

அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணி முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, “பாகிஸ்தான் எல்லா வகையிலும் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டது. பாபர் ஆசரும், சோகையிலும் ‘பிட்ச்‘ தன்மைக்கு ஏற்றுவாறு ஆடினார்கள்” என்றார்.

பாகிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 29-ந்தேதியும், நியூசிலாந்து அணி அதே தினத்தில் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன.

Similar News