செய்திகள் (Tamil News)

திருச்செந்தூர் கோவில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-10-22 08:12 GMT   |   Update On 2018-10-22 08:12 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.

2 முதல் 5-ம் திருநாள் வரை கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

நவம்பர் 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

நவம்பர் 14-ந்தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகளும், பின்னர் 5 மணியளவில் அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்படுதலும் நடைபெறும். மாலை 6.30-க்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றுதல், இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

திருவிழாக்காலங்களில் நாள்தோறும் காலையும், மாலையும் கோவிலின் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் பக்திச் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி, கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News