செய்திகள் (Tamil News)
பழனியில் முருகப்பெருமானை தரிசனம் செய்த பக்தர்கள்

பழனியில் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-11-22 03:51 GMT   |   Update On 2021-11-22 03:51 GMT
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதப்பிறப்பு, கிருத்திகை, வார விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களும், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பழனியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

வார விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொது, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News