டுவிட்டர் ஊழியர்களில் பத்து சதவீதம் பேரை அதிரடியாக பணிநீக்கம் செய்த எலான் மஸ்க்
- டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கையை எலான் மஸ்க் மேற்கொண்டுள்ளார்.
- இந்த முறை டுவிட்டர் ஊழியர்களில் பத்து சதவீதம் பேர் வேலையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
டுவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் பலமுறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எலான் மஸ்க் தலைமை பொறுப்பை ஏற்கும் முன் டுவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வந்தனர்.
எனினும், எலான் மஸ்க் பதவியேற்றதும், ஊழியர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை எலான் மஸ்க் பத்து சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். இந்த நடவடிக்கையில் சுமார் 200 பேர் பணியை இழந்துள்ளனர்.
இது குறித்து நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டுவிட்டர் நிறுவனம் பிராடக்ட் மேலாளர்கள், டேட்டா ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. பணிநீக்க நடவடிக்கை வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைனில் டுவிட்டரின் பல்வேறு அம்சங்களை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மானிடைசேஷன் உள்கட்டமைப்பு குழுவில் பணியாற்றி வந்து 30 ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது 8 ஆக குறைந்துள்ளது. எலான் மஸ்க்-இன் டுவிட்டர் 2.0 திட்டத்தில் பணியாற்றி வந்தவர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.