search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • இளவரசி விவாகரத்து செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.

    துபாய் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமிடம் இருந்து இன்ஸ்டாகிராமில் விவாகரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

    தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    விவாகரத்து குறித்து ஷைக்கா மஹ்ரா தனது இன்ஸ்டாரகிராம் பக்கத்தில், "அன்புள்ள கணவரே.. உங்களுக்கு வேறொரு துணை கிடைத்துவிட்டதால், நம் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி." என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஜோடி இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கியும் உள்ளனர்.

    "இது ஒரு மோசமான செய்தி. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்" என்று ஒரு பயனர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர், "உங்களின் முடிவுக்காக பெருமைப்படுகிறேன்" என்றார்.

    இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர், 12 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் மகளை வரவேற்றனர்.

    ஷைக்கா மஹ்ரா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர் மற்றும் பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரின் மகள் ஆவார்.

    அவர் பெண்கள் அதிகாரம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்காக வாதிடுபவர். அவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் பெற்றுள்ளார்.

    • பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.
    • கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

    அரபு நாடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வது மிகவும் குறைவு என கூறப்படும் நிலையில் 22 சக்கர கனரக வாகனத்தை ஒரு பெண் ஓட்டி அசத்தியுள்ளார். துபாயை சேர்ந்தவர் பவுசியா சஹுரான். 22 வயதான இவர் பிறக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இவர் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்தார். வணிக வரி துறையில் பட்டம் பெற்ற இவர் ஆணுக்கு நிகராக பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற விண்ணப்பித்தார்.

    துபாயில் கனரக வாகனத்திற்கான ஓட்டுனர் உரிமம் பெறுவது சுலபமல்ல. 2013-ம் ஆண்டு முதல் முறையாக இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்ற இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு கனரக வாகன உரிமம் பெற முயற்சி செய்தார். கண், உடல் பரிசோதனையின் போது அதிகாரிகள் இவரை வியப்புடன் பார்த்தனர்.

    ஆனாலும் தனது விடா முயற்சியால் முதல் முயற்சியிலேயே கனரக வாகன ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். புஜாராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக சேர்ந்த இவர் 2 மற்றும் 3 அச்சுகள் கொண்ட 22 சக்கர கனரக வாகனத்தை ஓட்டி அசத்தி வருகிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், கனரக வாகனம் ஓட்டுவது சாதாரணமாக கார் ஓட்டுவது போன்று அல்ல. நீண்ட தூர பயணத்தில் முழு கவனம் மற்றும் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் அவசியம். அதே போல டீசல், தண்ணீர் மற்றும் டயரில் போதிய அளவு காற்று இருக்கிறதா என்பதையும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். 

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.

    துபாய்:

    இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது. இதில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளது.

    புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 68.52 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 50 சதவீதத்துடன் 3-வது இடத்திலும், இலங்கை 50 சதவீதத்துடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீதத்துடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • வீடியோ வைரலாகி 34 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளையும், 51 ஆயிரத்துக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பணத்தை வீணடிப்பதாக பதிவிட்டனர்.

    துபாயை சேர்ந்தவர் கோடீஸ்வரர் ஜமால். இவரது மனைவி சவுதி அல் நடக். 26 வயதான சவுதி அல் நடக்கின் பிறந்தநாளில் அவரது கணவர் ஜமால் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சவுதி அல் நடக் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், தனது கணவரிடம் இருந்து பெற்ற ஆடம்பரமான பரிசுகளை பட்டியலிட்டுள்ளார். அதில், தனது பிறந்தநாளில் மியு மியூவில் ஷாப்பிங் செய்ய ரூ.12 லட்சம் செலவழித்ததாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும் கூறி உள்ளார். பின்னர் ஹெர்ம்ஸ் பிராண்டின் ஷோரூமுக்கு மனைவியை அழைத்து சென்ற ஜமால் ரூ.29 லட்சம் விலை கொண்ட பரிசை வாங்கி கொடுத்துள்ளார்.

    இதுதவிர அழகு சிகிச்சைகளுக்காகவும் நிறைய பணம் செலவழித்ததாகவும் மொத்தத்தில் அந்த ஒரு நாள் மட்டும் ரூ.60 லட்சத்து 74 ஆயிரத்து 120 தனக்காக கணவர் செலவழித்துள்ளதாக சவுதி அல் நடக் வீடியோவில் கூறி உள்ளார்.

    இந்த வீடியோ வைரலாகி 34 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளையும், 51 ஆயிரத்துக்கும் மேலான விருப்பங்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பணத்தை வீணடிப்பதாக பதிவிட்டனர்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா, ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் விருது வென்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்தது.

    இந்தப் பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானின் குர்பாசும் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஜூன் மாதத்துக்கன சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், சிறந்த வீராங்கனை விருதை இந்தியாவின் ஸ்மிர்தி மந்தனா வென்றுள்ளார்.

    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது.
    • 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர்.

    இந்தியாவை சேர்ந்த பல்லவி வெங்கடேஷ் தனது தாயாரை துபாய் அழைத்துச் சென்று புகழ்பெற்ற 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தார். அங்கு வழக்கமான குடும்பப் பணிகளை கவனித்த தாயார், இந்தியாவில் செய்வதைப்போல நட்சத்திர ஓட்டலின் பால்கனி பகுதிக்கு சென்று கம்பியில் துணியை உலர வைக்கப் போனார். ஆனால் அங்கு அப்படி துணியை உலர்த்துவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். சிறு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தை பெற்றோர் ரசிப்பதுபோல, தாயார் அறியாமையால் செய்த இந்த செயலை ரசித்துப் பார்த்த பல்லவி, அதை வீடியோவாக பதிவு செய்துகொண்டார்.

    இங்கே இப்படி துணியை உலர்த்தக்கூடாது என்று சொல்லியபடியே மற்ற தளங்களையும் காட்டி படம்பிடிக்கிறார். பலநூறு அறைகள் கொண்ட அந்த பிரமாண்ட ஓட்டலில் மற்றொரு தளத்திலும் யாரோ துணியை பால்கனியில் உலர்த்தி இருப்பது காட்டப்படுகிறது.

    இந்த வீடியோவை பல்லவி வலைத்தளத்திலும் பகிர்ந்தார். அந்த வீடியோ ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்து இருந்தனர். லட்சக்கணக்கானவர்கள் விருப்பப் பொத்தனை அழுத்தி இருந்தார்கள்.


    • கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.
    • கோவில் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது. கோவிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

    கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் சில ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.

    இந்நிலையில், அபுதாபி கோவிலுக்கு இதுவரை வருகை தந்த பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அபுதாபி இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என போற்றப்படும் மணற்கல் ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 14-ந் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு இதுவரை வருகை புரிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.

    10 லட்சம் பேரின் பிரார்த்தனைகள், இதயங்கள், நம்பிக்கைகள், அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கதைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தற்போது இந்த ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்துகொண்டு மட்டுமே வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விடுமுறை நாட்களில் சுவாமி தரிசன நேரம் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்று (திங்கட்கிழமை) கோவிலுக்கு விடுமுறையாகும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில் திறந்திருக்கும். பார்வையாளர்களின் வசதிக்காக அபுதாபி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 203 வழித்தட எண் கொண்ட பஸ் அல் முரைக்காவில் கோவிலுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    சமூக ஊடகங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள். அந்த வகையில், நாடியா கர் என்ற பெண் உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார்.

    இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள பூங்காவிற்குள் புலியுடன் நடந்து செல்வது போன்றும், அப்போது புலியின் கழுத்தில் சங்கிலி கட்டி இழுத்து செல்வது போன்றும் காட்சி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், துபாயில் எனது செல்ல புலியை அழைத்து செல்வது வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.
    • டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டு மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல்நலன் கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாயில் இந்த ஓய்வெடுக்கும் அறைகள் அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேசனல் சிட்டி, பிசினஸ் பே, அல் கூஸ், அல் கராமா, அல் சத்வா, அல் ஜதாப் மற்றும் மிர்திப் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் 24 மணி நேரமும் சுய சேவை முறையில் செயல்படுகிறது.

    இந்த அறைகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறையில் அமரும் இருக்கைகள், குளிர்ந்த தண்ணீர், செல்போன் சார்ஜ் ஏற்றும் வசதி, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் எந்திரம், சிற்றுண்டி வினியோகம் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் நிழலான பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வரிசையில் நிறுத்திக்கொள்ளலாம். இடத்தை பொறுத்து இந்த அறையில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை ஓய்வெடுக்கலாம்.

    கடும் கோடை நிலவும் நேரத்தில் அல்லது ஆர்டருக்காக காத்திருந்து மிகவும் சோர்வடையும்போது டெலிவரி ஊழியர்கள் இங்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதன் மூலம் களைப்பு மற்றும் சோர்வு நீக்கப்பட்டு சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த வசதி துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டு வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் கட்டாய மதிய இடைவேளை வருகிற 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைமுறைக்கு வருகிறது.

    தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இந்த நேரங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    • டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்தது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன.இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றின.

    இந்நிலையில், டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

    இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    துபாய்:

    ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தூதராக இந்தியாவின் யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான போட்டித் தூதராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    ×