search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
    • வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று மாலை முதல் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது விட்டு மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மாலையில் பணி முடிந்து திரும்பியவர்கள் மழையில் நனைந்த படியே சென்றனர்.

    இரவில் பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    சில நிமிடங்கள் பலத்த மழை பெய்த நிலையில் தொடர்ந்து சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. இன்று காலை முதலே கோவை மாநகரில் உள்ள பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக இதமான காலநிலை காணப்படுகிறது.

    புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், சூலூர், காரமடை, கருமத்தம்பட்டி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குளங்கள், குட்டைகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியார் அருகே உள்ளது கவியருவி.

    இந்த அருவிக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலும் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது பெய்து வரும் மழை காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    பில்லூர் அணை-20, சின்கோனா-18, சின்னக்கல்லார், சிறுவாணி அணை-17, வால்பாறை தாலுகா-16, சோலையார்-13, பெரியநாயக்கன் பாளையம்-11, கோவை தெற்கு-11.80 வால்பாறை, மதுக்கரை-9.

    • தமிழகத்தில் இந்தாண்டு ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • மரக்கன்றுகள் நடும் திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் திமுக எம்.பி. சண்முகசுந்தரம்.

    கோவை:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகத்தில் இந்தாண்டு (2024-25 நிதியாண்டில்) ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் முதல் கன்றை நட்டு வைத்து இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சக்தி குழுமத்தின் தலைவர் மாணிக்கம், கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமார், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஜி.டி.கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக எம்.பி. சண்முகசுந்தரம் கூறுகையில், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். தற்போது உலகம் எதிர்கொண்டு வரும் பருவநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மரக்கன்றுகள் நடுவதுதான் சிறந்த தீர்வாகும். அந்த வகையில், விவசாய நிலங்களில் மரம் நடும் இந்த அற்புதமான திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

    கடந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தொண்டாமுத்தூரில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதில் முதல் மரக்கன்றையும், 2-வது லட்சம் மரக்கன்றையும் என்னை அழைத்து நட வைத்தார்கள். ஈஷா மேற்கொண்டு வரும் இந்த நற்செயல் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இதுதொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வலரும், முன்னோடி விவசாயியுமான வள்ளுவன் கூறுகையில், "உலகிலேயே வேறு எந்த சுற்றுச்சூழல் இயக்கமும் செய்யாத மாபெரும் சாதனையை காவேரி கூக்குரல் இயக்கம் செய்துவருகிறது. விவசாய நிலங்களில் ஓராண்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் இலக்கை நாங்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற சாதனை நிகழ்த்தப்பட்டது இல்லை. அந்த வகையில், முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் நாம் இதை நிகழ்த்திக் காட்டி வருகிறோம். இத்திட்டத்தின் மூலமாக, சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரமும் அதிகரித்து வருகிறது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஆலோசனைப்படி தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலைமதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டு 7,63,087 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்தாண்டு 9,55,000 மரக்கன்று நடும் பணியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், மரக்கன்று நட விரும்பும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச ஆலோசனைகள் குறித்து பேசும்போது, "விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக 130 களப்பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் இயங்கி வருகின்றனர். மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்குச் சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என கூறினார்.

    • அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மழை நீடித்தது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், காரமடை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே சென்றன. பலத்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் நகரில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

    மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள தியேட்டரின் அருகே உள்ள சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் வெளியேறி சாலையில் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். பல்வேறு தெருக்களிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.50 கன அடியாக உள்ளது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 3 மாதங்களுக்கு பிறகு மின் உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து எந்த நேரத்திலும் அதிகரிக்கும் என்பதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதனால் பவானி ஆற்று கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை, வெண்ணல்நாயுடு வீதி, ஒடந்துறை, இந்திரா நகர், குஞ்சவண்ணான் தெரு, சீரங்க ராயன் ஓடை, வெள்ளிப்பாளையம் உள்ளிட்ட ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில் தாசில்தார், நகராட்சி ஆணையாளர், காவல்துறையினர் ஆகியோர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் செய்ய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.

    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருமலை, பச்சமலை, சின்னக்கல்லார், நீரார்அணை, சின்கோனா, ஈடியார், பண்ணிமேடு, சேக்கல் முடி, தலானார், ரொட்டிக்கடை, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

    இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கூழாங்கல் ஆறு மற்றும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடித்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 12 செ.மீ மழையும், வால்பாறை பி.ஏ.பியில் 11 செ.மீ, பில்லூர் அணை, சின்னக்கல்லாறில் 7 செ.மீ மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    விமான நிலையம்-33, தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழகம்-29, பெரியநாய க்கன்பாளையம்-57, மேட்டுப்பாளையம்-69, பில்லூர் அணை-74, அன்னூர்-42, கோவை தெற்கு-29, சூலூர்-58, வாரப்பட்டி-29, தொண்டாமுத்துர்-70, சிறுவாணி அணை-24, சின்கோனா-67, சின்னக்கல்லார்-78, வால்பாறை பி.ஏ.பி-115, வால்பாறை தாலுகா-120.

    • தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது.
    • கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் 5 நாட்களும் சர்வதேச விமானங்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா நோய்த்தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் இருந்து சர்வதேச விமானம் மூலம் கோவை வரும் பயணிகளிடம் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ச்சல் பரிசோதனை பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இதுதொடர்பாக கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்துக்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தற்போது காய்ச்சல் பாதிப்புகளை கண்டறியும் வகையில் சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கோவை விமான நிலையத்தில் ஏற்கனவே தானியங்கி காய்ச்சல் கண்டறியும் எந்திர பரிசோதனைகள் செயல்பாட்டில் உள்ளன.

    சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் இதுவரை பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.

    கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா கூறுகையில், தமிழகத்தில் கடந்த முறை கொரோனா தொற்று பரவியபோது இங்குள்ள மக்களிடம் நோய்எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அவர்களுக்கு கொரோனாவை தடுக்கும் விதமாக, 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. எனவே கொரோனா தொற்று பரவல் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையிலை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்றால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசு சார்பில் பிரத்யேக தகவல் வெளியாகும்பட்சத்தில் அவற்றின்படி கூடுதல் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.

    கோவை:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1-ந் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் தாகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அதிரடி சோதனையும் மேற்கொண்டனர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள 2 டாக்டர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

    கோவை சாய்பாபா காலனி பெரிய கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜாபர் இக்பால். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கர்நாடக போலீசார் காரில் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டின் நுழைவு வாயில், கதவுகள் அனைத்தையும் யாரும் உள்ளே நுழையாதவாறு அடைத்தனர். தொடர்ந்து ஜாபர் இக்பாலின் வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக, அங்குலம் அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் இருந்த ஜாபர் இக்பாலிடமும் விசாரித்தனர். சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி கொண்டனர்.

    இதேபோல் அவரது வீட்டின் அருகே உள்ள அவரது உறவினரான டாக்டர் நயன் சாதிக்கின் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது 10.20 மணிக்கு முடிவடைந்தது. சோதனையின் முடிவில் 2 பேரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. செல்போனில் உள்ள தரவுகளை ஆராய்ந்து சோதனை செய்து விட்டு திரும்ப ஒப்படைப்பதாக கூறி விட்டு சென்றனர். மேலும் அவர்கள் 2 பேரையும் வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. அலுவ லகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.

    ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இங்கு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

    • தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக பாஜக பிரமுகர் விஜயகுமார் புகார் அளித்தார்.
    • இந்த கொள்ளை வழக்கில் அன்பரசன் என்பவரை காவல்துறை கைது செய்தது.

    நேற்று முன்தினம் பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவை அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.18.5 லட்சம் ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    ஆனால் விஜயகுமார் தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக தெரிவித்தால் அவரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், கொள்ளை தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் தொகையை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அன்பரசன் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் பொய்யான புகாரை கூறி போலீசாரை அலைக்கழித்தாக பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். 

    • அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.
    • எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    கோவை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.

    * எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    * ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பெரும் வெற்றி பெறும், எனவே ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை.

    * அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள்.

    * வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும். அப்போது கோவை மாவட்டத்திற்கு விடுபட்ட திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்று கூறினார்.

    • சிலந்தி ஆற்றில் அணை கட்டினால், அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படும்.
    • திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின், எந்த தடுப்பணையும் கட்டவில்லை.

    கோவை:

    கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன். இவர் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    கோவை கணபதி மாநகரில் உள்ள பாரதி நகரில் உள்ள மலரவன் வீட்டிற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை வந்தார். 

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

    அவர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மலரவன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

    அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும். இதன் காரணமாக அந்த பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைவார்கள்.

    எனவே சிலந்தி ஆற்றின் நடுவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடுப்பணை கட்டுவதை தடுக்க தி.மு.க அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று ஆந்திரா, கர்நாடகா, கேரள அரசுகள் மேற்கொள்ளும் தடுப்பணை கட்டும் பணியையும் தடுக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீரை சேமிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டினோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து இதுவரை எந்தவித தடுப்பணையும் கட்டப்படவில்லை. மேலும் அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலும் அ.தி.மு.க வாக்காளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளனர். கோவையில் வாக்காளர்கள் இருமுறை பதிவு என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு முறையும் வாக்காளர் நீக்கம், வாக்குப்பதிவு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் சந்தேகம் நிலவுகிறது. அவ்வப்போது வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாட்டில் சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.

    அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பலர் இருந்தனர்.

    • பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
    • வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ரப்பர் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், ஆறுகளும் நிறைந்து காணப்படுகிறது. இந்த இயற்கை காட்சிகளை கண்டுகளிப்பதற்காக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    தற்போது கோடைகாலம் என்பதால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, ஆறுகளிலும் குளித்தும் வருகின்றனர்.

    பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கோடை சீசனையொட்டி வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சீரமைப்பு, விரிவாக்கம், தகடுகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் கடந்த காலங்களை ஒப்பிடும்போது வால்பாறை மலைப்பாதையில் விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன. இந்த நிலையில் வால்பாறை மலைப்பாதையில் உள்ள 40 கொண்டை ஊசி வளைவுகளிலும் அமைக்கப்பட்டுள்ள தகடுகளுக்கு இடையே தற்போது ரப்பர் வளையங்கள் அமைத்துள்ளனர்.

    வாகனங்கள் தகடுகள் மீது மோதினால் வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் இந்த ரப்பர் வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இரவு நேரங்களில் ரப்பரில் உள்ள மஞ்சள் நிறம் வெளிச்சத்தை கொடுப்பதோடு கொண்டை ஊசி வளைவுகளையும் அலங்கரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது.

    குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், குழந்தையின் தாய் ரம்யா, கோவை காரமடையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனவிலங்கு மோதல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    வால்பாறை:

    தமிழகத்தில் நீண்ட நாளாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மலை பிரதேசங்களுக்கு மக்கள் அதிகமாக சுற்றுலா சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த சவுகத் (வயது 45) என்பவர் வால்பாறைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்தார்.

    வால்பாறையில் சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சோலையார் அணை, மழுக்கபாறை வழியாக காரில் புறப்பட்டு சென்றனர்.

    அப்போது ஆனாகாயா வனப்பகுதியில் காட்டு யானை நிற்பது தெரியவந்தது. தொடர்ந்து வாகனத்தை நிறுத்திய சவுகத், அதில் இருந்து இறங்கி, காட்டுக்குள் சென்று யானைக்கு அருகில் பழங்களை வீசி உள்ளார்.

    இதனால் மிரண்ட யானை அவரை தாக்க பாய்ந்து வந்தது. யானை வருவதை பார்த்ததும் அவர் அங்கிருந்து காரை நோக்கி வந்து ஏறி கொண்டு அங்கிருந்து சென்றார். யானையிடம் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

    இதனை அங்கு சுற்றுலா வந்திருந்த யாரோ சிலர் புகைப்படம் எடுத்து கேரளா வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து யானைக்கு பழம் கொடுத்ததாக சவுகத் கைது செய்யப்பட்டார். வனவிலங்கு மோதல் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே மழுக்க பாறை வனப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை பார்த்தால் வாகனங்களை விட்டு இறங்கவோ, விலங்குகளுக்கு உணவளிக்கவோ கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைரெயில் பாதையில் ஹில்குரோவ் என்ற இடத்தில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. இதனால் நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், இருப்பு பாதை பிரிவு பொறியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் மலைரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ×