search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
    • தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சி மக்களுக்கு மூலையூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமும், ஜடையம்பாளையம் தனி குடிநீர்த் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே திருப்பூர் 2-ஆவது கூட்டு குடிநீர்த் திட்டத்துக்காக கடந்த 2 மாதங்களாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மற்ற குடிநீர்த் திட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    இதனிடையே பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆலாங்கொம்பு, தண்ணீர்தடம், வீராசாமி நகர், காந்திபுரம், கோழிப்பண்ணை, சவுடேஸ்வரி நகர், பழையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்- சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் திருப்பூர் 2-ஆவது குடிநீர் திட்டத்தில் மீதமாகும் 27 எம்.எல்.டி தண்ணீரில் 1 எம்.எல்.டி தண்ணீரை ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்தனர்.குடிநீர் வழங்கக்கோரி நள்ளிரவிலும் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் டி.கே.வி பழனிசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்த வாகனங்கள் வெள்ளிக்குப்பம் பாளையம், குமரன் குன்று வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற வாகனங்கள் ஓடந்துறை வச்சினாம்பாளையம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.

    • இந்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்திலேயே பம்ப்செட் உற்பத்தி தொடங்கி விட்டது.
    • வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

    கோவை:

    தரமான பம்ப்செட் தயாரிப்பில் உலகளவில் கோவை மாவட்ட பம்ப்செட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

    தேசிய அளவிலான பம்ப்செட் தேவையில் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு கொண்டுள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பம்ப்செட் சீசனாகும். இந்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்திலேயே பம்ப்செட் உற்பத்தி தொடங்கி விட்டது. தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

    வீடுகளில் பயன்படுத்தப்படும் பம்ப்செட் தேவையும் உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தை போல் குஜராத்தில் பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும், நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கோவை பம்ப்செட் பொருட்களை வாங்கி அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரப்படி விவசாய பம்ப்செட் தேவை 15 சதவீதம் வரையும், வீடுகளுக்கான பம்ப்செட் 10 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பம்ப்செட் தேவை மேலும் உயரும். இந்த ஆண்டு சீசன் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும் போது, கோவையில் உள்ள பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களில் வீடுகளுக்கு தேவையான பம்ப் செட் பொருட்களை அதிகம் தயாரிக்கப்படுகிறது. தற்போது நிலையான தேவை காணப்படுகிறது. பெரும்பாலான அரசுத்துறைகளில் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட் பொருட்களே கொள்முதல் செய்யப்படுகிறது. குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என்றனர்.

    • கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகி வருகிறார்கள். இந்த வாரம் நல்ல, தரமான குட்டை, நெட்டை வீரிய ஓட்டுரக மரங்களின் இளநீர்விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருடன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர்வரத்து மிக மிக குறைவாக இருப்பதால் பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
    • வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    கோவை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி அவற்றை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். கொடநாடு எஸ்டேட் பணியாளர்கள் தேவன், ரமேஷ் மற்றும் சயானின் நண்பர்கள் பாபு, அப்துல்காதர் ஆகிய 4 பேருக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

    அவர்கள் 4 பேரும் தனித்தனியாக நாளை(30-ந் தேதி) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற த்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தை சேர்ந்த வாளையார் மனோஜ் ஆஜர் ஆனார். அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர் வருகிற ஜூன் மாதம் 21-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

    பின்னர் அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது:- கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற பங்களாவில் தடவியல் நிபுணர் குழு உட்பட பல்வேறு துறையினர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது எதிர்தரப்பினர் பங்களாவிற்குள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருவதால், எதிர்தரப்பினர் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.
    • கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில் 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறையில் இன்று (28-04-2024) நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. வீ. மெய்யநாதன் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.

    மலை சார்ந்த இடங்களில் மட்டுமே விளையும் என்று அனைவராலும் அறியப்பட்ட மசாலா பயிர் வகையான மிளகு, சமவெளியிலும் சிறப்பாக விளையும் என்பதை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மிளகு சாகுபடி குறித்த கருத்தரங்கை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் தமிழ்நாட்டில் நான்கு இடங்களில் நடத்தியது.

    இக்கருத்தரங்கு புதுக்கோட்டையில் ஆலங்குடி தாலுக்கா, அனவயலில் அமைந்துள்ள முன்னோடி மிளகு விவசாயி திரு. ராஜாகண்ணு அவர்களின் பண்ணையிலும், மயிலாடுதுறையில் அரையபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் வீரமணி அவர்களின் தோட்டத்திலும் நடைபெற்றது.


    இக்கருத்தரங்கில் அமைச்சரை வரவேற்றுப் பேசிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் "தற்சமயம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் மட்டுமே தோட்டக்கலை துறை சார்பாக, விவசாயிகளுக்கு மிளகு கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சம வெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்று நிருபிக்கபட்டுள்ளதால், தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

    கருத்தரங்கை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பேசுகையில் "2018 கஜா புயலுக்கு பின் புதுக்கோட்டையில் பாதிக்கப்பட்டிருந்த நிலங்களை இந்த பகுதி விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் கடந்த 5 - 6 ஆண்டுகளில் மீட்டெடுத்து, பசுமை பரப்பை அதிகரித்துள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் விவசாயிகளே இயற்கையை காக்கும் மருத்துவர்கள் என பெருமிதத்துடன் கூறினார்.

    அத்துடன் பூமியை பாதுகாக்க மரங்களை நடவு செய்வோம், மிளகின் மூலம் கூடுதல் வருவாய் பெறுவோம். மேலும் காவேரி கூக்குரல் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் மிளகு கன்றுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் " என உறுதியளித்தார்.

    இந்த மிளகு சாகுபடி கருத்தரங்குகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல்வேறு தகவல்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.


    குறிப்பாக மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயியான ஆசிரியர் திரு. ராஜாகண்ணு அவர்கள் பேசுகையில் " மிளகு என்பது மனிதர்களின் உணவில் தவிர்க்க முடியாத அருமருந்து, அது மலை பிரதேசங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை மாறி இன்று சமவெளியிலும் சாத்தியப்படுத்தி இருக்கிறோம். இரண்டு தலைமுறை பயிர் என்றழைக்கப்படும் மிளகை பயிர் செய்த 6 வருடங்களுக்கு பிறகு ஒரு செடியில் இருந்து 3 - 5 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும். மேலும் ஒரு ஏக்கரில் 500 - 1000 கிலோ வரை காய்ந்த மிளகை எடுக்கலாம். எனவே சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் நல்ல மகசூலுக்கான வாய்ப்பு சமவெளியிலும் உண்டு" என தெரிவித்தார்.

    மேலும் இக்கருத்தரங்கில் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர். கண்டிஅண்ணன் மற்றும் டாக்டர் . முகமது பைசல் அவர்கள் மிளகு சாகுபடி குறித்தும், அதில் ஏற்படும் நோய்கள் மற்றும் தீர்வுகள் குறித்தும் பேசினர். இவர்களோடு இந்திய நறுமண பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குனர் ந. சிமந்தா சைக்கியா அவர்கள் மிளகு ஏற்றுமதி குறித்து விளக்கினார்.

    மேலும், சமவெளியில் மிளகு சாகுபடி மூலம் வெற்றி கண்டிருக்கும் முன்னோடி விவசாயிகளான திரு. பாலுசாமி, திரு. ராஜாகண்ணு, திரு. செந்தமிழ் செல்வன், திரு. பாக்கியராஜ், வளர்மதி மற்றும் தனித்தன்மை வாய்ந்த பெப்பர் தெக்கன்-1 மிளகு, காப்புரிமை பெற்ற 50 வருட அனுபவ விவசாயி திரு. டி.டி. தாமஸ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவங்களை விளக்கி கூறினர்.


    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிய முன்னோடி விவசாயி, ஆசிரியர் ந.வீரமணி அவர்கள் சரியான சூழலை ஏற்படுத்தினால் டெல்டாவிலும் மிளகு விவசாயம் சாத்தியம் என்பதை தன் அனுபவத்தில் இருந்து பகிர்ந்து கொண்டார்.

    இது மட்டுமின்றி, கருத்தரங்க நிறைவுக்கு பின் பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கிருந்த பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்து கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் காரில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் கூட்டத்தில் கார் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த சதியில் சிக்கி ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறார்கள்.

    இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் முபின் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய ஆதரவாளரான உமர்பாரூக்கின் நெருங்கிய கூட்டாளியான கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த தாஹா நசீர் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்திருந்தனர். 14-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தாஹாநசீருக்கு எதிராக பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரை ஜெயிலில் அடைத்ததற்கு பழிவாங்கும் நோக்கில் கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக கார் குண்டு முன்கூட்டியே வெடித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கைதான உமர் பாரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்துள்ளார். அவருடன் தாஹாநசீரும் இணைந்து சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். குண்டுவெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட முபின் வீட்டுக்கு தாஹாநசீர் சென்று சதிச்செயலுக்கு திட்டமிட்டுள்ளார்.

    இதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, ஒருமைப்பாட்டுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் நோக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே பலமுறை கோவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கிடைக்கும் தகவல்களை கொண்டு அடுத்தடுத்து குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக மொத்தம் 3 முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள்.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கேமரா காட்சிகள் நேற்று திரையில் தெரியாமல் போய் உள்ளது. அதற்கு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முறையான பணியாக இருக்க வேண்டும்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெரியாமல் போனதற்கு காரணம் கால சூழ்நிலை, கடும் வெயில் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அடிக்கும் வெயிலை போன்று ஊட்டியில் வெயில் தாக்கம் இருப்பதில்லை. எனவே எதாவது காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக தொழில்நுட்பத்தை சரிசெய்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையான பணி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் வாக்குகள் எல்லாமே விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்சென்னை என தமிழகம் முழுவதுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.

    வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் விளக்கி உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சியினரும் இதனை கையில் எடுத்துள்ளனர்.

    அயோத்தி ராமர் கோவில் மக்களின் ஒவ்வொருவரின் எண்ணம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவு இன்று நிறைவேறி உள்ளது. அனைவரும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி அங்கு செல்லவில்லை என்பது அவர் ராமரை வெறுக்கிறாரா, அல்லது கடவுளை வெறுக்கிறாரா அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெயில் கொளுத்தி வருவதால் வனத்தில் ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • எஸ்டேட் தொழிலாளர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இதனால் நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    மேலும் வனப்பகுதியில் உள்ள நீருற்றுகளிலும் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் வனத்தில் உள்ள மரங்கள் செடி, கொடிகள் காய்ந்து வருகிறது.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. வெயில் கொளுத்தி வருவதால் வனத்தில் ஆங்காங்கே காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் மற்றும் வேவரலி எஸ்டேட் பகுதிகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் எஸ்டேட் தொழிலாளர்களும் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிந்து உள்ளதாகவும், வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    வனப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், வனபத்ர காளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்ட பாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்துள்ளதாகவும், அதனை அறங்காவலர் வசந்தா சம்பத் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாகவும், அதனால் சம்பந்தப்பட்ட 5 பேர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனையடுத்து கோர்ட்டு அறிவுறுத்தலின்படி மேட்டுப்பாளையம் போலீசார் வனபத்ரகாளியம்மன் பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 3-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் விசாரணையில் வனபத்ரகாளியம்மன் கோவில் பூசாரிகள் ரகுபதி, தண்டபாணி, விஷ்ணுகுமார், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் கைது செய்யப்பட்ட கோவில் பூசாரி ரகுபதி பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத்தின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவம் தொட ர்பாக பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் கோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செலுத்திய தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரத்தில் 4 பூசாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
    • காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    கவுண்டம்பாளையம்:

    கோவையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. சில நாட்களாக கோவையில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

    கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகள், வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள டிரம்களில் உள்ள தண்ணீரையும், அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வருகிறது.

    வனவிலங்குகளின் தாகத்தை போக்குவதற்காக வனத்துறை சார்பில் வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் தாகத்திற்காக தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளனர்.

    அந்த தொட்டிகளில் எப்போதும் தண்ணீரை ஊர் பொதுமக்கள் நிரப்பி வைத்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அந்த தொட்டியில் தண்ணீரை குடித்து விட்டு சென்று வருகின்றன.

    நேற்று மாலை குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    அந்த யானைகள் ஊர் எல்லையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஆனந்தத்துடன் அதனை நோக்கி ஓடி வந்தன. பின்னர் யானைகள் தண்ணீரை குடித்ததுடன், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்து கொண்டது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.

    மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×