search icon
என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல் ஆனது.
    • மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது.

    ஜிஎஸ்டி குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தொடர்பாக கோவை எம்.பி. காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், "உணவக உரிமையாளர் சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். யாரும் கேள்வி கேட்க கூடாது என்றால், எதற்காக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், யார் என்ன சாப்பிடுகிறார்கள் என தெரியாதா?"

    "மன்னிப்பு வீடியோவிற்கு பின் பெரிய கூட்டமே உள்ளது. உணவக உரிமையாளர் சீனிவாசனை கேவலப்படுத்துவது, கோவை மக்களை கேவலப்படுத்துவதற்கு சமம்" என்று தெரிவித்துள்ளார்.

    • யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.
    • வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் நரசீபுரம், ஓணாப்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதமாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    குடியிருப்புக்குள்புகும் யானை, வீடுகளை சேதப்படுத்துவது, தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, மக்களை தாக்குவது என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அருகே அட்டுக்கல் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 7 மணிக்கு அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள புளியந்தோப்பு என்ற பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை யானை, தேவராஜை தாக்கி தூக்கி வீசியது. மேலும் காலால் மிதித்தும் கொன்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சத்தம் கேட்டு, மக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை பார்வையிட்டு, அந்த பகுதியில் யானை நடமாட்டத்தையும் கண்காணித்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார்.
    • மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார்.

    கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பட்டாளர் சுந்தரராஜன், கேரள காங்கிரசார் மற்றும் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க. எம்.எல்ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சனையில் ஈடுபட்டதோ இல்லை.

    * மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.

    * ஓட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் தாமாக முன் வந்து மன்னிப்புக்கேட்டார்.

    * தான் பேசியதை இணையத்தில் வேறுமாதிரி பரவிடுச்சி. நான் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர் என்று சொல்லி குடும்பத்தை பற்றி எல்லாம் பேசினார்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். 

    • நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.
    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

    இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

    சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், மேட்டுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

    இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழப்புகளால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    இதனால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு கேரள வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து நேந்திரன் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக ஓணம் பண்டிகை காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் தேங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.55 வரை விலை போகும்நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை கிடைக்கிறது என்றனர்.

    • Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி..
    • நான் எந்த யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை என நிர்மலா சீதாராமன் விளக்கம்

    கோவை:

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

    அவரின் வீடியோ வைரலான நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிர்மலா சீதாராமன் இதுகுறித்து விளக்கமளித்தார்.

    அப்போது பேசிய அவர், "பன்னுக்கு வரி இல்லை. அதில் க்ரீம் போட்டுக் கொடுத்தால் வரி வேறு விதமாக இருக்கிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது என மிகவும் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். இதை கேட்பவர்களுக்கு 'ஆஹா' என்பது போல இருக்கும். அதில் தவறு ஒன்றுமில்லை. அவரின் பாணியில் அவர் பேசியிருக்கிறார்.

    அவர் இதை ஜனரஞ்சகமாக பேசியதால், ஜிஎஸ்டிக்கு பரம விரோதியாக இருப்போருக்கு அது ஆதாயமாக தெரியும். 'பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுட்டாரு. எல்லாரும் சிரிக்கறாங்க. அந்த அம்மாவுக்கு விசயம் தெரியுமா.' என்று சொல்வார்கள். நான் எந்த யாருடைய விமர்சனத்துக்கும் கவலைப்படுவதாய் இல்லை.

    ஜிஎஸ்டியை எளிதாய், மக்களுக்கு சுமை இல்லாமல் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம். கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழ்நாட்டு அமைச்சரும் உறுப்பினராக உள்ளார். இந்த 7 ஆண்டுகளிலும், எந்த ஒரு முடிவும் யாரின் எதிர்ப்பை மீறி எடுக்கவில்லை. எல்லோரும் சேர்ந்துதான் முடிவு எடுப்போம். யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. நான் எதையும் முடிவு செய்யவில்லை. சமீபத்தில் கூட, மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. உண்மையில் ஜிஎஸ்டிக்கு முன்பே மருத்துவ காப்பீட்டுக்கு வரி இருந்தது. அதை இப்போது குறைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • வழக்கமான ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    பேரூர்:

    கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் அனைத்து மக்களாலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஓணம் பண்டிகையில் மிக முக்கியமாக இடம் பெறுவது பூக்கள் தான். 10 நாட்களும் மகாபலி மன்னனை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலமிடுவது வழக்கம்.

    இதனையொட்டி விழா தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே கேரளாவில் மலர்கள் விற்பனை சூடுபிடித்து விடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    குறிப்பாக கேரளாவின் அருகே உள்ள தமிழக மாவட்டமான கோவையில் இருந்து தான் அதிகளவில் பூக்கள் விற்பனைக்கு செல்கின்றன. ஓணம் பண்டிகைக்காகவே, பிரத்யேகமாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டார பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, அறுவை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கேரளாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவையில் பூக்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஓணம் விழாவுக்கு அவர்கள் வாங்கி செல்வார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளுக்கும், அந்த 10 நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஓணம் பண்டிகை வந்தால் சில நாட்களுக்கு முன்பிருந்தே கேரளா மாநிலம் முழுவதும் விழா களைகட்ட தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்படுகிறது.

    இதற்கு முக்கிய காரணம் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு தான். இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.

    இப்படி மக்கள் இன்னல்களில் தவிப்பதால் கேரள அரசு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அரசால் கொண்டாடப்படாது என அறிவித்து விட்டது. இதனால் அரசு கல்லூரிகள், அரசு சம்பந்தமான அலுவலகங்களில் நடைபெறும் அனைத்து ஓணம் விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

    தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும், தாங்களும் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்து விட்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவில் ஓணம் பண்டிகையை அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடுகிறார்கள். இதனால் வழக்கமான ஆட்டம்பாட்டத்துடன் களைகட்டக் கூடிய ஓணம் பண்டிகை தற்போது களையிழந்து விட்டது.

    கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களையிழந்ததால், இந்த விழாவை நம்பி மலர்களை பயிரிட்டிருந்த தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குறிப்பாக தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வடிவேலம்பாளையம், மோளபாளையம், மங்கலபாளையம், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து, அதிகளவில் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டிருந்தனர். பூக்களும் பூத்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை களையிழந்ததால், அங்கு இருந்து எந்தவித ஆர்டர்களும் கோவைக்கு வரவில்லை. இதனால் விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்க வியாபாரிகளும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். அவை செடியிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் பூக்களை பறித்து தோட்டத்தின் ஓரத்தில் கொட்டி செல்கிறார்கள்.

    இந்த பகுதிகளில் உள்ள தோட்டங்களையொட்டி சாலையோரங்கள் மற்றும் வயல்வெளி ஓரங்களில் அதிகளவில் பூக்கள் கொட்டி கிடப்பதையும், அவற்றை கால்நடைகள் உண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.

    ஓணம் பண்டிகை வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் அந்த 10 முதல் 12 நாட்களும் மலர் விற்பனை அமோகமாக இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு எங்களிடம் இருந்து பூக்களை வாங்கி செல்வார்கள். பூக்களுக்கும் நல்ல விலை இருக்கும். இதனால் விற்பனை சூடுபிடித்து, விலையும் கிடைத்து வருவதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.

    ஆனால் இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் களையிழந்ததால், வழக்கமாக பூக்களை ஆர்டர் செய்பவர்களில் சிலர் மட்டுமே ஆர்டர் கொடுக்கிறார்கள்.

    குறிப்பாக வாடாமல்லி பூக்களுக்கு அதிகளவில் வரவேற்பு இருக்கும். தற்போது 150 ஏக்கர் பரப்பளவில் வாடமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு வகையான மலர்களை பயிரிட்டு, 6 மாதமாக விவசாயிகள் அதனை பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது விற்பனை இல்லாதது அவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக 25 டன் பூக்கள் இங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 5 டன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. ஆர்டர்கள் வராததால் வியாபாரிகளாகிய நாங்களும், இதனை நம்பி தொழில் செய்து வந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    விவசாயிகள் கூறும்போது, ஓணம் பண்டிகை வந்தால் செண்டுமல்லி, கோழிகொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட பூக்கள் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகும். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் செண்டு மல்லி ரூ.20 முதல் ரூ.40க்கும், கோழிகொண்டை ரூ.50க்கும், வாடாமல்லி ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது என்றனர்.

    • முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர்.
    • ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    இதையடுத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கிகளை நாங்கள் திறக்க உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் மித்ரா பூங்கா விருதுநகரில் தொடங்கப்பட்டிருக்கிறது. 2028-க்குள் இந்த பூங்கா மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். 

    • தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மதுவை ஒழிக்க வலியுறுத்தி பா.ஜ.க பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மாநாடுகளை நடத்தி உள்ளது. கோவையில் கூட டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

    திருமாவளனுக்கு தி.மு.க. கூட்டணியில் என்ன பிரச்சனை? என்று தெரியவில்லை. வேங்கைவயல் சம்பவம் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல், குறிப்பாக மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமாவளவன் தனது கட்சி சார்பில் நடக்கும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இப்படி அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் தான் ஒரு புதிய அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவோ அல்லது தி.மு.கவுக்கு இந்த மாநாட்டின் மூலம் ஏதோ சொல்ல வருகிறார் என்று தான் நினைக்கிறேன்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் என்பது தமிழகத்திற்கு நல்லது கொடுத்தால் அதனை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம். கொங்கு மண்டல வளர்ச்சிக்கு பா.ஜ.கவும், மத்திய அரசும் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது. கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

    தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. தற்போது பா.ஜ.கவில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்களும், பெண்களும் பா.ஜ.கவில் அதிகளவில் சேர்ந்து வருகிறார்கள்.

    கார் பந்தயத்தை மாநில அரசு ஊக்கப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பாடுத்தாத வகையில் அது அமைய வேண்டும். கோவைக்கு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் அதனை வரவேற்போம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தற்போது வந்த விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.

    வாக்குவங்கிக்காக ஒரு மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது, இன்னொரு மதத்திற்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது. இதுதான் சமூகநீதியா. ஒரு மாநில முதல்வர் என்பவர் மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.

    ராகுல்காந்தி இந்தியாவில் இருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும் ஏதாவது சம்பந்தமில்லாமல் தான் பேசி கொண்டிருப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
    • தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய மந்திரி எல்.முருகன் முகாம் அலுவலகம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த அலுவலகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

    இந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

     

    இதேபோல மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கிவைத்தார். இதையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் 6 கொலைகள் நடக்கும் அளவுக்கு மிக மோசமான நிலை தமிழகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் வீதி வீதியாக டாஸ்மாக் கடை திறந்து மக்களை தி.மு.க. அரசு மதுவுக்கு அடிமையாக்கி வருகிறது.

    ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது எதற்காக நடந்தது என்று தமிழக அரசுக்கே தெரியாது. ஆன்மீகம் என்றாலே தி.மு.க. அரசு கைது நடவடிக்கை மேற்கொள்கிறது.

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகள் வைக்க தி.மு.க. அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. அதனையும் தாண்டி இன்று மக்கள் எழுச்சியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. தமிழகம் ஒரு ஆன்மீக பூமி அதனை தி.கவும், தி.மு.க.வும் அழிக்க நினைத்தால் அது முடியாது. இன்றைக்கு தமிழக அரசு இந்துக்களுக்கு விரோத அரசாக உள்ளது.

    தமிழக முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் மக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது இல்லை. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இவரும் இந்துக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.

    ஒரே நாடு, ஒரே சட்டம் அமலுக்கு வந்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பின் அயோத்தியில் ராமர் கோவிலை பா.ஜ.க. அரசு கட்டி முடித்துள்ளது. 2026-ல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.சி பள்ளி தாளாளர் சோமசுந்தரம், பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என்.எஸ்.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
    • 9,526 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    கோவை:

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் 44-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

    விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வரவேற்றார்.

    விழாவில் மத்திய பயிர் ரகங்கள், உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திலோச்சன் மொஹபத்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

    இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் இளம் அறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மொத்தம் 9,526 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும், உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 6,111 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களை பெற்றனர். விழாவில் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் துணை வேந்தரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

    • உடுமலை, பழனி, கணியூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.
    • பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி செடிகளை பெருமளவில் பயிரிட்டு இருந்தனர். அங்கு தற்போது பழங்கள் நன்கு கனிந்து விளைச்சலுக்கு தயாராகி உள்ளது.

    தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடைப்பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி காய்கறி சந்தைகளுக்கு தக்காளி வரத்து பெருமளவில் அதிகரித்து வருகிறது.

    மேலும் உடுமலை, பழனி, கணியூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.

    பொள்ளாச்சி பகுதிகளில் கூடுதல் விளைச்சல் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் தக்காளி விலை தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

    மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.12 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் காய்கறி மார்க்கெட்டுகளில் பெட்டி-பெட்டியாக வந்திறங்கும் அதிகப்படியான தக்காளி வரத்தால் அங்கு தற்போது பழங்களின் விற்பனையில் தேக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகாத தக்காளிகளை விவசாயிகளில் பலர் கால்நடைகளுக்கு உணவாக போட்டு செல்கின்றனர். எனவே காய்கறி மார்க்கெட் சாலையோர பகுதிகளில் தக்காளிப்பழங்கள் குவிந்து கிடக்கிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மார்க்கெட்டுகளில் தக்காளி விலை மிகவும் குறைவால் எங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் அழுகும் பொருட்கள் என்பதால் தக்காளிகளை குப்பையில் கொட்டிவிட்டு செல்கிறோம் என்று விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர். 

    • விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

    அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டும், 40 கிலோ சந்தனத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதலே புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதாமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.

    கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், உப்பிலிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதுதவிர கோவை மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பேரூர், அன்னூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் இருசக்கர ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    ×