search icon
என் மலர்tooltip icon

    ஈரோடு

    • குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனை

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு தொடங்கப்பட்டது. 15 ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    பவானி அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலின் போது தன்னார்வ அமைப்பு நிறுவனங்கள் புற்றுநோய் தாக்கம் குறித்து கோரிக்கை வைத்தார்கள்.

    ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்ப தால் புற்றுநோய் கண்டறியும் சோதனை கண்டறிய அழைப்பு விடுத்தது. இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

    13 ஆயிரத்து 89 பேருக்கு சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்து 39 பேர் சோதனை மேற்கொண்டதில் 50 பேருக்கு புற்று நோய் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறியப்படி 14 இடங்களில் கட்டண படுக்கை அறை திறந்து வைக்க உள்ளோம். இதில் குளிர்சாதன வசதி, கழிவறை, டி.வி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்ட த்திற்கு எதிராக எடுக்க ப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32 ஆயிரத்து 404 கடைகளில் குட்கா பொருட்கள் இரு ப்பது கண்டறியப்பட்டது.

    அந்த கடைகளில் இருந்து ரூ.20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 468 ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 86 ஆயிரத்து 681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதை பொரு ட்களை விற்பனை செய்ததாக 17 ஆயிரத்து 481 கடை களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வணிக கடைகள் சீல் வைக்கப்படுவது வருத்தமளிப்பத்தாக இருந்தாலும், சிறிய லாபம் தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்த்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முழுவதுமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் போதை பொட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பாலிஸ்டர் நூல் கொண்டு தற்போது நடை முறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாது.
    • பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்படும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் நடப்பாண்டு சேலை உற்பத்திக்கான காட்டன் பாவு நூலுக்கு பதில், பாலிஸ்டர் நூல் தருவதாக அறிவித்துள்ளனர். பாலிஸ்டர் நூல் கொண்டு தற்போது நடை முறையில் உள்ள 'சைசிங்' மூலம் பாவு ஓட்ட இயலாது. கைப்பாவில் மட்டும் குறைந்த அளவு பாவு ஓட்ட முடியும்.

    அனைத்து விசைத்தறிகளுக்கும் முழுமையாக பாவு நூல் வழங்க இயலாமல், விசைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். உரிய நேரத்தில் உற்பத்தி செய்து, பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழல் ஏற்படும்.

    வெளி மாநிலங்களில் சேலையை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்பட்டு, நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இதனால் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தியும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    மேலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன்சத்திரம், திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி, தோக்கவாடி, ராஜகவுண்டம்பாளையம், சூரியம்பாளையம், சடையம்புதூர், கொல்லப்பட்டி, நெசவாளர் காலனி, வெப்படை, பள்ளிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
    • எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியை சுற்றிலும் ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. அதேபோல் நீலகிரி மாவட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதியை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெ க்டர் ராம் பிரபு தலைமையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கர்நாடகா மற்றும் நீலகிரி எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தடுப்பு போலீசார், சிறப்பு இலக்கு படை போலீசார் (எஸ்.டி.எப்), வனத்துறையினருடன் இணைந்து எத்திகட்டி மலை, கல்வீரன் கோவில் மற்றும் கொங்கள்ளி வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம், சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் முக்கியமாக கேரளா வயநாடு நிலச்சரிவு காரணமாக, அங்கு காட்டுக்குள் நடமாடிக்கொண்டு இருந்த மாவோயிஸ்ட்கள் தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் முகாமிடாதபடி மாவோயிஸ்ட் தடுப்பு காவலர்கள், சிறப்பு இலக்கு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து பர்கூர், கடம்பூர், பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி ஆகிய மலை எல்லையோர கிராமங்களிலும் வனப்பகுதியில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கர்நாடக மற்றும் நீலகிரி எல்லை ஒட்டி உள்ள வனப்பகுதிகளில் ரோந்து செல்கின்றனர்.

    மேலும் மலைகிராம மக்களிடம் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்தும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். 

    • முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
    • நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானி சாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேபோல் பில்லூர் அணையிலிருந்தும் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரை விட அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாலும் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இதனால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 126 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 94.93 அடியாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேலும் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 150 கன அடியும் என மொத்தம் 1,055 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.03 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 25.07 அடியாக உயர்ந்து உள்ளது. ஈரோடு மாவட்ட முக்கிய அணைகளின் நீர்ம ட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும்.
    • பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, டி.ஆர்.ஓ சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு -அவிநாசி திட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அத்திகடவு-அவிநாசி திட்டம் மிகப்பெரிய திட்டம். இந்த திட்டத்தை முடிக்க அதிகாரிகள் இரவு பகலாக வேலை செய்துள்ளனர். கலெக்டர் வார வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது இந்த திட்டத்தை வேகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதே நேரத்தில் 6 பம்பிங் நிலையங்களில் முதல் 3 நீரேற்று நிலையங்களுக்கு இடையே உள்ள நிலம் பயன்பாட்டிற்கு எடுப்பதில் தொய்வு ஏற்பட்டு பணிகள் நடைபெறவில்லை.

    இந்த பகுதிகளில் நிலம் கையகப்படுத்த 3 பம்பிங் நிலையங்களுக்கு இடையே உள்ள நிலங்களை கையகப்படுத்த அரசின் சார்பில் நேரடியாக விவசாயிகளிடம் பேசி விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று பேசி நிலத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெற்றோம். திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தி.மு.க. அரசு தான் காரணம்.

    விவசாயிகளிடம் நிலத்தை பெற்ற பிறகு தண்ணீர் பற்றாக்குறையால் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. பீடர் லைன் மூலம் 1045 குளங்கள் நிரப்பப்பட வேண்டும். அதை பயன்படுத்தாமல் இருந்ததால் தயார்படுத்த காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆட்சியில் முதலிலேயே நிலத்தை விவசாயிகளிடம் பெற்றிருந்தால் இத்தனை பிரச்சனை ஏற்பட்டு இருக்காது.

    பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக தண்ணீர் வரும் போது திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும். முதல் கட்டத்திலேயே விவசாயிகளிடம் பேசி நிலம் எடுத்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காது.

    1416 விவசாயிகளின் நிலத்தை இந்தத் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளோம். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்திற்கான தொகை வழங்க வேண்டிய உள்ளது. அவர்களிடமும் பேசிவிட்டோம் அந்தப் பணியும் விரைவில் முடிந்துவிடும்.

    தண்ணீர் திறப்பதற்கு முன்பாக இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும். தற்பொழுது போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்ட பிறகு உபரி நீரை கொண்டு அத்திகடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேதி நிர்ணயம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாமலை அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில் அரசியல் செய்கிறாரா என்ற கேள்விக்கு, பதில் அளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துக்கள் நியாயமானது தான். அவர் விவரம் தெரியாமல் கூட பேசி இருக்கலாம். திட்டம் தாமதத்திற்கான காரணத்தை கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

    • தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
    • தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் போலீசார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வரு கிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்துக்கு 1500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.

    இதனால் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் விடு முறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை யொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

    மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கொடிவேரியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது பற்றி தெரியாமல் பல்வேறு பகதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இரு சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். கொடிவேரியில் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து மக்கள் அணைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தியாகத்தின் திருஉருவமாய் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு காங்கிரஸ் சார்பில் வீரவணக்கத்தை செலுத்தி உள்ளோம். பிரிட்டிஷ்காரர்களை விரட்டி அடித்த பெருமை தீரன் சின்னமலைக்கு உண்டு. ஆனாலும் பிரிட்டிஷ்காரர்களால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வேங்கை, தீப்பொறி இந்த மண்ணிலிருந்து பிறந்தது. இது போன்ற தலைவர்கள் வாங்கி கொடுத்த இந்த சுதந்திரத்தை இன்று கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச சக்திகள். சுதந்திரத்துக்காகவும், இந்த மண்ணுக்காகவும் போராடியவர் தீரன் சின்னமலை. அவரை எப்படி பிரிட்டிஷ்காரர்கள் பலி வாங்கினார்களோ அதே போல் பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தை எதிர்த்தவர்களையும் அவர்கள் பலி வாங்கினர். அவரைப் போன்று இப்பவும் சுதந்திரத்துக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். அவர் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான வழக்குகள் போடப்படும் நிலை இந்த மண்ணில் நிகழ்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது. போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும். பா.ஜ.க அரசிடம் தான் ராணுவ அமைப்பு, விமானம், கடற்படை, பிரிவு என பல்வேறு அமைப்புகள் இருக்கு. அவர்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. குஜராத் தான் போதை பிறப்பிடம் என்று சொல்கிறார்கள். அங்கிருந்துதான் தமிழ்நாடு பல்வேறு இடங்களுக்கு செல்கிறது என்று சொல்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் எங்கு ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். குஜராத்தில் ஒரு தொழிற்சாலையில் பிடித்திருக்கிறார்கள். அங்கு கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருட்கள் வராது என ஆய்வாளர்கள் கட்டுரை எழுதி உள்ளனர்.

    அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்து செல்வப்பெருத்தகை கூறும் போது, நாங்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. கொலை வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிறது. பத்தாண்டுகள் ஆகிறது யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அப்போது அவங்க ஆட்சி தானே நடந்தது.

    கொலை வழக்கில் கண்டபடி யாரையும் பிடித்து சிறையில் அடைக்க முடியாது. தீவிர புலன் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது எங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆகட்டும் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி அன்பு என்னிடம் எல்லா விவரத்தையும் கூறியுள்ளார். ஏறக்குறைய குற்றவாளி அருகே நெருங்கி விட்டார்கள். கொலை வழக்குகளை எடுத்தும் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது. புலன் விசாரணை அடிப்படையில் உண்மையான குற்றவாளியை வெளியே கொண்டு வர வேண்டும்.

    விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். தி.மு.க.வுடன் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது நாங்கள் யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது. தி.மு.க. தலைமையில் இந்திய கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம் ஆகட்டும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகட்டும், நான் ஆகட்டும் கூட்டணி குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

    அதேபோல் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொள்வதும், ஆடி 18 அன்று தம்பதியர் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் காவிரி தாயை வழிபாடு மேற்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உபரி நீராக அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பவானி கூடுதுறை இரட்டை விநாயகர் சன்னதியின் மேல் படிக்கட்டு முதல் தண்ணீர் தொட்டு செல்கிறது. இதனால் கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மூலம் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தகர செட் அமைத்து அடைக்கப்பட்டு பாதுகாப்பு செய்து உள்ளனர். அதேபோல் ஆண், பெண் என பக்தர்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் 2 இடங்களில் சமர்பாத் அமைத்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொட்டிகள் அமைத்து குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் திதி, மற்றும் தர்ப்பணம் கொடுக்க பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக ஷவர் பாத் மற்றும் தொட்டிகளில் நிரப்பட்ட தண்ணீர்களில் புனித நீராடினர். புதுமண தம்பதிகள் பலர் வந்து ஷவர்களில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மனை வழிபட்டனர்.

     

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பலர் கன்னிமார் பூஜை செய்தனர்.

    இதே போல் அம்மாபேட்டை காவிரி கரை பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அம்மாபேட்டை சொக்கநாதன் கோவில் காவிரி கரை படித்துறை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், காட்டூர், நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    அதில் பக்தர்கள் பலர் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் பலர் ஷவர்களில் குளித்து விட்டு சொக்கநாதரை வழிபட்டனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். ஆனால் அங்கு பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் காவிரி தாய் வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    மேலும் இந்த பகுதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் மக்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் பொதுமக்கள் கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் பக்தர்கள் பலர் தடையை மீறி புனித நீராடி காவிரி தாய் வழிபாடு நடத்தினர். பொதுமக்கள் பலர் காளிங்கராயன் வாய்க்காலில் திதி, தர்ப்பணமும் கொடுத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கவில்லை. ஆனால் பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பக்தர்கள் பலர் கொடுமுடிக்கு வந்து மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களில் செலுத்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.ஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி கூட்டணி ஒத்துழைப்போடு அமைத்த சூழலில் கூட பாராளுமன்ற கூட்டத்தில் வரம்பு மீறி பேசுகிறார்கள். மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தி பார்த்து சாதி பற்றி பேசுவது அநாகரிகமான செயல். மட்டமான பேச்சை மத்திய அமைச்சர்களுக்கு சொல்லிக் கொடுத்தது பிரதமர் நரேந்திர மோடி தான்.

    மத்திய அமைச்சர்கள் அவதூறாக பேச வேண்டும் என தூண்டி விடுவதால் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். ஆனால் ராகுல் காந்தி பெரும் தன்மையாக தனது பேச்சில் கண்ணியத்தை கடைப்பிடித்து உள்ளார். மோடியின் சர்வாதிகார தன்மை நீண்ட நாளுக்கு நீடிக்காது.

    நீடித்தால் வன்முறையுடன் அல்லது வன்முறை இல்லாமல் மோடி வீழ்த்தப்படுவார். ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் அவரை துரத்தி விடுவார்கள். அது காந்தி வழியா, நேதாஜி வழியா என்று தெரியவில்லை. புதிய சட்டத்தின் பெயர்கள் இந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றி இருக்கிறார்கள். இதற்கு நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் நீதிபதிகள் சட்டத்தை பெயர் மாற்றத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் ராகுல் காந்தி தான் காரணம் என்று மத்திய அரசு சொல்கிறது.

    கடவுளின் அவதாரம் என்று சொல்லும் மோடி இயற்கை பேரிடர் வரும் முன்பு நடவடிக்கை எடுக்கவில்லை. ராமர் கோவில் மீது செலுத்திய கவனத்தை மோடி மலை பிரதேசங்களில் செலுத்த வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மக்கள் பயனடையும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவரிடம் பிரதமர் மோடி திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து டியூஷன் எடுக்க வேண்டும்.

    கார்த்தி சிதம்பரம் கட்சி வளர்ச்சி குறித்து பேசியதாக சொன்னார். மோடி நல்ல தலைவர் என்று சொன்னது கட்சி வளர்ச்சியா? நான் கார்த்தி சிதம்பரம் திருந்துவாறு என்று நினைத்தேன். காங்கிரஸ் கூட்டத்தில் இதுபோன்ற தகவல்கள் வந்ததால் சிறிது நாள் கழித்து கருத்து சொன்னேன். கள் பருகுவதால் உடல்நலம் பாதிப்பு ஏற்படாது. கள்ளுக்கடை திறந்தால் கள்ளச்சாராயம் விற்பனை குறையும்.

    கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும். கவர்னர் இமயமலைக்கு சென்று தியானம் செய்வதை விட்டு தமிழகத்தில் ஏன் கவர்னராக மத்திய அரசு போட்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மத்திய அரசு ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கு 10 ஆண்டுகளாக ஆட்சி எதுவும் செய்யாமல் தற்போது ஏன் நிதியை அதிகமாக ஒதுக்கீடு செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
    • வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தடை.

    காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    பவானி. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில். கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம், அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோயில், நஞ்சைகாளமங்கலம், அருள்மிகு மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், ஊஞ்சலூர், அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் காவிரி ஆற்றங்காரையின் அருகே உள்ள சிறிய திருக்கோயிலுக்கு வரும் பக்கதர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், எதிர்வரும் 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஆண்டுதோறும் ஆடி 18-ந்தேதி மட்டும் பொதுமக்கள் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நாளில் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து பவானிசாகர் அணை மீது சென்று அணை நீர்த்தேக்க பகுதியை பார்வையிடுவார்கள். மற்ற நாட்களில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

    இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அணையின் மேல் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு வரும் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நிச்சயமாக பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டும் பவானிசாகர் அணை மேல் பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு நாளில் பவானிசாகர் பூங்கா வழக்கம் போல் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து பவானிசாகர் அணை உதவி பொறியாளர் தமிழ் பாரத் கூறும்போது, பவானிசாகர் அணை நீர்மட்டம் தற்போது 91 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே இந்த ஆண்டும் பவானிசாகர் அணையின் நீர் தேக்கப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    தற்போது பவானிசாகர் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    • வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம்.
    • மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் பிரபலமான ஈரோடு ஜவுளி வாரச்சந்தை திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடந்து வருகிறது. இரவு முழுவதும் விடிய விடிய நடைபெறும் இந்த வாரச் சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் வருகின்றனர்.

    இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் அதிக அளவில் வந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

    கனி மார்க்கெட் வளாகத்தில் ஜவுளி வாரச்சந்தை நடந்து வந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.

    இந்நிலையில் ஜவுளி வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறிப்பாக தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு முன் ஜவுளி வாரச்சந்தை அமைக்க வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷிடம் ஜவுளி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து ஜவுளி வாரச்சந்தை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை 60 ஆண்டுகளாக நமது அடையாளமாக இருந்து வருகிறது. இதன் மூலம் 720 வியாபாரிகள் பயன் பெற்று வந்தனர். 2018-ல் கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்கிய போது வாரச்சந்தை வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியது. வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் கனி மார்க்கெட் வணிக வளாக காலி இடத்தில் மீண்டும் வாரச் ச்சந்தை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தனர்.

    ஆனால் இதுவரை வாரச் சந்தை அமைக்கப்பட வில்லை. தற்போது காந்திஜி சாலை மற்றும் அசோகபுரத்தில் தனியார் இடத்தில் செயல்பட்டு வரும் வாரச் சந்தையால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக தனியாருக்கு அதிக வாடகை செலுத்த வேண்டியுள்ளது. போதிய அளவில் வியாபாரமும் நடப்பதில்லை.

    எனவே மாநகரத்தின் மையப் பகுதியான கனி மார்க்கெட்டில் மீண்டும் வாரச்சந்தை அமைக்கப்பட்டால் அதை நம்பியுள்ள 720 வியாபாரிகளும் பயன்பெறுவர். இதன் மூலம் மாநகராட்சிக்கும் உரிய வருவாய் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×