search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கடுமையான வெயில் நிலவி வருவதால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • 60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும்.

    இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது மழை இல்லாத காரணத்தால் வனத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. கடும் வறட்சி நிலவுவதால் வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் என அனைத்திலும் இலைகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

    கடுமையான வெயில் நிலவி வருவதால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் தண்ணீரை கொண்டு அணைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள சீகூர் முதல் பெள்ளிமலை வரை உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

    100 ஏக்கருக்கும் மேல் காட்டுத்தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    இதேபோல் பெந்தட்டி வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீ முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே கல்லஸ்கொம்பை வனப்பகுதிக்கு பரவி அங்கு தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. 60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சரிவான அந்த பகுதியில் புற்கள் காய்ந்து இருப்பதால் வனத்தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன.
    • இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வந்த வண்ணம் இருப்பார்கள். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வெயிலில் இருந்து தப்பிக்க இதமாக சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சில தினங்களில் நீலகிரியில் கோடைவிழாவும் தொடங்க உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதுமே நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதையும் காண முடியும். இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கொரோனா காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்ததை போன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் என்னென்ன மாதிரியான நடைமுறைகளை கொண்டு வருவது என வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விரைவில் இ-பாஸ் நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதேபோல் இ-பாஸ் பெறுவதற்காக என்று தனியாக இணைய தளமும் தொடங்கப்பட்டும், அதுவும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    ஊட்டிக்கு செல்வோர் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற நடைமுறையானது உள்ளூர் மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். கோடை சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இங்குள்ள அனைத்து சாலைகளிலுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் பொதுமக்களாகிய நாங்கள் அவரச தேவைக்கு எங்காவது புறப்பட்டால் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் வாகனங்கள் அதிகளவில் வருவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையானது இங்குள்ள இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    தற்போது ஐகோர்ட்டு அறிவித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் நீலகிரிக்குள் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பது தெரியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    உள்ளூர் பொதுமக்கள் இ-பாஸ் நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலாவை நம்பிதான் ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தால் தான் இவர்களுக்கு வியாபாரம் இருக்கும். இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் நிலை உள்ளதாலும், அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரத்தில் அரசு, வியாபாரிகள் கருத்தையும் நலனில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டங்களை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர்.
    • தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.

    ஊட்டி:

    கோடை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் தற்போது வறண்டு காணப்படுகிறது. அங்கு பச்சைப்பசேல் பசுமையை பார்ப்பது அரிதாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கட்டிடம் கட்டுமான பணிகள் காரணமாக அங்குள்ள 4 பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கும்கி யானைகள் மாயார் ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.

    மேலும் அவை ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி உடல் முழுவதும் வாரி இறைத்து உற்சாக குளியல் போட்டன. முதுமலை மாயார் ஆற்றுக்கு பாகனை சுமந்து வந்த யானை, ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போடுவது தொடர்பாக வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
    • நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் உக்கிரம் இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான காலநிலை நிலவக்கூடிய மலைபிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை நோக்கி செல்கின்றனர்.

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதி வந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பம், குடும்பமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை 39 ஆயிரத்து 23 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 23 ஆயிரத்து 78 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளது. இதேபோல் காட்டேரி பூங்காவுக்கு 1,011 பேரும், தேயிலை பூங்காவுக்கு 1,100 பேரும், ரோஜா பூங்காவுக்கு 8 ஆயிரத்து 868 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 4 ஆயிரத்து 680 பேரும், மரவியல் பூங்காவுக்கு 286 பேரும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். 

    • தமிழகம் முழுக்க இன்று 14 இடங்களில் வெயில் சதமடித்தது.
    • சென்னையில் இன்று 101 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் கத்திரி வெயில் துவங்காத நிலையில், வாட்டி வதைக்கும் வெப்பத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுக்க இன்று (ஏப்ரல் 28) 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107 டிகிரியும், சென்னையில் 101 டிகிரியும் பதிவாகியுள்ளது.

    மலை மாவட்டமும், சுற்றலா தளமுமான ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது. இன்று (ஏப்ரல் 28) உதகையில் வெப்பம் 29 செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 5.4 டிகிரி செல்ஷியஸ் அதிகம் ஆகும். 

    • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்
    • மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தற்போது மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே மே 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன
    • இந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

    இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.

    காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பாக நீலகிரி ஆட்சியர் அருணா விளக்கம் அளித்துள்ளார். அதில்,

    "அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்துவிட்டன. மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்கள் 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படவில்லை. அந்த குறிப்பிட்ட 20 நிமிடங்களுக்கு எந்தவித கண்காணிப்பு கேமரா பதிவுகளும் இல்லை. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கூலர்ஸ் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

    இன்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட வருகின்றனர். எனவே பாதுகாப்பு குறைபாடுக்கு 200 சதவீதம் வாய்ப்பு இல்லை. மேலும் எதிர்காலத்தில் இதுபோல் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ள தனியாருக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
    • தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம்.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை அனல் வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசன் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்திருந்து அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் மலர்ச்செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு இரண்டரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும் பணி முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தையும் காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி அங்கும் குவிந்து வருகிறார்கள். கட்டணம் செலுத்தும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பு நிறைந்த தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வர். அந்த வாகனம் வனப்பகுதியை சுற்றி வரும். அப்போது யானை, மான், புலி என ஏராளமான வனவிலங்குகள் காட்டில் சுற்றித்திரிவதை நேரில் பார்க்கலாம்.

    அதேபோல தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் சென்று சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறும். இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முதுமலை முகாம் மற்றும் தெப்பக்காடு முகாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    • நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன
    • இந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

    இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.

    காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.
    • காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிலுக்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகள்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த சில வாரங்களாக கோடை அனல் வெயில் கொளுத்தி வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தோட்டங்களில் பயிரிட்டு உள்ள விளைபொருட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி மண்டிகளுக்கு காய்கறி வரத்து மிகவும் குறைந்து வருகிறது.

    இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து மட்டுமே காய்கறிகள் வரத்து இருப்பதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200, அவரை-ரூ.180, கேரட்-ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.80, முருங்கைக்காய் ரூ.200, ப்ரக்கோலி ரூ.240 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறி மண்டிகளில் விற்கப்படும் அனைத்து வகை காய்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.


    இனிவரும் நாட்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வெயில் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். நீலகிரி மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து உள்ளதால், கவலை அடைந்து உள்ள இல்லத்தரசிகள், தமிழக அரசு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு அருகே உள்ள ஈளாடா கிராமத்தில் 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 9 முதல் 12 அடி ஆழமும் கொண்ட ஈளாடா தடுப்பணை உள்ளது.

    மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுக்களில் வரும் தண்ணீர் இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலுள்ள தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, நகரின் முக்கிய பகுதிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை நம்பி, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களும் பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக கொடநாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இயற்கை ஊற்றுகள் காய்ந்து வறண்டு காணப்படுகிறது.

    இதனால் ஈளாடா அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணையில் தண்ணீர் குறைந்துள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், அணையில் தண்ணீர் குறைவதாலும் ஈளாடா, கோத்தகிரி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இப்போதே கோத்தகிரியில் உள்ள ஒரு சில பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாகக் கொண்டு வரப்பட்ட அளக்கரை குடிநீர் திட்டத்தில் நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின் அழுத்தக் குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதாலும், நீர் உந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களுக்கான மின்கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு கோடை சீசன் நிலவும்.

    இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

    அதேபோல் அடுத்த மாதம் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 62 மலர் வகைகளில், 262 ரகங்களைக் கொண்ட 60 ஆயிரம் தொட்டிகளில் டேலியா, சால்வியா, கேண்டிடப்ட், ஜெனியா, பால்சம், அஜிரேட்டா உள்ளிட்ட ரகங்களில் மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    தற்போது அந்த செடிகள் அனைத்தும் பூத்து குலுங்குகின்றன. இதையடுத்து, கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி மைதானத்தில் உள்ள மலர் மாடங்களில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் 15 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. அதில் பூக்கள் பூத்து குலுங்குவது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.

    அதேபோல் பூங்காவில் புல்வெளி மைதானங்களை சீரமைக்கும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் அலங்காரங்களும் செய்யப்பட உள்ளது.

    கோடை சீசனையொட்டி நாளை முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்ல வேண்டும். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும்.

    பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் நாளை, நாளை மறுநாள் மற்றும் கோடை விழாவான 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.

    ×