search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயரும் என கருதி ஊட்டி நகராட்சி யை மாநகராட்சியாக தரம் உயர்த்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏசுராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.

    அதன்படி ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி, இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட 36 கிராம மக்கள் நேற்று இத்தலாரில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இத்தலார் பஜார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் ஹாலன் தலைமை தாங்கினார். நாக்குபெட்டா நலச்சங்க செயலாளர் மணிவண்ணன் சிறப்பு அழைப்பாளராக போராட்டத்தில் பங்கேற்றார்.

    இதுதொடர்பாக கிராம தலைவர் ஹாலன் கூறும்போது, `ஊட்டியை மாநகராட்சியாக மாற்றி இத்தலார் ஊராட்சியை அதனுடன் இணைக்க ஊராட்சி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இத்தலார் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அரசு மூலம் வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும். எனவே ஊட்டி நகராட்சியுடன் இத்தலாரை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்' என்றார்.

    • ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது.
    • தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிவது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி ஆகியோர் ஊட்டி படகு இல்லத்தில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரியில் சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சுற்றுலா துறை மேலாண்மை இயக்குனருடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது.

    ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து விடுகின்றனர்.

    ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா, பூங்காவை மட்டுமே கண்டுகளித்து செல்கின்றனர். இதனால் ஊட்டியில் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே மாவட்டம் முழுவதும் சுற்றுலாவை பரவலாக்கும் வகையில் குன்னூர், கோத்தகிரி, மைனாலா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா தலங்களை கண்டறிவது மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பதைக் கண்டறிந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    தமிழ்நாட்டுக்கு 2022-2023-ம் ஆண்டில் 28 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 32 கோடியாக உயர்ந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க, மருத்துவ சுற்றுலா உள்பட பிற சுற்றுலாக்களை பிரபலப்படுத்த உள்ளோம்.

    தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசிடம் சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.160 கோடி கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக எல் அண்ட் டி நிறுவனம் மூலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 1879-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 1978-ம் ஆண்டு முடிந்து விட்டது.
    • . தற்போது வரை 23 ஆண்டுகளாக குத்தகையை புதுப்பிக்காமலும், குத்தகை தொகையை வழங்காமலும் இழுத்தடித்து வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே குதிரை பந்தய மைதானம் உள்ளது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.

    சுமார் 52.34 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானம் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் குத்தகைக்கு எடுத்து ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஏப்ரல், மே மாதங்களில் குதிரை பந்தயம் நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 1879-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட 99 ஆண்டு கால குத்தகை 1978-ம் ஆண்டு முடிந்து விட்டது. மீண்டும் 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை குத்தகை தொகையை ரேஸ் கிளப் நிர்வாகம் முறையாக செலுத்தி வந்தது.

    இதற்கிடையே 2001-ம் ஆண்டு முதல் குத்தகை தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை தொகையை வழங்கவில்லை. தற்போது வரை 23 ஆண்டுகளாக குத்தகையை புதுப்பிக்காமலும், குத்தகை தொகையை வழங்காமலும் இழுத்தடித்து வந்தது.

    இதனால் ரூ.822 கோடி குத்தகை தொகை பாக்கி இருந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் குத்தகை பாக்கியை செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகம் முன்வரவில்லை. அத்துடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், செலுத்தாத பட்சத்தில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது.

    அதன்பிறகும் குத்தகை தொகையான சுமார் ரூ.822 கோடியை அரசுக்கு செலுத்தாமல் இருந்ததால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஊட்டி ஆர்.டி.ஓ. மகாராஜ், சரவணகுமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தனர். மேலும் அறிவிப்பு பலகை வைத்து, நிலத்தை கையகப்படுத்தினர்.

    • கோபாலகிருஷ்ணன் ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
    • அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.

    குன்னூர்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பியாக இருந்தவர் அ.தி.மு.க.வை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 63). இவர் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தபோது, முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார்.

    அவர் இறந்த தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டில் குவிந்தனர். அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இன்று மாலை வெலிங்டன் பகுதியில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.

    உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 2014-ம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசாவை தோற்கடித்து எம்.பி.யானார்.

    இவர் அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 2014-க்கு முன்பு வரை குன்னூர் நகராட்சி தலைவராக பதவி வகித்த அவர், அப்போது நடந்த எம்.பி. தேர்தலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போட்டியிட்டார் குறிப்பிடத்தக்கது.

    இறந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு சுசிலா என்ற மனைவியும், அப்சரா என்ற மகளும் உள்ளனர்.

    • ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.

    யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.

    யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.

    மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.

    பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அறிவித்துள்ளார்.

    • மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குட்டைகள், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்குள்ள சில குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    தேவால-உப்பட்டி டவர் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த வாகனம் நகர்ந்ததால் காரில் வந்தவர் உயிர்தப்பினார்.

    கூடலூர் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதம் அடைந்தன. பெரிதும், சிறிதுமாக 17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

    காற்றில் 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடுடன் மாற்றிடம் வழங்கப்பட்டது.

    இதனால் கூடலூரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். சாலையின் நடுவே பாயும் ஆற்றைக் கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால் தற்போது அங்கு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. மற்றொரு பகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகிறார்கள்.

    மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, `நீலகிரியில் பெய்து வரும் மழையால் பெரியளவில் பாதிப்பில்லை. மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அப்பர் பவானி-72,

    சேரங்கோடு-39,

    ஓவேலி-28,

    பந்தலூர், நடுவட்டம்-22,

    பாடந்தொரை-18,

    செருமுள்ளி-16. 

    • கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.
    • பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.

    இதேபோல் ஆற்றுவாய்க்கால் கரையோரம் உள்ள கூட்டுறவு பால் சங்க அலுவலக கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஊழியர்கள் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பால் கேன்களை சுமந்து சென்றனர். இதேபோல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையின் தாக்கம் குறைந்த பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது.

    பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பந்தலூர் பஜாரில் உள்ள சாலை, கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. கனமழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் சாலை, தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

    • ஆற்றின் ஒரத்தில் நின்று யானைகள் தண்ணீர் குடித்தன.
    • யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று, தர்மகிரி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தன. ஆற்றின் ஒரத்தில் நின்று யானைகள் தண்ணீர் குடித்தன.

    அந்த சமயம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடி கொண்டிருந்தது.

    அந்த யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் யானையும் அடித்து செல்லப்பட்டது. ஆனாலும் யானை கலங்காமல், நம்பிக்கையுடன் போராடி, ஆற்றில் எதிர்நீச்சல் போட்டு கரைக்கு வந்து சேர்ந்தது.

    தன்னம்பிக்கையுடன் கலங்காமல் தனியாய் போராடிய காட்டு யானையின் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தற்போது பகல் நேரத்திலும் விலங்குகள் உலா வரத் தொடங்கி உள்ளன.
    • விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இரவு நேரத்தில் மட்டும் ஊருக்குள் உலா வந்த வனவிலங்குகள் தற்போது பகல் நேரத்திலும் உலா வரத் தொடங்கி உள்ளன.

    இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

    குன்னூர் அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வருகின்றன. இந்த பகுதியின் அருகே தேயிலை தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று அந்த தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது.

    மக்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்து கொண்ட கரடி அங்கு மிங்கும் ஓடியது. பின்னர் அங்குள்ள மரத்தின் அருகே சென்று மரத்தை சுற்றியது. மரத்தில் உள்ள கிளைகளை இழுத்தும், தலையை மரத்தின் இடுக்கில் கொடுத்தும் விளையாடி கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மரத்தின் இடுக்கில் கரடியின் தலை சிக்கிக்கொண்டது. இதனால் கரடி அலறியது. சத்தம் கேட்டு தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். கரடியின் தலை மரத்தின் இடுக்கில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    கரடி தலையை மீட்பதற்காக போராடியது. அரைமணிநேர போராட்டத்திற்கு பிறகு மரத்தின் இடுக்கில் சிக்கிய தலையை மீட்டது. பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் ஓடிவிட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாடி வருவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
    • மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.

    தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

    கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.

    மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

    இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-

    கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×