search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஊட்டி அருகே அத்திக்கல், புது தோட்டம், மஞ்சனக்கொரை, எம்.பாலாடா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தாவரவியல் பூங்கா அருகே ராஜ்பவன் மாளிகை சாலையிலும் மரம் விழுந்தது.

    கூடலூரில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் சாலைகளில் மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இருவயல் கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடும் குளிர் நிலவுவதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் கனமழை காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு ஆங்காங்கே மின் வினியோகமும் தடைபட்டது. குறிப்பாக கூடலூர், பந்தலூரில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தாலுகா பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூரில் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.

    • நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    கூடலூர்:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்று, இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல், கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்பாடி அறிவித்துள்ளார்.

    • குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது என்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அப்பர் கார்குடி அருகே, பிறந்து சில நாட்களே ஆன குட்டி யானை நேற்று தாயுடன் உலா வந்தது.

    பிற்பகல் குட்டி யானை, எதிர்பாராமல் அப்பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்து. வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது. தாய் யானை பிளிறியபடி, அதனை மீட்க போராடியது.

    தகவல் அறிந்த வனச்சரகர் விஜய், வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று தாய் யானையை அங்கிருந்து விரட்டினர்.

    தொடர்ந்து குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

    பின்னர் குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்த்தனர். தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குட்டி யானையை கால்வாயில் இருந்து பாதுகாப்பாக மீட்டு தாயுடன் சேர்த்து கண்காணித்து வருகிறோம்.

    குட்டி யானைக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல நிலையில் உள்ளது என்றனர்.

    • மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.
    • தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது.

    ஊட்டி:

    மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்து 2 நாட்களை கடந்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் மக்களை வந்து பார்க்கவில்லை. மக்களின் உயிர் மீது முதல்வருக்கு அக்கறை இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராய விவகாரத்தில் நேரடியாக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

    கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத செயலிழந்த அரசாக, இந்த தி.மு.க அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

    கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகளின் வீடுகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களின் படங்கள் தான் இடம்பெற்றுள்ளது. இதனால் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை முற்றிலுமாக பரவி இருக்கிறது. தி.மு.க அரசு மக்களை போதைப் பொருட்களால் அழித்துக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போதும், அதற்கு பதிலளிக்க தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக தற்போது இருந்தே வேலைகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன.
    • பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் தேயிலை, மலை காய்கறிக்கு அடுத்தபடியாக சீச்சீஸ், பிளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழவகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சோலூர், எல்லநள்ளி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் ஸ்ட்ராபெர்ரி பழவகைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இவை குளிர் மற்றும் பனிக்காலத்தில் செழிப்பாக வளரும். அங்கு தற்போது மழை பெய்து வருவதால் அங்கு விளைவிக்கப்பட்டு உள்ள ஸ்ட்ராபெர்ரி செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஸ்ட்ராபெர்ரி பழசீசன் தொடங்கி உள்ளதால், அங்கு விவசாயிகள் தற்போது பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஸ்ட்ராபெர்ரி பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் கூறியதாவது:-

    ஸ்ட்ராபெர்ரி பயிரிட்ட 3 மாதங்களுக்கு பிறகு பழங்களை அறுவடை செய்ய முடியும். ஒருநாள்விட்டு ஒருநாள் பழங்களை அறுவடை செய்யலாம். ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்கு வந்திருந்து, ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி பழங்களை ரூ.300 வரை கொள்முதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

    அவை நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பயிர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ள பசுமைக் குடில்களை சுமார் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மலை ரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிந்த நிலையில், அங்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகளின் அதிகளவில் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேலும் எண்ணற்றோர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்துக்கொண்டு உள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நிலவரப்படி ஜூன் 15-ந்தேதிவரை முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியல் 6 ஆயிரத்துக்கும் மேல் நீண்டு வருகிறது.

    இதற்கிடையே நீலகிரியில் பலத்த மழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே பாறை உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக செல்லும் மலைரெயில் சேவை 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    இருப்பினும் சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு தற்போது 5 பெட்டியுடன் கூடிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் அவற்றில் உற்சாகத்துடன் பயணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த 10-ந்தேதிவரை மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் குன்னூர் ஊட்டி இடையேயான மலை ரெயிலில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் சென்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரியில் கோடை சீசன் முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் மலை ரெயில் போக்குவரத்து நிலையங்கள் மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளன.

    • சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகள்.
    • யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் குன்னூர் ஜிம்கானா கோல்ப் விளையாட்டு மைதானத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 20 நிமிடம் சண்டையிட்ட காட்டெருமைகளை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் ஒருவர் இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளார்.

    நீலகிரி மாவட்டம், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அவ்வப்போது சாலைப் பகுதிக்கு வந்து செல்கின்றன. இதில் ஒற்றைக் கொம்பு ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சாலைகளில் நடமாடி வருகிறது.

    இந்த ஒற்றைக் கொம்பு யானை, காட்டேரி குடியிருப்பு பகுதி மற்றும் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் நடமாடியது. மேலும், சில நேரங்களில் சாலையில் நடமாடும் இந்த யானை வாகனங்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

    எனவே ஒற்றைக் கொம்பு யானையால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க 15 போ் கொண்ட வன ஊழியா்கள் பணி அமா்த்தப்பட்டு கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக குன்னூா் வனச்சரகா் ரவீந்தரநாத் தெரிவித்துள்ளாா்.

    • விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உதகை:

    உதகையில் அதிவேகமாக சென்ற டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது அந்த சாலையில் நின்று கொண்டிருந்த 2 ஆட்டோக்கள், ஒரு கார் மீது மோதியது.

    இச்சம்பவம் அப்பகுதி சிசிடிவி கேமராவில் டெம்போ டிராவலர் வேன் அதிவேகமாக வந்து கவிழ்ந்த காட்சிகள் காண்போரை பதறவைக்கிறது.

    தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.




    • கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
    • கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடநாடு எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டும் என கொடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இதனை எதிர்த்து கொடநாடு எஸ்டேட் மேலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கொடநாடு எஸ்டேட்டில் எந்த விதி மீறலும் இல்லை எனக்கூறி கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து கடந்த 2008 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து கொடநாடு பஞ்சாய்த்து தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது.


    இந்த மேல் முறையீட்டு மனு நீதிபரிகள் அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசு தலைமை வழக்கறிஞர், சொத்து வரி விதிப்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மட்டுமே கொடநாடு எஸ்டேட்டுக்குள் நுழைய அனுமதி கேட்பதாகவும், 2008 ஆம் ஆண்டிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்குள் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை இருப்பதாகவும், கூடுதல் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தால் என்ன செய்வது? எனவும் ஆய்வு செய்தால் தானே அது தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 2023 ஆம் ஆண்டு வரை சொத்து வரி செலுத்தப்பட்டுதாகக் கூறி, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கொடநாடு எஸ்டேட்டுக்குள் விதிகளை மீறி எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளவில்லை என தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆய்வு செய்தால் தானே விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா? என தெரியவரும் அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து கொடநாடு எஸ்டேட்டில் கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வின்போது நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது.
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ஊட்டி:

    கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னுவயல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் முகாமிட்டு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்குள்ள தேயிலை, காப்பித்தோட்டங்களில் சிறுத்தை நடமாடுவது உறுதியானது.

    சிறுத்தை நடக்க முடியாமல் மெதுவாகவே அந்த இடங்களை கடந்து செல்கிறது.

    சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக சிறுத்தை நடக்க முடியாமல் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விட்டதால் அந்த சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கூண்டில் சிக்காத பட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர். சிறுத்தை பிடிபடும்பட்சத்தில் அதன் காயத்துக்கு சிகிச்சை அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் கிரீன்பீல்டு, லோயர்பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்ள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுமட்டுமின்றி அங்குள்ள கடைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொருட்களை வாங்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை ஓய்ந்த பிறகு கடைகளில் புகுந்த வெள்ளநீரை வியாபாரிகள் வெளியேற்றினர்.

    ஊட்டி பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பாலத்தின் அடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    இதில் அந்த வழியாக சென்ற சுற்றுலா வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மேலும் படகு இல்ல சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டன.

    ஊட்டி கமர்ஷியல் சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது. இருப்பினும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழையை ரசித்தபடி செல்போனில் வீடியோ பதிவுசெய்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் தென்படுவதால் அங்குள்ள விவசாயிகள் நிலத்துக்கு உரமிட்டு பராமரிக்க தயாாராகி வருகின்றனர். மேலும் அங்குள்ள காய்கறி தோட்டங்களில் தற்போது விதைப்பு பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஊட்டியில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், பாதாள சாக்கடை குழாய்கள் ஆங்காங்கே நிரம்பி வழிந்து சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடைக்குள் விட வேண்டாம்.

    மேலும் ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் கட்டிடம் மற்றும் வளாகத்தில் இருந்து வரும் தண்ணீரை பாதாள சாக்கடை குழாய் இணைப்புக்குள் பொருத்தி இருக்கக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அபராதம் விதிப்பதுடன் கட்டிடத்தில் உள்ள பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது.
    • நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

    நீலகிரி:

    தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலமாக நீலகிரி உள்ளது. இங்கு நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை காட்சிகளை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஏற்ற இடமாக உள்ளதால் பலரும் குடும்பத்தினருடன் இங்கே வருகின்றனர்.

    மேலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரெயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

    இந்நிலையில், மலைகளுக்கு நடுவே நீலகிரி மலை ரெயில் செல்லும் அழகான காட்சியை தெற்கு ரெயில்வே வீடியோவாக வெளியிட்டுள்ளது. எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரெயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்து சென்றுள்ளது.

    ×