search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • 60 சதவீத பத்திரங்களை மோடி கட்சிதான் பெற்றிருக்கிறது.
    • குஜராத்தில் போதை பொருளை தடுத்து நிறுத்தினால் இந்தியா முழுவதும் தடுக்கப்பட்டுவிடும்.

    விருதுநகர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் தேதியை தீர்மானிப்பது யார்? தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தீர்மானிக்க வேண்டும். பிரதமரின் பிரசார வசதிக்கேற்ப தேர்தல் தேதி தீர்மானிக்கப்படுகிறது. சுதந்திரமான செயல்பாட்டை அது இழந்து விட்டது. உத்தரவுக்காக காத்திருந்து உத்தரவை அமல்படுத்துகிற அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது.


    ஏப்ரல் 19-ந்தேதி தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் வாக்கு பெட்டியை பாதுகாக்க அரசியல் கட்சிகள் ஆட்களை நியமிக்க வேண்டி இருக்கிறது. எட்டு மணி நேரத்திற்கு ஒரு ஆள் என்றால் ஒரு நாளைக்கு 3 பேர் வரை நியமிக்க வேண்டியுள்ளது. இதற்கு ஆகும் செலவை தேர்தல் ஆணையம் தான் ஏற்க வேண்டும் என்றார்.

    பின்னர் முத்தரசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: ஒரு மாநில கட்சியான தி.மு.க. தேர்தல் பத்திரத்தில் இவ்வளவு நிதி எப்படி என அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

    பதில்: அண்ணாமலை, மல்லாந்து படுத்துக்கொண்டு காரி துப்புகிறார். ஒரு கம்பெனி தொடர்ந்து 3 வருடங்கள் லாபத்தில் இயங்கினால் அதில் ஏழு சதவீதம் மட்டும் தான் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்ற விதியை மாற்றியது மோடியா? மு.க ஸ்டாலினா? ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை வாங்கலாம் என திருத்தம் கொண்டு வந்தது மோடியா, மு.க.ஸ்டாலினா? ரகசியமாக தேர்தல் பத்திரம் வழங்க ஏற்பாடு செய்தது யார்? மோடியா மு.க.ஸ்டாலினா? இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து வித்திட்டவர் மோடி.


    அவகாசம் கேட்ட ஸ்டேட் வங்கி, உச்சநீதி மன்றம் எச்சரிக்கை விடுத்ததும் உடனடியாக தேர்தல் பத்திர விவரங்களை வழங்கியது எப்படி? 60 சதவீத பத்திரங்களை மோடி கட்சிதான் பெற்றிருக்கிறது. அதை சட்டரீதியாக கொண்டு வந்ததும் மோடி கட்சி தான். ஏழைகளுக்கு வரி மேல் வரி விதிக்கிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைக்கப்பட்டது. இந்த சலுகைக்கான கைமாறாக பெற்றது தான் தேர்தல் பத்திரங்கள். தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றிருந்தனர். ஆனால், வட்டியும் செலுத்தவில்லை. அசலையும் செலுத்த வில்லை. பின்பு, வராக்கடன் எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளார்கள்.

    கேள்வி: போதை பொருள் பிரச்சினையால் இந்தியா கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா?

    பதில்: எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குஜராத்திற்கு தான் பிரச்சினை வரும். குஜராத்தில் உள்ள அதானியின் துறைமுகம் மூலமாகத்தான் இந்தியா முழுவதும் போதைப்பொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. யாரோ ஒருவர் ஜாபர் சாதிக் மாட்டிக் கொண்டார். அவர் சில காலம் தி.மு.க.வுடன் இருந்தார் என்பதாலேயே மட்டுமே தி.மு.க. மீது பழி போட முடியாது.

    2013-ல் இதே ஜாபர் சாதிக்கை பிடித்தனர், அப்போது இருந்தது யார் ஆட்சி? பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியா நடைபெற்றது, ஏன் அவரை அப்பொழுது விட்டார்கள்?

    குஜராத்தில் போதை பொருளை தடுத்து நிறுத்தினால் இந்தியா முழுவதும் தடுக்கப்பட்டுவிடும். அமலாக்கதுறையை வைத்து மிரட்டி மற்றவர்களை களங்கப்படுத்தி அதன் மூலம் பலன் பெற மோடி நினைக்கிறார்.

    பதில்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வருகிற 18-ந்தேதி அறிவிக்கப்படுவார்கள்.

    கேள்வி: சமையல் எரி வாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு பற்றி?

    பதில்: வீட்டில் உபயோகிக்க கூடிய சிலிண்டரின் விலை 2014-ல் நானூறு ரூபாயாக இருந்தது. அது 1200 வரை உயர்த்தப்பட்டது. தற்பொழுது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை ஏறும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர், விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது எனக் கூறினார். ஆனால் தற்பொழுது விலையை குறைக்க உத்தரவிட்டதாக கூறுகின்றனர். விலை ஏறியதற்கு சம்பந்தமில்லை எனக் கூறும் இவர்கள், தற்பொழுது மட்டும் விலையை குறைக்க உத்தரவிட்டதாக கூறுவது எப்படி?

    கேள்வி: கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறதே?

    பதில்: கருத்துக்கணிப்புகள், கிளி சோசியம் சொல்பவர், கைரேகை பார்ப்பவர், ஜாதகம் பார்ப்போர் என அனைவரும் அவ்வாறு கூறுவார்கள். ஆனால் எது சரி? எது தவறு? எனத தேர்தல் தீர்மானிக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது உண்மை தெரியும். மக்கள் மோடியின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கி றார்கள். மோடிக்கு எதிராக வாக்களிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, தேசியக்குழு உறுப்பினர் டி.ராமசாமி, மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டி, நகர செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர்.

    • பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.
    • ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காளவாசல் கலைஞர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவரது மனைவி லட்சுமி (48). கதிர்வேல் அருகே உள்ள ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த தம்பதிக்கு கோகிலா என்ற மகளும், செல்வபிரகாஷ் என்ற மகனும் இருந்தனர். இதில் மகள் கோகிலாவுக்கு திருமணமாகி மம்சாபுரம் பகுதியில் தனது கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

    செல்வபிரகாஷ் கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து தேர்வுக்கு தயாராகும் வகையில் கடுமையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று காலை பெற்றோரிடம் கூறி விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற செல்வபிரகாஷ் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால் அவர் பள்ளி முடிந்து சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

    இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் மகள் கோகிலா வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேல் தற்போது குடியிருக்கும் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்ட கொட்டகை அமைத்துள்ளார். அங்கு சென்று பார்த்த போது, செல்வபிரகாஷ், சால்வையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறித்துடித்தனர். பின்னர் இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவர் செல்வபிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, பள்ளியில் ஆசிரியர்கள் திட்டினார்களா, இல்லை சகமாணவர்கள் கேலி செய்தார்களா அல்லது தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில் ஆடை குறைபாட்டை மற்ற மாணவர்கள் கேலி செய்ததால் மனமுடைந்த மாணவர் செல்வபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர்.
    • உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி மாதம் நடைபெறும் சிவராத்திரி திருவிழா அன்று நள்ளிரவில் வெறும் கையினால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 101 வருடங்களுக்கு மேலாக நடப்பதாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு சிவராத்தியை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த முத்தம்மாள் என்ற 92 வயது மூதாட்டி மற்றும் கோவில் பூசாரிகள் நேற்று இரவு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பத்தை சுட்டனர். இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கோவிலில் திரண்டனர்.

    கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவதை பக்தர்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்தனர். 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 7 கூடைகளில் அப்பம் சுட்டு பின்பு பக்தர்களுக்கு வழங்குவார்கள். முன்னதாக பாசிப் பயிறு, தட்டாம் பயிறு, கருப்பட்டி ஆகியவைகளை உரலில் போட்டு இடித்து அப்பத்திற்கு தேவையான இனிப்பு உருண்டை செய்யப்படும். இந்த உருண்டை இடிப்பதற்கு பெண்கள் நேர்த்தி கடன் மேற்கொண்டு பயபக்தியுடன் தயார் செய்து கொடுப்பர்.

    மகா சிவராத்தரி அன்று நடைபெறும் இந்த பூஜையில் விரதம் இருந்து கலந்து கொண்டு அப்பத்தை வாங்கி உண்டால் உடலில் இருக்கின்ற எல்லா நோய்களும் சரியாகிவிடும் என்றும், எவ்வித நோயும் வராது என்பதும், குழந்தை இல்லாத தம்பதியினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூதாட்டியிடம் ஆசி பெற்று அப்பம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இதற்கான நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அப்பத்தை பிரசாதமாக வாங்கி சென்றனர்.

    கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் மூதாட்டி முத்தம்மாள் கடந்த 61 வருடங்களாக சிவராத்தியன்று விரதம் இருந்து இதனை செய்து வருகிறார்.

    • பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை பிரித்திவிராஜ் (35). இவர் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி விருப்பு ஓய்வுபெற்றவர்.

    தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுப்புற சூழல் அணி பிரிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.

    கடந்த 23-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடப்பது தெரிய வந்தது. பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தேவி வழக்குப்பதிவு செய்து பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாக்குளம் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் (61) என்பவர் பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்தையும், பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் தற்போது குறிஞ்சாக்குளத்தில் 2-வது திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

    2-வது மனைவியின் மகன் கர்ணன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். தந்தை மாணிக்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் கர்ணன் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை திருட்டு வழக்கில் கைதானதால் பட்டதாரி மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.

    இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

    இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

    கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்துமதி அணிந்திருந்த தாலிச்செயினையும் பறித்துக்கொண்டு கும்பல் அங்கிருந்து தப்பியது.
    • கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது42). இவர் அங்குள்ள ஜவகர் மைதானத்தில் உடல் பருமன் எடை குறைப்பு மையத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி(38). இவர்களுக்கு சந்தோஷ்(10) என்ற மகனும், சுவாதி(7) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்களின் வீடு ஊரின் ஒதுக்குபுறத்தில் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டது.

    இதனால் திடுக்கிட்டு எழுந்த முருகானந்தம் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 5 பேர் முகமூடி அணிந்து கதவை உடைப்பது தெரியவந்தது.

    சிறிது நேரத்தில் அந்த கும்பல் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் முருகானந்தத்தை சரமாரியாக தாக்கிய அவர்கள் வாயில் துணியை திணித்து கையை கயிற்றால் கட்டினர். தொடர்ந்து இந்துமதி மற்றும் 2 குழந்தைகளையும் அந்த கும்பல் கயிற்றால் கட்டிப்போட்டது.

    அதன் பின் அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    மேலும் இந்துமதி அணிந்திருந்த தாலிச்செயினையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது முருகானந்தம், இந்துமதி மற்றும் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தனர். உடனே பொதுமக்கள் அவர்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜன், ஏ.டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் நடத்திய இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    அண்மையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபர்களை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதே பாணியில் ராஜபாளையத்திலும் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

    நடிகர் கார்த்திக் நடித்த 'தீரன்' படத்திலும் கொள்ளையர்கள் வீட்டை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கதவை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் இடம்பெறும்.

    அதுபோல இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அந்தப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

    • விருதுநகர் அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் இறந்தனர்.
    • வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
    • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

    இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

    அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகாசி:

    குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 1,087 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நேற்று மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (30), சாந்தி (43), ஜெயா (57), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (50), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துசாமி (43), குருசாமி (50), முனியசாமி (42), சித்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (26), கிளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29), நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அவ்வைராஜ் (62) ஆகியோர் இறந்தனர்.

    5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்த சிவக்குமார், முத்துக்குமார், ரெங்கம்மாள் உள்பட 4 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியை சுற்றியுள்ள 60 சதவீதம் பட்டாசு ஆலைகளை அதன் லைசென்சு பெற்ற உரிமையாளர்கள் நடத்துவதில்லை.

    மாறாக, அதனை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். அவ்வாறு குத்தகைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே பணியில் இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் 10-க்கும் மேற்பட்டோரை பணியில் வைக்கிறார்கள்.

    கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூடுதல் தொழிலாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள். வெடிமருந்து பயன்பாடு வழக்கத்தைவிட அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பட்டாசு தொழிலை மட்டுமே தெரிந்திருக்கும் ஆட்களை கொண்டு ஆலைகளை இயக்காமல் அதிக சம்பளம் தருவதாக கூறி தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தபோது பணியில் இருந்த தொழிலாளி செல்வம் கூறுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் செல்ல முயன்றோம். ஆனால் அடுத்தடுத்த அறைகள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டு இருந்தன.

    அதேவேளையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்தது. எனவே எங்களால் நெருங்க முடியவில்லை. ஒருவழியாக முதலில் வெடித்து சிதறிய அறைக்கு அருகில் சென்றபோது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுற மும் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தனர். அதிலும் ஒருவரின் ஆடைகள் மட்டும் அங்குள்ள மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

    நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்துவருகிறோம். இன்று நடந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என நினைக்கிறோம். காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை என்றபோது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை.

    காலையில் அனைவரும் ஒன்றாக வேலைக்கு வந்தோம். ஆனால் மாலையில் 10 பேர் பிணமாக வீடு திரும்பியதை எண்ணும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைக்கும் தொழிலாக பாதுகாப்பற்ற பட்டாசு தொழில் வந்துவிட்டது என்றார்.

    மற்றொரு தொழிலாளி கூறுகையில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இன்னும் திறந்து பணிகளை தொடங்காத நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாண வேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.

    இந்த வகை வாணவேடிக்கைகளை தயாரிக்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்கவேண்டும். எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுத் தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

    இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

    மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர் களை தீவிரமாக தேடி வரு கிறார்கள்.

    • வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
    • மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

    • தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார்.
    • ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியக்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் மாநிலக்கட்சிகளும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக அவர் நேற்று இரவு ராஜபாளையம் சென்று அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார். அங்கு அவருக்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து அவர் ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கார் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் உள்ள அவரது குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் இருந்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் அவரது குடும்பத்தின் சார்பில் வனப்பேச்சிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

    அரசியலில் எந்த ஒரு முடிவு எடுப்பது என்றாலும் ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பில் அமைந்திருக்கும் தனது குல தெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று அனுமதி வாங்கிவிட்டு தான் முடிவு செய்வார். இந்த திடீர் வருகை குறித்து அவரது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ். சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளார். இதில் எந்த அரசியலும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறினர்.

    ×