search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 28 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஓமன் அணி துவக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி சார்பில் சோயப் கான் மட்டும் இரட்டை இலக்க ரன்கள் (11) அடித்தார். இதன் மூலம் 13.2 ஓவர்களில் ஓமன் அணி 47 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் மற்றும் ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், கேப்டன் ஜாஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் முறையே 12 மற்றும் 24 ரன்களை அடித்தனர்.

    பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த வகையில், இங்கிலாந்து அணி 3.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஓமன் சார்பில் பிலால் கான் மற்றும் கலீமுல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி இந்த வெற்றியின் மூலம் அந்த பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    • தன்சித் ஹாசன் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் மற்றும் லிட்டன் தாஸ் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹாசன் 35 ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 64 ரன்களையும் குவித்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை அடிக்க வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் பிரிங்கில் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    160 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஒ தவுத் முறையே 18 மற்றும் 12 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் சைபிராண்ட் முறையே 26 மற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார்.

    போட்டி முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார்.
    • நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கினர். இதில் நஜ்முல் சாண்டோ ஒரு ரன்னிலும் அடுத்து வந்த லிட்டன் தாஸ்சும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இதனையடுத்து தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைக் குவித்தது.

    சிறப்பாக விளையாடிய தன்சித் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் 25 ரன்னில் வெளியேறினார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் 64 ரன்கள் எடுத்தார். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
    • சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.

    குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.

    இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.

    இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இவ்வாறு துபே கூறினார்.

    • டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
    • இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் இப்போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

    • 3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல.
    • நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

    இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

    இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இதுவரை 10 ரன்கள் கூட தாண்டாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அவர் 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் விராட் கோலீயை 3-வது இடத்தில் களமிறங்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மீண்டு வருவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாட்டுக்காக விளையாடும் எந்த வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். அதை நீண்ட காலமாக செய்து வரும் விராட் கோலி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் நாம் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். இன்னும் சூப்பர் 8, அரையிறுதி, இறுதி போட்டி வரவுள்ளன. எனவே விராட் கோலி தற்போதைக்கு அமைதியாக இருந்து தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை சந்திப்பீர்கள். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்கள் விதிக்கப்பட்டது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டியின் போது அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஆனால் சமீபத்தில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்தது. இந்த விதியின் படி ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.

    இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 நொடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிகளுக்குள் பந்துவீச்சாளர் ஓவரை வீசத் தொடங்கி விட வேண்டும். இதனை தெளிவுப்படுத்தும் விதமாக மைதானத்தில் உள்ள பெரிய திரையில் 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறைக்கு மேல் மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.

    அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக கொடுக்கப்படும். இந்த விதியின் படிதான் தற்போது அமெரிக்கா அணிக்கு 5 ரன்களை பெனால்டியாக கொடுத்துள்ளது. முன்னதாக போட்டியின் போது கள நடுவர்கள் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸை இரண்டு முறை எச்சரித்தும் இத்தவறை அமெரிக்க அணி மீண்டு செய்துள்ளது. அதன் பிறகே அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்களை விதித்தனர். இதன்மூலம் டி20-யில் முதல் அணியாக பெனால்டி ரன்கள் விதித்த அணியாக அமெரிக்கா மோசமான சாதனையை படைத்துள்ளது.

    • கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகமாக இருந்தது.
    • ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் முடிவடைந்த 17-வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் பேட்ஸ்மேன்களின் அதிரடி அதிகமாக இருந்தது. இதனால் இந்த சீசனில் ரன் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்வித்தது.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி, ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அணிகளின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. அதன் முடிவில் நடப்பாண்டில் மட்டும் ஐபிஎல் தொடர் 6.5 சதவிகிதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரின் மதிப்பு ரூ.1.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி வளர்ச்சியை ஐபிஎல் தொடர் எட்டியுள்ளது. இதற்கு ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி என்று பிரிந்ததும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

    அதேபோல் ஐபிஎல் அணிகளின் மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு ரூ.1,930 கோடியாக கணக்கிடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பெங்களூரு அணி உள்ளது. அதன் மதிப்பு ரூ.1,896 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் ரூ.1,805 கோடி மதிப்புடன் கொல்கத்தா உள்ளது. 4வது இடத்தில் உள்ள 5 முறை சாம்பியனான மும்பை அணியின் மதிப்பு ரூ.1,704 கோடியாக உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.1,111 கோடியாகவும், ஐதராபாத் அணியின் மதிப்பு ரூ.1,103 கோடியாகவும் உள்ளது.

    • விராட் முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
    • ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்டீஸ் அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

    இந்திய அணி சூப்பர் சுற்றுக்கு முன்னேறினாலும் தொடக்க வீரரான விராட் கோலியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கிய வரும் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

    முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோலி தொடக்க வீரராக விளையாடுவதை விட 3-வது விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது.

    மேலும் 5-வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும்.

    இவ்வாறு பண்ட் கூறினார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது

    டிரினிடாட்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்துவருகிறது.

    வெஸ்ட் இண்டீசில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்தில் 68 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 40 ரன்னும், பின் ஆலன் 26 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்ட நாயகனாக ரூதர்போர்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.
    • ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக அமெரிக்காவின் எய்சென்ஹோவர் பார்க்-இல் நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானம் கட்டமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி உள்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றன.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தின் பிட்ச் சரியாக இல்லை என கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த மைதானத்தின் பிட்ச்கள் வெளியே தயாரிக்கப்பட்டு, அவை மைதானத்திற்குள் பொருத்தப்பட்டன. கிட்டத்தட்ட தற்காலிகமாகவே இந்த மைதானம் உருவாக்கப்பட்டது.


     

    இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்று முடிந்த இந்தியா - அமெரிக்கா அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் முழுமையாக இடிக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை சுற்றிலும் புல்டோசர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    மைதானம் மற்றும் பிட்ச்-ஐ உள்ளூர் பயன்பாட்டிற்காக விட்டுவைத்துவிட்டு, மைதானம் முழுமையாக இடிக்கப்பட இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 75 நாட்களில் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்கது. 

    • ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.
    • மழையால் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, குட்டி அணியான ஓமனை ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக மழையால் அந்த ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

    இதையடுத்து எஞ்சிய இரு லீக்கில் வென்றால் மட்டும் சூப்பர்8 சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்ற வாழ்வா-சாவா சிக்கலுக்கு மத்தியில் ஓமனுடன் இன்று களம் காணுகிறது. ஆனால் இந்த ஆட்டத்திற்கும் மழை ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை இந்த ஆட்டமும் மழையால் பாதியில் ரத்தானால் இங்கிலாந்தின் சூப்பர் 8 கனவு சிதைந்து விடும்.

    இங்கிலாந்தை பொறுத்தவரை ஓமன் மற்றும் நமிபியாவை வீழ்த்த வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி கடைசி லீக்கில் ஸ்காட்லாந்தை சாய்க்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் தலா 5 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

    அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தேர்வாகும். ரன்ரேட்டில் ஸ்காட்லாந்து (+2.164) வலுவாக இருப்பதால் இங்கிலாந்து (ரன்ரேட் -1.800) இரு ஆட்டத்திலும் மெகா வெற்றியை பெற்றாக வேண்டும்.

    முன்னதாக கிங்ஸ்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம்- நெதர்லாந்து (டி பிரிவு) அணிகள் மல்லுக்கட்டுகின்றன. தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமாகும்.

    ×