search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.
    • நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    பிபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியில் இடம்பிடித்துள்ளார் 25 வயது வீராங்கனையான யமிலா ரோட்ரிக்ஸ். இத்தாலிக்கு எதிரான முதல் க்ரூப் ஸ்டேஜ் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்கிய இவர், தன் காலில் மரடோனா மற்றும் ரொனால்டோவின் முகத்தை டாட்டூ போட்டிருந்தார்.

    இதையடுத்து அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு பதிலாக போர்ச்சுகல் ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தனது காலில் பச்சை குத்தியதால் அர்ஜென்டினா ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

    தற்போது அர்ஜென்டினா உலகக் கோப்பை அணியில் அங்கம் வகிக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு அவர் அதிக விசுவாசத்தையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று நம்பும் சில அர்ஜென்டினா ரசிகர்களிடமிருந்து இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இது குறித்து பேசிய யாமிலா ரோட்ரிக்ஸ், "தேசிய அணியில் மெஸ்சி எங்கள் கேப்டன், ஆனால் ரொனால்டோ எனது உத்வேகம் மற்றும் வழிபடும் உருவம் என்று நான் கூறுவதால், நான் மெஸ்சியை வெறுக்கிறேன் என்று அர்த்தம் இல்லை.

    நான் எப்போது மெஸ்சிக்கு எதிரானவள் என்று சொன்னேன்? நான் சொல்லாத விஷயங்களைச் சொல்வதை நிறுத்துங்கள். நான் மிகவும் கடினமான விமர்சனங்களை சந்திக்கிறேன். நம் நாட்டு வீரர்களை மட்டுமே நாம் நேசிக்கவேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.

    என்று யமிலா கூறினார்.  

    • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    • கொலம்பியா முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.
    • நார்வே அணி, சுவிட்சர்லாந்துடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததது.

    மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் தென் கொரியா அணிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கால்பந்து மைதானத்தில் மோதின.

    இந்த போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. கொலம்பியா முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகள் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கொலம்பியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இதேபோல தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நார்வே அணி, சுவிட்சர்லாந்துடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததது.

    • ஆட்டம் முழுவதும் ஏறக்குறைய 67 சதவீதம் பந்து நியூசிலாந்து வசமே இருந்தது.
    • இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

    வெலிங்டன்:

    பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.

    6-வது நாளான இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியே வெற்றி பெறும் என்று பலரும் நினைத்தனர். அதற்கேற்றவாறு போட்டியின் பெரும்பாலான நேரங்களில் பந்து அவர்களின் வசமே இருந்தது.

    ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தங்களது முதல் உலகக் கோப்பை போட்டியில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் அணி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் வீராங்கனை சரீனா போல்டன் முதல் கோல் அடித்தார். இதன் மூலம் பிலிப்பைன்ஸ் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

    இரண்டாவது பாதியில் நியூசிலாந்து அணியின் வசமே பந்து அதிக நேரம் இருந்தது. அவர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சியை பிலிப்பைன்ஸ் கோல் கீப்பர் ஒலிவியா மெக்டானியல் அற்புதமாகத் தடுத்தார். அணியின் வெற்றியில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு. இரண்டாவது பாதியில் இரு அணியாலும் கோல் அடிக்கமுடியவில்லை.

    ஆட்டம் முழுவதும் ஏறக்குறைய 67 சதவீதம் பந்து நியூசிலாந்து வசமே இருந்தது. ஆனால் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிலிப்பைன்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மகளிர் உலகக் கோப்பையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது.
    • இன்றைய லீக் ஆட்டங்களில் கொலம்பியா-தென்கொரியா, நியூசிலாந்து-பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் மோதுகின்றன.

    மெல்போர்ன்:

    பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அமெரிக்கா, முன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனி, ஜப்பான், நார்வே உள்ளிட்ட 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் 5-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆக்லாந்தில் நடந்த (ஜி பிரிவு) ஆட்டம் ஒன்றில் இத்தாலி-அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில், மாற்று வீராங்கனையாக களம் கண்ட இத்தாலியின் கிறிஸ்டினா ஜிரெலி 87-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக அமைந்தது. முடிவில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

    அர்ஜென்டினா ஆண்கள் அணி உலகக் கோப்பையை வென்று இருந்தாலும், பெண்கள் அணியை பொறுத்தமட்டில் இன்னும் கொஞ்சம் கத்துக்குட்டி தான். 4-வது முறையாக உலகக் கோப்பையில் ஆடும் அர்ஜென்டினா பெண்கள் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட சுவைத்தது கிடையாது என்பது நினைவுகூரத்தக்கது.

    மெல்போர்னில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ('எச்' பிரிவு) 2 முறை சாம்பியனான ஜெர்மனி எதிர்பார்த்தது போல் 6-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான மொராக்கோவை ஊதித்தள்ளியது. பந்தை அதிக நேரம் (75 சதவீதம்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி தரப்பில் கேப்டன் அலெக்சாண்ட்ரா போப் 2 கோலும் (11-வது, 39-வது நிமிடம்), கிலாரா புல் (46-வது நிமிடம்), லீ ஸ்சுலெர் (90-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். மேலும் எதிரணியினரின் கவனக்குறைவு காரணமாக இரு சுயகோலும் கிடைத்தன.

    அடிலெய்டில் நடந்த ('எப்' பிரிவு) இன்னொரு ஆட்டத்தில் வலுவாக கோலோச்சிய பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான பனாமாவை பந்தாடியது. பிரேசில் அணியில் ஆரிடினா போர்ஜெஸ் (19-வது, 39-வது, 70-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோல்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் தனது அறிமுக ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல்கள் அடித்த முதல் பிரேசில் வீராங்கனை என்ற பெருமையை ஆரிடினா போர்ஜெஸ் பெற்றார்.

    இன்றைய லீக் ஆட்டங்களில் கொலம்பியா-தென்கொரியா, நியூசிலாந்து-பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் மோதுகின்றன.

    • ஜெர்மனி 6-0 என மொரோக்கோ அணியை வீழ்த்தியது
    • பிரேசில் பனாமாவை 4-0 என பந்தாடியது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இத்தாலி 1-0 என வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் மொரோக்கோ அணியை ஜெர்மனி துவம்சம் செய்து 6-0 என வெற்றி பெற்றது. அதேபோல் பனாமா அணியை 4-0 என பிரேசில் வீழ்த்தியிருந்தது.

    இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் கொலம்பியா- தென்கொரியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்திய நேரப்படி 11 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து- பிலிப்பைன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதியம் ஒன்றரை மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து- நார்வே அணிகள் விளையாடுகின்றன.

    • போர்ச்சுக்கல் 0-1 எனத் தோல்வியை தழுவியது
    • ஜமைக்காவுக்கு எதிராக பிரான்ஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லை

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சுவீடன் 2-1 எனவும், போர்ச்சுக்கல் அணிக்கு எதிராக நெதர்லாந்து 1-0 எனவும் வெற்றி பெற்றன. பிரான்ஸ்- ஜமைக்கா இடையிலான ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

    இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் இத்தாலி- அர்ஜென்டினா அணிகளும், மதியம் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி மொரோக்கோ அணிகளும், மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் பனமா அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    • ஸ்பெயின் 3-0 என கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது
    • நைஜீரியா- கனடா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து- பிலிப்பைன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-0 என வெற்றி பெற்றது.

    'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்பெயின்- கோஸ்டா ரிகா இடையிலான போட்டியில் ஸ்பெயின் 3-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள நைஜீரியா- கனடா இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

    'ஏ' மற்றும் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் தலா ஒரு போட்டிகளில் விளையாடிவிட்டன. 'ஏ' பிரிவில் சுவிட்சர்லாந்து முதல் இடத்திலும், பி பிரிவில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் உள்ளன.

    தற்போது அமெரிக்கா- வியட்நாம் இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. அதன்பின் ஜப்பான்- ஜாம்பியா (இந்திய நேரப்படி 12.30), இங்கிலாந்து- ஹெய்தி (15.00), டென்மார்ச்- சீனா (17.30) அணிகள் விளையாடுகின்றன.

    • ஆஸ்திரேலியா 1-0 என அயர்லாந்து அணியை வீழ்த்தியது
    • நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை தோற்கடித்தது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. குரூப் 'ஏ' சுற்றில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நார்வே அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹன்னா விகின்சன் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஸ்டெபானி காட்லே கோல் அடித்தார்.

    இன்று மூன்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நைஜீரியா- கனடா அணிகள், 2-வது போட்டியில் பிலிப்பைன்ஸ்- சுவிட்சர்லாந்து அணிகள், 3-வது போட்டியில் ஸ்பெயின்- கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.

    32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதிவரை நடைபெறுகிறது. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் இருந்தும் முதல் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். 

    • அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

    சென்னை:

    10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் பிரபலமான பிரிமீயர் லீக் கால்பந்தில் பர்ன்லி, போல்டன் ஆகிய கிளப் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

    57 வயதான ஓவென் கோயல் கூறுகையில், 'சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவது உண்மையிலேயே உற்சாகம் தருகிறது. கடைசியாக சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த கிளப் ஏற்கனவே இரு முறை பட்டம் வென்றுள்ளது. அதே போன்று மீண்டும் சாதிக்க முயற்சிப்போம். புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.

    • பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர், பிரதரை சந்தித்தார்
    • பிரான்சில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்

    பிரதமர் மோடி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரான்ஸில் வசித்து வரும் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் உரையாற்றினார். அப்போது, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் பிரான்ஸ் நாட்டின் எம்பாப்பே குறித்து பேசினார்.

    எம்பாப்வே குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ''இந்திய இளைஞர்களிடையே எம்பாப்பே சூப்பர் ஹீரோவா திகழ்கிறார். எம்பாப்பே-ஐ அனேகமாக பிரான்சைவிட இந்திய மக்கள் அதிகமானோருக்கு தெரிந்திருக்கலாம்'' என்றார்.

    பிரெஞ்ச் லீக் மற்றும் சர்வதேச போட்டிகளில் எம்பாப்பே அபாரமாக விளையாடி வருகிறார். உலகக்கோப்பை கால்பந்தில் அர்ஜென்டினாவிற்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்காவில் பேஸ்பால் போட்டிக்கிடையெ கிரிக்கெட்டும் வளர்ந்து வருகிறது என்றார்.

    ×