search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு பக்ரைன் வீராங்கனை இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
    • அமெரிக்க வீராங்கனை பிரிட்டானி பிரவுன் 22.20 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்ட பந்தயம் இந்திய நேரப்படி நள்ளிரவு 1.10 மணிக்கு நடைபெற்றது. தகுதி சுற்று மற்றும் அரைஇறுதி மூலம் டாப் 8 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் அமெரிக்காவை சேர்ந்த கேப்ரியல் தாமஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 21.83 வினாடியில் கடந்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்ற செயின்ட் லூசியா வீராங்கனை ஜூலியன் ஆல்பிரட் 22. 08 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை பிரிட்டானி பிரவுன் 22.20 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினார்கள்.

    பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் புதிய ஒலிம்பிக் சாதனை படைக்கப்பட்டது. பக்ரைனை சேர்ந்த வின்பிரட் யாவி பந்தய தூரத்தை 8 நிமிடம் 52.76 வினாடியில் கடந்து சாதனை படைத்து தங்கம் 2008-ம் ஆண்டு பெய்விங் ஒலிம்பிக் வென்றார்.

    இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ந்த ஹால்கினா 8 நிமிடம் 58.81 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு பக்ரைன் வீராங்கனை இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

    பெருத்செமுடை (உகாண்டா) 8 நிமிடம் 53.34 வினாடியில் கடந்து வெள்ளியும், பெய்த் செரோட்டிச் 8 நிமிடம் 55.15 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோள் ஹாக்கர் தங்கம் வென்றதோடு புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 27.65 வினாடியில் கடந்தார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நார்வேயை சேர்ந்த ஜேக்கப் இன்கேபிரிகிட்சன் 3 நிமிடம் 28.32 வினாடியில் கடந்தே சாதனையாக இருந்தது.

    இங்கிலாந்தின் ஜோஷ் கெர் 3 நிமிடம் 27.69 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீரர் பாரெட் நுகுஸ் 3 நிமிடம் 27.80 வினாடியில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

    ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மில்டியாடிஸ் 8.48 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். ஜமைக்காவுக்கு வெள்ளியும் (வெய்ன் பின்னாக், 8.36 மீட்டர் தூரம்), இத்தாலிக்கு (புர்லானி, 8.34 மீட்டர் தூரம்) வெண்கலமும் கிடைத்தன.

    பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் கனடா வீராங்கனை கேம்ரின் ரோஜர்ஸ் 76.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். அமெரிக்காவை சேர்ந்த எச்சிகுன்வோக் 75.48 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளியும், சீன வீராங்கனை ஜி ஜாவ் 74.37 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலமும் கைப்பற்றினார்கள்.

    • பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.
    • இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார். இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

    வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

     

    அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார். வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.

    இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள்.

     

    வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அவினாஷ் சாப்லே (ஆண்கள் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதி சுற்று), நள்ளிரவு 1.13 மணி.
    • இந்தியா- ஜெர்மனி (பெண்கள் அணிகள் பிரிவு காலிறுதி ஆட்டம்), பிற்பகல் 1.30 மணி.

    ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-

    தடகளம்:-

    சுரஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி (மாரத்தான் நடைபந்தயம் கலப்பு அணிகள் பிரிவு), காலை 11 மணி. சர்வேஷ் குஷாலே (ஆண்கள் உயரம் தாண்டுதல் தகுதி சுற்று), பிற்பகல் 1.35 மணி. ஜோதி யர்ராஜி (பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் தகுதி சுற்று), பிற்பகல் 1.45 மணி. அப்துல்லா, பிரவீன் சித்ரவேல் (ஆண்கள் டிரிபிள்ஜம்ப் தகுதி சுற்று), இரவு 10.45 மணி. அவினாஷ் சாப்லே (ஆண்கள் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் இறுதி சுற்று), நள்ளிரவு 1.13 மணி.

    கோல்ப்:-

    அதிதி அசோக், தீக்ஷா தாகர் (பெண்கள் பிரிவு முதல் சுற்று), பகல் 12.30 மணி.

    டேபிள் டென்னிஸ்:-

    இந்தியா- ஜெர்மனி (பெண்கள் அணிகள் பிரிவு காலிறுதி ஆட்டம்), பிற்பகல் 1.30 மணி.

    மல்யுத்தம்:-

    அன்திம் பன்ஹால் (இந்தியா)- ஜெய்னெப் யெட்கில் (துருக்கி), (பெண்களுக்கான 53 கிலோ பிரீஸ்டைல் காலிறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி. வினேஷ் போகத் (இந்தியா)-சாரா ஹில்டுபிரான்டு(அமெரிக்கா) (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் இறுதிப்போட்டி), நள்ளிரவு 12 மணி.

    பளுதூக்குதல்:-

    மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவு) இரவு 11 மணி.

    • ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
    • இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

    துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.

    இதனால் போட்டி விறுவிறுப்பானது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

    இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர். இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது.

    இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜெர்மனி அணி ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

    • கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
    • வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

    பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்து ஸ்கோர் செய்து வந்த வினேஷ் போகத் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

     


    இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி விட்டது. இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்றிரவு 11.23 மணிக்கு துவங்க உள்ளது. 

    • இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.
    • அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப். உங்களின் வலிமையும் உறுதியும் ஊக்கமளிக்கிறது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டியில் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிஃப்

    ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தின் ஜான்ஜேம் சுவானாபெங்கை கெலிஃப் எதிர்கொள்கிறார்.

    குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமானே கெலிஃப் பதக்கம் வெல்வது உறுதி ஆகியுள்ளது.

    குத்துச்சண்டை லீக் சுற்றில் இமானே கெலிஃப் ஒரு 'ஆண்' என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மன்னிப்பு கோரியுள்ளார். "இந்தச் சர்ச்சை அனைத்தும் என்னை வருத்தமடையச் செய்கிறது. எனக்கு எதிராக விளையாடிய இமானே கெலிஃப்பை நினைத்து நான் வருந்துகிறேன். நான் இமானே கெலிஃப்பிடமும் மற்ற அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இமானே கெலிஃப்புக்கு திமுக எம்.பி., கனிமொழி ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "எப்போதுமே தலை நிமிர்ந்து நிற்கும் பெண்களின் பெண்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. அன்று சாந்தி.. இன்று இமானே கெலிஃப். உங்களின் வலிமையும் உறுதியும் ஊக்கமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதிபெற்றார்.
    • யூ சுசாகி நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டார்.

    இதில் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வினேஷ் போகத் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    தொடர்ந்து மாலையில் நடைபெற்ற காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்திய வினேஷ் போகத் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இதுவரை சர்வதேச போட்டிகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை முதன்முதலாக தோற்கடித்த பெருமையை பெற்றுள்ளார் வினேஷ் போகத்.

    யூ சுசாகி இதுவரை தான் விளையாடிய 82 சர்வதேச போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்பதும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 4 முறை உலக சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராடினர்.
    • ஜப்பானின் சுசாகியை அவர் வீழ்த்தியது அசாதாரணமானது. அவருக்கு எனது வாழ்த்துகள்

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.

    இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்

    பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "வலியை அனுபவித்து வந்த வினேஷ் போகத் பதக்கம் வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். களத்தில் அவரது உழைப்பு தெரிகிறது. ஜப்பானின் சுசாகியை அவர் வீழ்த்தியது அசாதாரணமானது. அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

    பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய வீராங்கனைகளில் வினேஷ் போகத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதியில் ஸ்பெயின் அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டது.
    • இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 4-0 என அபார வெற்றி பெற்றது.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் ஹாக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    முதல் அரையிறுதியில் நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு ஸ்பெயின் அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இறுதியில், நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

    இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

    • 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.
    • இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.

    இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்

    இந்நிலையில், வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் வினேஷ் போகத் , பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
    • ஈட்டி எறிதல், மல்யுத்தத்தில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும், ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைமை அதிகாரியுமான நீடா அம்பானி, இரட்டை பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    டோக்கியோ விளையாட்டுகளுக்குப் பிறகு, 'உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், மீதமுள்ளவற்றை கடவுளிடம் விட்டுவிடுங்கள்' என்று நமக்குக் கற்பிக்கும் நமது பண்டைய வேதமான பகவத் கீதையின் ஞானத்தைப் பின்பற்றியதாக மனு கூறினார். அதைத்தான் அவர் செய்தார்.

    3 ஆண்டுக்குப் பிறகு விளையாட்டுகளில் அவர் தனது தேசத்தின் தலைவிதியை மாற்றினார் என தெரிவித்தார்.

    • இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3 சுற்றிலும் தோல்வி அடைந்தது.
    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் ஜோடி, சீன ஜோடியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றிலும் இந்தியா தோற்றது.

    இதையடுத்து சீனா இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    ஈட்டி எறிதல் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.

    ×