search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் டேவிடோவிச்

    போகினாவை சந்தித்தார்.

    இந்த ஆட்டத்தின் முதல் செட்டை மெத்வதேவ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார்.

    இதன்மூலம் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்ற மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 18-வது வெற்றி இதுவாகும்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் மெத்வதேவ் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    • ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் அல்காரஸ் பெற்ற 100-வது வெற்றி இதுவாகும்.
    • இவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமை பெற்றார்

    வாஷிங்டன்:

    இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூரை சந்தித்தார்.

    இதில் அல்காரஸ் 7-6 (7-4), 6-3 என்ற நேர்செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் 132-வது ஆட்டத்தில் ஆடிய அல்காரஸ் ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அவர் செஞ்சுரி வெற்றியை குறைந்த போட்டியில் எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அமெரிக்க ஜாம்பவான் ஜான் மெக்கன்ரோ 131 ஆட்டங்களில் 100-வது வெற்றியை அடைந்து முதலிடத்தில் உள்ளார்.

    • சர்வதேச டென்னிஸ் அரங்கில் மார்டா கோஸ்ட்யுக் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.
    • போட்டி முடிவடைந்ததும் பரஸ்பரம் வீராங்கனைகள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் மார்டா கோஸ்ட்யுக், வர்வரா கிரச்சேவாவுடன் கைகுலுக்காமல் விலகிச் சென்றார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் மகளிருக்கான ஏடிஎக்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.

    இதன் இறுதிப்போட்டியில் 52-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக், 66-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் வர்வரா கிரச்சேவாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20 வயதான மார்டா கோஸ்ட்யுக் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    சர்வதேச டென்னிஸ் அரங்கில் மார்டா கோஸ்ட்யுக் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். வர்வரா கிரச்சேவாவை வீழ்த்தியதும் டென்னிஸ் களத்தில் கண்ணீர் விட்டு அழுதார் மார்டா கோஸ்ட்யுக். போட்டி முடிவடைந்ததும் பரஸ்பரம் வீராங்கனைகள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் மார்டா கோஸ்ட்யுக், வர்வரா கிரச்சேவாவுடன் கைகுலுக்காமல் விலகிச் சென்றார்.

    மார்டா கோஸ்ட்யுக் கூறும்போது, "தற்போது நாங்கள் இருக்கும் நிலையில் இந்த பட்டத்தை வென்றதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். இந்த கோப்பையை உக்ரைனுக்கும், களத்தில் போராடி இறக்கும் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார்.

    ஏடிஎக்ஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலம் மார்டா கோஸ்ட்யுக், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 40-வது இடத்துக்கு முன்னேறினார்.

    • செர்பிய வீரர் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
    • இதனால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் துபாய் ஓபன் டென்னிசில் அரையிறுதியில் தோற்ற போதிலும் ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அவர் முதலிடத்தில் இருப்பது இது 379-வது வாரமாகும். அதிக வாரங்கள் முதலிடத்தை அலங்கரித்து சாதனை படைத்துள்ளார் ஜோகோவிச்.

    இந்நிலையில், இண்டியன்வெல்ஸ் ஓபன் மற்றும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் முறையே வருகிற 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும், 22-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரையும் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கிடைக்காததால் 'நம்பர் ஒன்' வீரரும், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விலகி இருக்கிறார்.

    கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஜோகோவிச் தனக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்க அரசு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து அவர் இந்தப் போட்டியில் இருந்து பின்வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொள்ள மெல்போர்ன் சென்ற ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இதேபோல் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியையும் அவர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத்தில் தனது கடைசி போட்டியில் சானியா மிர்சா ஆடினார்.
    • கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

    ஐதராபாத்:

    டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த மாதம் துபாய் ஓபன் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.

    36 வயதான சானியா மிர்சா 2005-ம் ஆண்டில் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் ஓபனை வென்றார். அவர் கைப்பற்றிய ஒரே டபிள்யூ.டி.ஏ. பட்டம் இதுதான். அதே சமயம் கிராண்ட்ஸ்லாமில் 6 இரட்டையர் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். கிராண்ட்ஸ்லாம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை இவர் தான்.

    இந்நிலையில், சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கும் வகையில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க வந்த சானியாவுக்கு இளம் ரசிகைகள் இருபுறமும் பேட்டை உயர்த்தி நின்று கவுரவம் அளித்தனர்.

    தனது கடைசி டென்னிஸ் போட்டியில் அடியெடுத்து வைத்த சானியாவுடன் சக நாட்டு வீரர் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோர் இணைந்து விளையாடினர். இரு கலப்பு காட்சி போட்டியிலும் சானியா மிர்சா வெற்றி பெற்றார். அப்போது சானியா மிர்சா உருக்கமுடன் பேசியதாவது:

    2002-ம் ஆண்டு இங்கு தேசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில் இருந்து எனது டென்னிஸ் பயணம் தொடங்கியது. இந்தியாவுக்காக 20 ஆண்டு விளையாடியது சிறந்த கவுரவமாகும்.

    இந்தியாவுக்காக சாதிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளின் கனவாக இருக்கும். அதை நான் நிறைவு செய்து விட்டேன். நினைத்ததை விட அதிகமாக சாதித்து இருக்கிறேன். எனது கடைசி போட்டியை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடியது, பரவசமளிக்கிறது. அவர்களின் ஆதரவும், உற்சாகமும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கிறது. இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது. இனி களத்தில் உங்களை (ரசிகர்கள்) எல்லாம் தவற விடப்போகிறேன்.

    தெலுங்கானா மாநில அரசுடனும், மாநில விளையாட்டு ஆணையத்துடனும் இணைந்து பணியாற்றி இன்னொரு சானியாவை நிச்சயம் உருவாக்குவேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். நமக்கு இன்னும் நிறைய சானியாக்கள் தேவை. அதற்காக பணியாற்றுவேன் என குறிப்பிட்டார்.

    • துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.

    துபாய்:

    துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 2ம் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்,

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மசாக் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்,

    • டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் இருந்தவர் ஸ்டெபி கிராப்.
    • இவரது சாதனையை செர்பிய வீரர் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.

    நியூயார்க்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6,980 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6,780 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், கிரீசின் சிட்சிபாஸ் 5,805 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 2 இடம் சரிந்து 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஜோகோவிச் 'நம்பர் ஒன்' இடத்தில் பயணிப்பது இது 378-வது வாரமாகும். 2011-ம் ஆண்டு ஜூலையில் தனது 24-வது வயதில் முதல்முறையாக 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்த அவர் அப்போது தொடர்ச்சியாக 122 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு சில சறுக்கலுக்கு பிறகு மீண்டும் முதலிடத்துக்கு வந்தார். இப்படியே ஏறுவதும் இறங்குவதுமாக உள்ள ஜோகோவிச் கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியதும், அல்காரசை பின்னுக்குத் தள்ளி மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், ஜோகோவிச் சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஒட்டுமொத்தத்தில் அதிக வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதற்கு முன் 22 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபிகிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை ஜோகோவிச் தகர்த்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜோகோவிச் வெளியிட்ட வீடியோ பதிவில், அதிக வாரங்கள் முதலிடம் வகிக்கும் சாதனை வரிசையில் ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்டெபி கிராப்பை முந்தியுள்ளேன். இச்சாதனை உண்மையிலேயே மிக மிக பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்தார்.

    • மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார்
    • சில நேரங்களில் இருவரும் மோசமாக விளையாடியதாக மெத்வதேவ் கூறினார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    இதுபற்றி மெத்வதேவ் கூறுகையில், 'இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது, ஏனெனில் காற்று அதிகம் வீசியது. இன்று கடுமையான போராட்டமாக இருந்தது. சில நேரங்களில் நாங்கள் இருவரும் மோசமாக விளையாடினோம், சில சமயங்களில் இருவரும் நன்றாக விளையாடினோம்' என்றார்.

    • போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
    • போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

    இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.

    பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    • முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி தோல்வியடைந்து வெளியேறியது.
    • சானியா மிர்சா பெண்கள் 6 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.

    பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (வயது 36) துபாயில் நடைபெறும் டபிள்யு.டி.ஏ. போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில், தோல்வியடைந்த நிலையில் அவர் ஓய்வு பெற்றார்.

    மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா- மேடிசன் கீஸ் ஜோடி, ரஷியாவின் வெரோனிகா-லியுத்மிளா ஜோடியிடம் 4-6, 0-6 என தோல்வியடைந்து வெளியேறியது.

    சானியா பெண்கள் இரட்டையர் பிரிவில் 3 கிரண்ட்சிலாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார். 2015ல் விம்பிள்டன், அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 2016-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சா 3 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றார். 2009-ல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும், 2012-ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும், 2014-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

    ×