search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • பொதுவாக ஒரு புயல் கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வார காலம் எடுக்கும்.

    வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தீபாவளி பண்டிகை வரும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையின்போது மழைக்கான வாய்ப்பும் அதிகளவில் இருக்கும். இதனால் பண்டிகை கொண்டாட்டம் களையிழந்து காணப்படும். அந்த வகையில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    அந்த நாளில் மழை இருக்குமா? என்ற கேள்வி, தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் பலருக்கு இருக்கும். அவர்களுக்கு தீபாவளியன்றும், அதற்கு முந்தைய நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது.

    காரணம், வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 21-ந்தேதி உருவாகும், தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக 23-ந்தேதி வலுப்பெற்று, அதன் பின்னர் வடக்கு ஆந்திரா-வங்காளதேசம் இடையே கரையை கடக்க உள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்தால் அடுத்த நிகழ்வு உருவாக ஒரு வார காலம் எடுக்கும்.

    அதன்படி, தமிழ்நாட்டில் இந்த புயலால் ஈரப்பதம் அனைத்தும் இழுக்கப்பட்டு, வறண்ட காற்றே இருக்கும். இதனால் 22-ந்தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் கோடை காலம் போல வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதிக்கு பிறகே வடகிழக்கு பருவமழைக்கான சூழல் தொடங்குகிறது.

    எனவே இடைப்பட்ட நாட்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவே. எனவே இந்த ஆண்டு மழை இல்லாமல் தீபாவளி பண்டிகை இருக்கும் என்பது வானிலை ஆய்வாளர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

    • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    • அ.தி.மு.க. தற்போது சரியாக இல்லை.
    • அதிமுகவில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன.

    சென்னை:

    சென்னையில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    அ.தி.மு.க. தற்போது சரியாக இல்லை. அ.தி.மு.க.வில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டியுள்ளன.

    கட்சியை வலுப்படுத்தி 2026-ல் நிச்சயம் ஆட்சி அமைப்போம். சொத்து பிரிப்பது போல் அரசாங்கத்தைப் பிரித்துள்ளார்கள்.

    பெரிய பிள்ளைக்கு இது, கடைக்குட்டி பிள்ளைக்கு இது என அந்தக் காலத்தில் பெரியவர்கள் சொத்து பிரிப்பார்கள். அதேபோல் தான் தற்போது இவர்கள் அரசாங்கத்தைப் பிரித்து வைத்துள்ளார்கள்.

    பல்லாயிரம் கோடி ரூபாய் சென்னையினுடைய வளர்ச்சிக்காக செலவு செய்து உள்ளோம் என அரசு சொல்கிறது. ஆனால் அப்படி செலவு செய்திருந்தால் ஒரு நாள் மழைக்கு எப்படி சென்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஏழை மக்களுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படவில்லை.

    எந்த வேலைகளையும் சரிவர செய்ய முடியவில்லை. நான் சொல்வதைக் கேட்டு இப்போதாவது இதனை சரிசெய்யுங்கள்.

    ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கோடை நாட்களிலேயே சென்னையில் உள்ள 3 கூவம் ஆறுகளையும் தூர்வாரி விடுவோம். ஆனால் ஜெயலலிதா செய்ததை தி.மு.க.வினர் செய்யவில்லை.

    ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தியதே தவிர, மழை வெள்ளத்திலிருந்து மக்களைக் காக்க தவறிவிட்டது என தெரிவித்தார்.

    • பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    • டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது.

    சென்னை தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களை ஒட்டி ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது.

    தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் டிடி தமிழ் நிகழ்ச்சியில் இந்தி மாதம் கொண்டாட்டங்கள் நடந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    ஒன்றிய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • சென்னையில் கடந்த 3 நாட்களில் 14 ஆயிரம் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
    • கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர்.

    சென்னையில் கனமழை பெய்த கடந்த மூன்று நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையில் 14ம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15ம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    அதபோல், சென்னையில் 16ம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர்.

    • தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
    • மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு

    கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

    அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.

    மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக வழக்கு.
    • சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவு.

    சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கில், சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின்போது, காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம் என்றும் அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது என்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார்.

    • முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒரு வீட்டுக்கு ரூ/1.20 லட்சம் ஒன்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.83 கோடி என மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும்.
    • யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் அறிவாலயத்தில் அம்மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமையில், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது, வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    வரும் 2026 சட்டசபை தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஏன் தனக்கே கூட இடம் இல்லாமல் போகலாம்.. அதனால், யார் நிறுத்தபட்டாலும் யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.

    சட்டசபை தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள் என்பதை யார் நிறுத்தினாலும் வெற்றி பெற செய்யவேண்டு

    தலைவர் யாரை கழக வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர்தான் நம் கண் முன் தெரிய வேண்டுமே தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது.

    முதலமைச்சரின் உணர்வோடு நீங்கள் செயல்பட வேண்டும். கழகத்திற்காக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளிக்கு பொதுமக்களுக்கு பருப்பு கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது.
    • ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை மறைத்து விட்டார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாட்டு நீக்க முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல ரேசன் கடைகளில் பருப்பு இருப்பு இருப்பதில்லை. தீர்ந்தவுடன் நாளை துவரம் பருப்பு லோடு எப்போது வரும் என்று தெரியாது. வந்தவுடன் வழங்குகின்றோம். நாளைக்கு வாருங்கள் இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று மக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள்.

    முதல்வரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலைதான் என்பதை அமைச்சர் சக்கரபாணி உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ரேசன் கடை குறியீடு எண் சிபி 047 துவரம் பருப்பு இருப்பு இல்லை".

    தமிழக பாஜக மக்கள் குறைகளை தீர்க்கக்கூடிய நியாயமான எதிர்கட்சியாக செயல்படுகின்ற எண்ணத்தில் தான் இந்த அறிக்கையை வெளியிடுகிறது. எதிர்க்கட்சியாக திமுக நினைக்காமல் மக்களுடைய பிரச்சனைகளை பாஜக சுட்டிக்காட்டும் பொழுது அதனுடைய உண்மை நிலையை அறிந்து கொண்டு மக்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.

    இதன் அடிப்படையில் பருப்பு கொள்முதலில் நடந்த, தரக்குறைவான பருப்பை கொள்முதல் செய்ததில் நடந்துள்ள 100 கோடி ரூபாய் ஊழல் அல்லது தமிழக அரசுக்கு ஏற்பட்ட நூறு கோடி இழப்பு குறித்து பொறுப்பு உள்ள எதிர்க்கட்சியாக மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் பாஜகவிற்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொறுப்பு கொள்முதலில் நடந்துள்ள 100 கோடி ரூபாய் ஊழல் குறித்த ஆதாரங்களை வெளியிடுகின்றேன்.

    தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில் தடையின்றி கிடைக்கும் அமைச்சர் அர.சக்கரபாணி கடந்த 16-ந்தேதி அன்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தது உண்மை அல்ல.


    தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகள் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பருப்பு லோடுகள் நியாய விலை கடைகளுக்கு சென்றடையாததால் ரேசன் கடைகளில் பருப்பு இருப்பு இருப்பதில்லை. பருப்பு தீர்ந்தவுடன் நாளை லோடு வரும், நாளைக்கு வாருங்கள், இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று மக்கள் அலைகழிக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை நிலை.

    முதல்வரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலைதான் என்பதை அமைச்சர் சக்கரபாணி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கையில், "அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் கடந்த 15-ந்தேதி வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. 2.04 கோடி பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97.83 லட்சம் பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன" என்று உண்மை சூழ்நிலையை மறைத்து அறிக்கை வெளியிட்டு விட்டு தன் கடமையை வழக்கம் போல முடித்து விட்டார். ஆனால் தமிழகம் முழுதும் உள்ள ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை மறைத்து விட்டார்.

    தற்போது முதல் கட்டமாக தீபாவளி துவரம் பருப்பு கொள்முதலில் நடந்துள்ள 100 கோடி ரூபாய் ஊழலின் பின்னணி விவரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10.9.2024-ம் தேதி அன்று தமிழ்நாடு நுகர் பொருள் கழகத்திலிருந்து துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்களுக்கு டெண்டர் கோரியிருந்தது.

    இதில் துவரம் பருப்பிற்கு 16 நிறுவனங்களும் / 8 நிறுவனங்கள் பாமாயிலுக்கும் கலந்து கொண்டது.

    இதில் இந்திய வகை துவரம் பருப்பினை கிலோ ஒன்றிற்கு ரூ.133-க்கு அக்ரிகோ என்ற நிறுவனம் 12000 மெட்ரிக் டன் கோரி இருந்தது.

    மேலும் இறக்குமதி செய்யும் துவரம் பருப்பிற்கு ரூ.137.89 என்ற விலையில் ரஜினி எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் 18000 மெட்ரிக் டன் விலை கோரியிருந்தது.

    அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் கனடா மஞ்சள் பருப்பு என்ற வகையை கிலோ ஒன்றுக்கு ரூ.138.40 என்று C.P. Foods என்ற நிறுவனம் 12000-க்கு விலை கோரியிருந்தது.

    ஆனால் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் நெகோசியேசன் என்ற போர்வையில் துவரம் பருப்பு விலை குறைவாக கிடைக்க வாய்ப்பு இருந்தும், துவரம் பருப்பை விட விலை ரூ.20 –30 வரை விலை குறைவாக உள்ள கனடா மஞ்சள் பருப்புக்கு ரூ.131 என்ற விலைக்கு அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனர் சேர்ந்து 16.09.2024 அன்று 51000 மெட்ரிக் டன்க்கு 5 நிறுவனங்களுக்கு வழங்கி விட்டார்கள்.

    கம்பெனி விபரங்கள் கீழ்வருமாறு:–

    1) புட்ஸ் – 47000 மெட்ரிக் டன்

    2) இண்டக்ரேட்டட் சர்வீஸ் பாண்ட் – 4700 மெட்ரிக் டன்

    3) மும்பை பாட்டா இன்டர் நேஷனல் லிமிடட் – 4700 மெட்ரிக் டன்

    4) வாசுமதி டிரடேர்ஸ் – 4700 மெட்ரிக் டன்

    5) மூர்த்தி டிரேடர்ஸ் – 3000 மெட்ரிக் டன்

    ---------------------------

    மொத்தம்- 20000 மெடன்

    ----------------------------

    இந்த 20000 மெடன் பருப்பு வகைகளை இந்த மாதம் 16.10.2024-ம் அன்று சப்ளை செய்த முடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். ஆனால் இன்று வரை 4000 மெடன் மட்டுமே சப்ளை செய்து உள்ளார்கள்.

    இதனால் தீபாவளிக்கு பொதுமக்களுக்கு பருப்பு கிடைக்காமல் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், ஒப்பந்ததாரர்கள் பருப்பு இருப்பு இல்லாமல் இனிமேல் வரும் விலை குறைந்த பொருளை ரூ.131-க்கு சப்ளை செய்து அதிக லாபம் கிடைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு நிர்வாக இயக்குனரும் துறை அமைச்சரும் உடந்தையாக உள்ளார்கள். இதனால் அரசுக்கு குறைந்தது 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நூறு கோடி ரூபாய் ஊழலில் அமைச்சரின் பங்கு, அதிகாரிகளின் பங்கு மற்றும் இடைத்தரகர்கள் பங்கு குறித்தும் தமிழக முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். பொது மக்களுக்கு அளிக்கப்படும் துவரம் பருப்பின் தரத்தை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • நியோ மேக்ஸ் நிதி மோசடி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தனர்.

    இந்த நிதி நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், நிர்வாக இயக்குநர்களான மதுரை கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகர் திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 35க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, " நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை இதுவரை முடக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், இந்த வழக்கில் என்ன தான் நடக்கிறது. இன்னும் எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தொடர்ந்து, அக்டோபர் 19ம் தேதிக்குள் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து, அவற்றை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்கதரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை சோளிங்கர் சாலையில் ஏழுமலை (வயது 44 ) என்பவர் பேக்கரி மற்றும் சுவீட் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ஏழுமலை மற்றும் கடை ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பேரும் கடையின் உள்ளே இருந்த மிக்சர், சுவீட், கேக் ஆகியவற்றை வயிறார ருசித்து சாப்பிட்டனர். நன்றாக வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் திருப்பதி உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் மீண்டும் மறுநாள் காலை ஏழுமலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் திருப்பதி உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் 2 பேரும் சுவீட், கேக், மிக்சரை ருசித்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது . இது சம்பந்தமாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×