search icon
என் மலர்tooltip icon

    தென் கொரியா

    • தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தவேண்டும் என அமெரிக்காவை வடகொரியா எச்சரித்தது.
    • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    சியோல்:

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    ஆனாலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கடல் பகுதியை நோக்கி சீறிப் பாய்ந்ததாக தெரிவித்தது.

    • ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார்.
    • ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரில் 19 வெளிநாட்டவர்கள் அடங்குவர்.

    சியோல்:

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் 19 வெளிநாட்டவர்களும் அடங்குவர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

    கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    • கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
    • குறுகிய தெருவில் சிக்கித் தவித்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

    இடோவான்:

    தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டு தோறும் அக்டோபர் மாத கடைசியில் நடைபெறும். இந்த திருவிழாவில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இடோவான் மாவட்டத்திற்கு வருகை தருவார்கள். கொரோ தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற நிலையில் பேய் வேடமணிந்த தென் கொரிய மக்கள் இதில் பங்கேற்றனர். ஒரு குறுகிய தெருவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து முன்னோக்கி தள்ளப்பட்ட  பெரிய கும்பலால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் நசுக்கப்பட்டனர்.

    அப்போது மூச்சுத் திணறி உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 


    காயமடைந்தவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சியோல் நகர மீட்புப்படைத் தலைவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் 74 உடல்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தெருக்களில் வைக்கப்பட்டிருந்த  46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படும் வகையில் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்த அறிந்த தென் கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். உடனடியாக காயமடைந்தவர்களை காப்பாற்ற மருத்துவ குழுக்களுக்கு அவர் உத்தரவிட்டதாக அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளார்.

    • இவர் 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார்.
    • சாம்சங் மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    சியோல் :

    தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல பன்னாட்டு நிறுவனமான சாம்சங், செல்போன், டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.

    இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் செயல் தலைவராக லீ ஜே யோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சாம்சங் நிறுவனத்தை நிறுவிய லீ பியுங் பங் குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறை நபராவார். 54 வயதான லீ ஜே யோங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவராக இருந்து வருகிறார். ஜே ஒய் லீ என்றும் அழைக்கப்படும் லீ ஜே யோங் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்த நிலையில் தென்கொரியா அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை வழக்கில் இருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது
    • எல்லை பகுதியருகே வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதிலடி என தகவல்

    சியோல்:

    அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதற்றம் உருவானது.

    இதற்கு பதிலடியாக எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்களை அனுப்பியது பதற்ற சூழலை அதிகரித்துள்ளது.

    இதுபற்றி தென்கொரிய ராணுவம் கூறும்போது, பரஸ்பர எல்லை பகுதியருகே வடகொரியா, 8 போர் விமானங்கள் மற்றும் 4 குண்டுவீச்சு விமானங்கள் என 12 போர் விமானங்களை அனுப்பியது. வானில் இருந்து தரையை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வடகொரிய விமானங்கள் நடத்தக் கூடும் என நம்பப்படுகிறது. எனவே, அதற்கு பதிலடி தரும் வகையில் எங்களது 30 போர் விமானங்களை எல்லையையொட்டிய பகுதிக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளது.

    வடகொரியாவின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கையின் ஒரு முயற்சியாகவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டன எனவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

    • வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
    • அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.

    சியோல்:

    வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்று முன்தினம் அதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

    இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது என தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • வசிப்பிடம் அருகே கீழே விழுந்து வெடித்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
    • ஏவுகணை தோல்வி குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

    சியோல்:

    அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா நேற்றுஅதிகாலை ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. வட கொரியாவின் இந்த மிரட்டலுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க படைகளுடனான பயிற்சியின் போது, ​​தென் கொரிய ராணுவம் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஹியூமூ-2 ஏவுகணையை வீசி சோதனை செய்தது. எனினும் அது குறிப்பிட்ட இலக்கை அடையாமல் தென் கொரியாவின் கடலோர நகரமான கங்னியுங் பகுதியில் கீழே விழுந்து வெடித்ததால் அந்த பகுதியில் வசிப்போர் பீதியடைந்தனர்.

    இந்த ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய ராணுவம் மற்றும் அதிகாரிகள் நீண்ட நேரம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதனால் இது வடகொரியாவின் தாக்குதலாக இருக்க கூடும் என்றும் தென் கொரிய மக்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து பேசிய கங்னியுங் பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதி குவான் சியோங்-டாங், ஏவுகணை தோல்வி குறித்து ராணுவம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனிடையே ஹியூமூ-2 ஏவுகணை, புறநகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் விழுந்ததாகவும், இந்த விபத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று தென் கொரிய கூட்டுப்படை தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது.
    • பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    சியோல்:

    தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் டோஜியோன் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் கீழ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது.

    இதுபற்றி அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்த வாகனங்கள் எரிந்து சேதம் ஆனது. மேலும் அங்கு பணியில் இருந்த 7 தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்டதும் வணிக வளாகம் அருகில் வசித்து வந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அதிர்ஷ்டவசமாக இரவு நேரம் இந்த தீ விபத்து நடந்ததால் பொதுமக்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது.
    • வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைக்கு தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சியோல்:

    ஐ.நா. சபையின் தடை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அரசாங்கம் அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்த சோதனை செய்கிறது. குறிப்பாக, எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இதனிடையே, அணு ஆயுத வல்லமை பெற்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் நேற்று முன்தினம் தென் கொரியாவுக்கு வந்தடைந்தது. ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க போர் கப்பல் தென் கொரியா வந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க போர் கப்பலின் தென் கொரிய வருகைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்துள்ளது. குறுகிய தொலைவு இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணையை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த தகவலை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனையானது கடுமையான ஆத்திரமூட்டல் என்று தென் கொரிய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வடகொரியா மீறுவதாகவும், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு குந்தகளம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

    வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய சம்பவத்தால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
    • புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான சக்தி வாய்ந்த சூறாவளி புயல், ஜப்பான்- சீனாவின் கிழக்கு பகுதி, தென் கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஹன்னம்னோர் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் தென்கொரியாவின் தெற்கு பகுதியில் ஜெஜூ கடற்பரப்பை அடைந்தது. துறைமுக நகரான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது. சுமார் 144 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.

    இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

    புயல் காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புயல் காரணமாக பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

    கனமழை, வெள்ளம், சூறாவளி காற்று காரணமாக தென்கொரியாவின் தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    • இந்த போட்டிகளில் பங்கேற்க ஆறு அணிகள் உருவாக்கம்.
    • ஜோகனஸ்பர்க் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரைப் போன்று தென் ஆப்பிரிக்காவில் சி.எஸ்.ஏ. டி20 கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த போட்டிகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த லீக் தொடருக்காக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 6 அணிகள் உருவாக்கப்படுகின்றன. அந்த அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த வகையில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

    இதே போல் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல் அணி நிர்வாகமும் வாங்கி உள்ளன. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் அணிக்கு முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. 


    டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீட்சனா, ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி என 5 வீரர்கள் ஜோகனஸ்பர்க் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீட்சனா ஆகியோர் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
    • தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சியோல் :

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என உருமாற்றம் அடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் ஒமைக்ரான் தொற்றின் வருகையால் உலகின் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பல மாதங்களுக்கு பிறகு திடீரென கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1 லட்சத்து 80 ஆயிரத்து 803 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நேற்று முன்தினம் 84,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது அங்கு கடந்த ஏப்ரல் 13-ந்தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிகையாகும். ஏப்ரல் 13-ந்தேதி 1 லட்சத்து 95 ஆயிரத்து 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    நேற்றை பாதிப்பை தொடர்ந்து தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதே சமயம் வைரசை கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

    ×