search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்து அரசராக பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்துவருகிறார்.
    • முட்டையை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ், அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களைச் சந்தித்தார்.

    அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

    மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    ஏற்கனவே, கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இனவெறி பிரச்னையால் அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்ட கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.
    • கடந்த காலங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த வாரம் ராணி கமிலாவின் ஏற்பாட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் லண்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான சிஸ்டா ஸ்பேசின் நிறுவனர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இளவரசர் வில்லியமின் ஞானத்தாயும், மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் உதவியாளருமான லேடி சூசன் ஹஸ்சி இனவெறியை தூண்டும் வகையில் கேள்விகைளைக் கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதையடுத்து அரச குடும்பத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த கவுரவ பதவிகளை லேடி சூசன் ஹஸ்சி ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், லண்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் ரிஷி சுனக்கிடம் இனவெறி பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ரிஷி சுனக் கூறியதாவது:

    அரச அரண்மனை தொடர்பான விஷயங்களில் நான் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த பிரச்சினையில் என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் தவறை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    கடந்த காலங்களில் நானும் இனவெறியை எதிர்கொண்டுள்ளேன். நான் சிறுவனாக இருந்தபோதும், இளைஞனாக இருந்தபோதும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் இப்போதும் அது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இனவெறியை கையாள்வதில் நம்முடைய நாடு நம்பமுடியாத முன்னேற்றம் அடைந்துள்ளது.

    இருப்பினும் நாம் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன. அத்துடன் நாம் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிறந்த எதிர்காலத்துக்கு செல்வது சரியானது என தெரிவித்தார்.

    • 2011-ம் ஆண்டு, மே 2-ந்தேதி, அமெரிக்க தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார்.
    • என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை.

    லண்டன் :

    அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று, காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை அரங்கேற்றினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

    சரியாக 10 ஆண்டுகள் கழித்து, இந்த பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந்தேதி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    இந்த பின்லேடனின் 4-வது மகன் உமர் பின்லேடன் (வயது 41) ஆவார். இவர் ஓவியர், எழுத்தாளர், கலாசார தூதர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார்.

    இவர் பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு 1981-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறந்தவர் ஆவார்.

    இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது மனைவி ஜேன் என்ற ஜைனா பின்லேடனுடன் பிரான்சில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசிக்கிறார்.

    உமர் பின்லேடன் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிகையில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். அங்கு எனது செல்ல நாய்கள் ரசாயன ஆயுதங்களை சோதிக்க பயன்படுத்தப்பட்டன. என் தந்தையின் உதவியாளர்கள் அந்த சோதனையில் ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

    எனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை.

    எனக்கு பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார்.

    நான் என்னால் முடிந்த அளவு, அந்த மோசமான தருணங்களை மறக்கத்தான் விரும்புகிறேன்.

    நான் 2001 ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டேன்.

    கடைசியாக நான் அப்பாவிடம் பேசியது, அவரிடம் விடைபெற்றபோது 'குட்பை' சொன்னதுதான். அவரும் எனக்கு 'குட்பை' சொன்னார்.

    எனக்கு அந்த உலகம் போதும். நான் அங்கிருந்து வெளியேறியதில் அப்பா மகிழ்ச்சி அடையவில்லை. அதன்பின்னர் நான் அப்பாவிடம் பேசியதே இல்லை.

    என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை.

    எல்லாமே முடிந்து விட்டது. நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். மக்கள் இன்னும் என்னை நியாயம் தீர்த்து வருகிறார்கள்.

    என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை. அவருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை.

    அவரது உடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சீனா - இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

    லண்டன் :

    ஹாங்காங், உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அடுக்குமுறை உள்ளிட்ட விவகாரங்களில் சீனா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இந்த சூழலில் சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இங்கிலாந்தை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை போலீசார் அடித்து, உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற இந்திய வம்சாவளி ரிஷி சுனக் முதல் முறையாக தனது வெளியுறவு கொள்கை குறித்து நேற்று உரையாற்றினார். அப்போது சீனாவுடான இங்கிலாந்தின் உறவு குறித்து அவர் கூறும்போது, "முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.

    உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு முதல் அச்சுறுத்தல்" என கூறினார்.

    • இங்கிலாந்து அமைச்சர் காவின் வில்லியம்சன் ராஜினாமா செய்துள்ளார்.
    • இது பிரதமர் ரிஷி சுனக்குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார்.

    பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இதற்கிடையே, எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணை அமைச்சர் காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் சில மூத்த அதிகாரிகளும் புகார் தெரிவித்தனர்.

    சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன். அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக காவின் வில்லியம்சன் அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க போதிய ஒத்துழைப்பு அளிப்பேன். என்னால் இந்த அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.

    • நிரவ் மோடி 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அதில் நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அபாயம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, சிறையில் நிரவ் மோடியிடம் நேரடியாக ஆய்வு செய்த 2 உளவியல் நிபுணர்கள், அவர் மன அழுத்தத்துடனும், தற்கொலை எண்ணத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.

    அதேநேரம் இந்தியாவில் நிரவ் மோடிக்கான பாதுகாப்பு குறித்து இந்திய அதிகாரிகள் சார்பில் ஆஜரான வக்கீல் உறுதியளித்தார். நிரவ் மோடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது தனிப்பட்ட நலனை காப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார்.

    இந்நிலையில் நிரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டு மனுவை லண்டன் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    அவர் மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்கொள்வதிலிருந்து தப்பிப்பது நியாயமாகாது என்றும் லண்டன் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று தீா்ப்பளித்திருந்தது சரியே எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    • வீசப்பட்ட முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது படவில்லை
    • முட்டைகளை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்க்ஷைரில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரை நோக்கி முட்டைகளை வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் போலீசார் தெரிவித்துள்ளனர். அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்க்ஷைர் நகருக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அரசர் வரும்போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது. ஆனால் அந்த முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது படவில்லை. இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

    • இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர்.
    • பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேர் உள்ளனர்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிகம் என்கிற தகவல் தெரிய வந்துள்ளது.

    இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என்றும், வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அந்த புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.

    இது குறித்து இங்கிலாந்து தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "2011ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் வேல்சில் வசித்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக இருந்த நிலையில் 2021-ம் ஆண்டில் அது 25 லட்சம் அதிகரித்து, 1 கோடியாக ஆனது.

    இதில் அதிகபட்சமாக இந்தியர்கள் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக போலந்து நாட்டினர் 7 லட்சத்து 43 ஆயிரம் பேரும், பாகிஸ்தானியர்கள் 6 லட்சத்து 24 ஆயிரம் பேரும் உள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    • அரசர் மூன்றாம் சார்லஸ் கடந்த செப்டம்பர் மாதம் அரியணை ஏறினார்.
    • மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக முடிசூடினார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். சார்லஸ் மன்னர் செப்டம்பரில் அரியணை ஏறினார்.

    இதற்கிடையே, மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு (2023) மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது. இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு கூடுதலாக வங்கி விடுமுறை நாளை அறிவிக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இதன்படி, மே 6-ம் தேதி முடிசூட்டு விழாவை தொடர்ந்து, மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, சிறப்பிக்கும் வகையிலும், அவருக்கு கவுரவம் அளிக்கும் வகையிலும் நாடு முழுவதும் வங்கி விடுமுறை அமலில் இருக்கும்.

    • 1½ வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
    • பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    லண்டன்

    இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 26 வயது பெண் பாரா காகனிண்டின். ஏற்கனவே 1½ வயது ஆண் குழந்தைக்கு தாயான பாரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பாரா வழக்கமான பரிசோதனைக்காக வாடகை காரில் ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். கார் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது பாராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பாரா காரிலேயே அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பின்னர் கார் ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாயையும், சேயையும் மீட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

    இதனிடையே ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்தபோது காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி பாராவுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. காரில் ஏற்பட்ட அசுத்தத்தை சுத்தம் செய்ய 60 பவுண்டு (சுமார் ரூ.5,700) செலுத்த வேண்டுமென பாராவுக்கு அந்த வாடகை கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    • இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார்.
    • லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கபட்டார். அந்நாட்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரமதமரானது இதுவே முதல் முனறயாகும்.

    ரஷி சுனக்கின் மனைவி பெயர் அக்‌ஷயா மூர்த்தி .இவர் இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் ஆவார். ரிஷி சுனக்-அக்‌ஷதா மூர்த்தி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இங்கிலாந்தில் போரிஸ்ஜான்சன் பிரதமராக இருந்த போது ரிஷி சுனக் நிதி மந்தரியாக இருந்தார். அந்த சமயம் அவர் லண்டன் டவுணிங் வீதியில் உள்ள 10-வது இல்லத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மேற்கு லண்டனில் இருக்கும் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். மகள்கள் படிக்கும் பள்ளி இதன் அருகில் இருப்பதால் அவர் இந்த வீட்டில் குடியேறினார்.

    தற்போது அவர் பிரதமராக ஆனதையடுத்து மீண்டும் டவுணிங் வீதியில் உள்ள 10-ம் நம்பர் கொண்ட சிறிய இல்லத்துக்கு குடும்பத்துடன் திரும்ப முடிவு செய்துள்ளார்.

    இங்கிலாந்தை பொறுத்த வரை 1735-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர்கள் 10-ம் எண் கட்டிடத்தின் அருகில் உள்ள 11-ம் நம்பர் கொண்ட இல்லத்தில் தான் குடியிருந்து வந்தனர். 4 படுக்கை வசதிகளுடன் மிக பெரியதாக இருக்கும் இந்த கட்டிடத்தை அவர்கள் பிரதமர் அலுவலகமாகவும், அதிகாரபூர்வ இல்லமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் தற்போது இந்த இல்லத்தில் தங்காமல் பிரதமர் ரிஷி சுனக் தான் ஏற்கனவே வசித்த 10-ம் நம்பர் இல்லத்தில் குடியேற உள்ளார். இந்த வீடு 11-ம்நம்பர் இல்லத்தை விட சிறியதாகும். இருந்த போதிலும் அமைதியான சூழ்நிலையில் இந்த வீடு அமைந்து இருப்பதாலும் அந்த வீடு தனக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்து இருப்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார்.
    • போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

    லண்டன்

    இங்கிலாந்தின் பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் தனது மந்திரிசபையை அமைத்துள்ளார்.

    கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து, பொருளாதார ஸ்திரத்தன்மையை, நம்பிக்கையை மீட்டெடுப்பேன் என பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, அளித்த உறுதியை நிரூபிக்கிறவகையில் மாற்று கருத்து கொண்டவர்களுக்கும் மந்திரிசபையில் ரிஷி சுனக் இடம் அளித்துள்ளார். குறிப்பாக போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கும் வாய்ப்பு தந்து அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளார்.

    ரிஷி சுனக்கின் புதிய மந்திரிசபை விவரம் வருமாறு:-

    * துணை பிரதமராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் துணை பிரதமர் பதவி விகித்தவர் ஆவார்.

    * ஜெரேமி ஹண்ட், நிதி மந்திரி பதவிக்கு வந்துள்ளார். இவர், லிஸ் டிரஸ் மந்திரிசபையில் நிதி மந்திரி குவாசி நீக்கப்பட்ட பின்னர் அந்த பதவிக்கு வந்தவர்.

    * லிஸ் டிரஸ் மந்திரிசபையில் உள்துறை மந்திரி பதவி வகித்து, அதிமுக்கிய ஆவணம் ஒன்றை தனது தனிப்பட்ட இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகியவர் இந்திய வம்சாவளியான சூவெல்லா பிரேவர்மன் ஆவார். இவரை ரிஷிசுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியில் அமர்த்தி இருக்கிறார்.

    * லிஸ் டிரஸ் மந்திரிசபையில் அங்கம் வகித்த ராணுவ மந்திரி பென் வாலஸ், வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி அப்படியே ரிஷி சுனக் மந்திரிசபையிலும் தொடருகிறார்கள். இவர்கள் போரிஸ் ஜான்சன் ஆதரவாளர்கள். அவர்களையும் ஒதுக்கிவிடவில்லை என்று ரிஷி சுனக் காட்டி உள்ளார்.

    * லிஸ் டிரஸ் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரதமர் பதவி போட்டியில் தனக்கு எதிராக களத்தில் குதித்த பென்னி மார்டண்ட், தொடர்ந்து நாடாளுமன்ற மக்கள் சபை தலைவராக பதவி வகிப்பார் என ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

    * வர்த்தக மந்திரியாக கிராண்ட் ஷாப்ஸ், பணிகள், ஓய்வூதியத்துறை மந்திரியாக மெல் ஸ்டிரைட், கல்வித்துறை மந்திரியாக கில்லியன் கீகன், சுகாதார மந்திரியாக ஸ்டீவ் பார்க்ளே, போக்குவரத்து மந்திரியாக மார்க் ஹார்பர், சர்வதேச வர்த்தக மந்திரியாக கெமி பெடனோக், கலாசார மந்திரியாக மிச்செல்லி டொனெலன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தனது மந்திரிசபையில் போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆதரவாளர்களுக்கும் ரிஷி சுனக் இடம் அளித்து இருப்பது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், "கட்சியின் திறமையானவர்களை இது ஒன்றிணைக்கிறது" என தெரிவிக்கின்றன.

    முக்கிய ஆவணம் ஒன்றை தனது சொந்த இ-மெயில் வழியாக சக எம்.பி.க்கு அனுப்பி சர்ச்சையில் சிக்கி பதவி விலகிய சூவெல்லா பிரேவர்மனுக்கு ரிஷி சுனக் மீண்டும் உள்துறை மந்திரி பதவியை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி விமர்சித்துள்ளது.

    ஆனால் இதை வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளவர்லி நியாயப்படுத்தி உள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் தனது தவறை ஒப்புக்கொண்டு விட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்" என தெரிவித்தார்.

    மேலும், உள்துறை மந்திரி பதவியில் அவரது அனுபவத்தை பிரதமர் ரிஷி சுனக் மதிக்கிறார் எனவும் குறிப்பிட்டார்.

    ஆனால் சூவெல்லா பிரேவர்மன் மீண்டும் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தாராளவாத ஜனநாயக கட்சி (லிபரல் டெமாகிரட்ஸ்) வலியுறுத்தி உள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அலிஸ்டெயிர் கார்மிச்சேல் தெரிவிக்கையில், "சூவெல்லா பிரேவர்மன் நியமனம் குறித்து மந்திரிசபை அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு பதவி அளிப்பதாக மூடிய அறைக்குள் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார் என்பது உள்ளிட்ட விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் என கூறி உள்ளது.

    இந்த நிலையில் தனது மந்திரிசபையின் முதல் கூட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் நேற்று நடத்தினார். அதில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×