search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthamil Murugan Conference"

    • 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது.
    • மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

    பழனி:

    பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.

    2-ம் நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது நாத்திக தோட்டத்தில் பூத்த ஆன்மீக மலர் சேகர்பாபு என அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24-ந் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு முதல் நாள் 23-ந் தேதியே பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாட்டுக்கான ஏற்பாடுகள், வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாநாடு நிறைவுபெறும் வரை அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணித்து வந்தார். அமைச்சருடன் கலெக்டர் பூங்கொடி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர் ஆகியோரும் விழா நடந்த 2 நாட்களும் அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.


    விழா நிறைவில் பல்வேறு ஆதீனங்கள் சார்பில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆன்மீகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையை சிறப்பாக நடத்தி வருவதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் விழாக்குழு சார்பில் மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் வழங்கினார்.

    • மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    • ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று தொடங்கியது.

    பழனி பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மடாதிபதிகள், ஆதீனங்கள், நீதியரசர்கள், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முப்பரிமான பாடலரங்கம், சிறப்பு புகைப்பட கண்காட்சி ஆகியவையும் இடம்பெற்றிருந்தது. குடவரைக்கோயில் போன்ற அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த இதனை ஏராளமான பக்தர்கள் கண்டும் கேட்டும் ரசித்தனர்.

    முதல் அரங்கில் மாநாட்டு நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    முதல் நாள் மாநாட்டில் 300 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 800 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மொத்தம் 1300 ஆய்வறிக்கைகள் இறுதி செய்யப்பட்டு நீதியரசர் சுரேஷ்குமார் அவர்களுக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.

    2ம் நாளான இன்று காலை திருவேல் இறைவன் தீந்தமிழர் இசையுடன் விழா தொடங்கியது. அதன் பின்பு முருகனும் பரதமும் என்ற தலைப்பில் வித்யா வாணி சுரேஷ் மற்றும் மகிதா சுரேசின் கலை நிகழ்ச்சி நடந்தது.

    இசைத் தென்றல் சம்மந்தம் குருக்களின் திருப்புகழ் தேனிசை, டி.எம். சவுந்தர்ராஜனின் மகன் பால்ராஜின் இறை வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.

    அமைச்சர் அர.சக்கரபாணி தொடக்க உரையாற்ற கோவை கவுமாரமடம் குமரகுரு சுவாமிகள் ஆசியுரையும், சத்திய வேல் முருகனார் சிறப்புரையும் ஆற்றினர்.

    அதன் பின்பு மொரிசீயஸ் தமிழக கோவில்கள் கூட்டமைப்பு தலைவர் செங்கண்குமரா வாழ்த்துரை வழங்கினார். பின்னர் நீதியரசர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.



    அதனைத் தொடர்ந்து கலைமாமணி தேச மங்கையர்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம் குழுவினரின் யாமிருக்க பயமேன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

    பின்னர் கர்நாடக பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் முருகனை காண 1000 கண் வேண்டும் என்ற இசை நிகழ்ச்சியும், ஐதராபாத் முனைவர் சிவா குழுவினரின் கந்தன் காவடி சிந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் திருவாரூர் சுருட்டை சுர்ஜித் நாட்டுப்புற கலைக்குழுவினரின் நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-ம் நாள் நிகழ்ச்சியை காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாநாட்டு அரங்கு, கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன் அரங்கம் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    பக்தர்கள் அனைவருக்கும் அதிகாலை முதல் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. மதியம் மற்றும் இரவு உணவுக்கும் ஊழியர்கள் தயார் நிலையில் அதற்கான பணிகளை செய்து வந்தனர். முன் பதிவு செய்து வந்த வெளிநாட்டு பக்தர்களுக்கு சிறப்பு அரங்கில் உணவு வழங்கப்பட்டது.


    2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று இரவு 8.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா மற்றும் சிறந்த ஆய்வறிக்கைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    விருதுகளை நீதியரசர் வேல்முருகன் வழங்க உள்ளார். அதன் பின்பு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமார் நன்றியுரையுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நிறைவு பெறுகிறது. மாநாட்டில் இடம்பெற்றுள்ள கண்காட்சி மற்றும் அரங்குகளை வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் பார்வையிடலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் மாநாட்டுக்கு இலவச அனுமதி என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மலைக்கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

    • முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.

    ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.

    மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • பழனியில் வருகிற 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு.
    • பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி மும்முரம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற உள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்காக பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி முகூர்த்தக்கால் நடும் பணியுடன் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாட்டு பந்தலில் பழனி மலைக்கோவிலின் ஓவியம், முருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மற்றும் முருகன் தொடர்பான படங்கள் வரையப்பட்டு வருகின்றன.

    மேலும் உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு கட்டுரைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவை மாநாட்டு நிறைவில் உரிய பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட உள்ளது.

    மேலும் விழா மாநாட்டு மலர் தயாரிப்பு, பக்தர்கள் தங்கும் இடம், வெளிநாட்டு ஆன்மீக அன்பர்கள் தங்கும் விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் சுகாதாரமாக வழங்கவும், கழிப்பிட வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 3 முறை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவுறுத்தி உள்ளார்.

    இன்று மீண்டும் பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாடு மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார். குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி. பிரதீப், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 11 செயற்பாட்டு குழுக்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • முத்தமிழ் முருகன் மாநாடு 24, 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது.

    சென்னை:

    இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு மற்றும் 11 செயற்பாட்டு குழுக்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 131 முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாட்டை தவிர இதர மாநிலங்களிலிருந்து 526 முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இம்மாநாட்டில் தமிழ்க் கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர் போன்றவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகளும், பணமுடிப்பும் வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதற்கென அமைக்கப்பட்ட குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்யும். இம்மாநாட்டில் வெளிநாட்டை சேர்ந்த 39 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கின்றார்கள்.

    மேலும், மலேசியாவிலிருந்து 35 நபர்களும், ஜப்பானில் இருந்து 70 நபர்களும், சுவிட்சர்லாந்திலிருந்து 15 நபர்களும் குழுக்காக தங்களது சொந்த செலவில் மாநாட்டில் பங்கேற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    பழனியில் நடைபெறும் மாநாட்டிற்காக 10,000 நபர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தலும், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முருகப் பக்தர்களுக்காக 15 இடங்களில் உணவருந்தும் கூடங்களும், அறுபடை வீடுகளின் அரங்குகள், சிறப்பு புகைப்பட கண்காட்சி, வேல் அரங்கம், 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது.

    வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு 500 தங்கும் அறைகளும், கோவில் தங்கும் விடுதியில் 135 அறைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 1,200 காவல் துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

    வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகைதரும் முக்கிய பிரமுகர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் வகையில் துறையிலிருந்து செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நிலையிலான அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுவதோடு, மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

    இம்மாநாட்டிற்காக ரூ.1.10 கோடி நன்கொடையாக வழங்கிட உபயதாரர்கள் விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் ரூ.3 கோடியும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியும் நிதி வழங்கப்படுகிறது.

    ஒன்றிய அரசுக்கு தோன்றுவதற்கு முன்பா கவே ராமேசுவரம் காசி ஆன்மிகப் பயணத்தை அறிவித்து இதுவரை 500 மூத்த குடிமக்களை அழைத்து சென்று செயல்படுத்திய ஆன்மிக அரசு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு என்பதனை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்ஸ்ரீதர், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சுகி சிவம், சத்தியவேல் முருகனார், தேசமங்கையர்க்கரசி, மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருனடிமை சுவாமிகள், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா. சுகுமார், திருமகள், ஹரிப்ரியா இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
    • வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு

    பழனி:

    பழனியில் உலக முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

    முருக பக்தர்கள் மாநாடு அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட்டு 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் முருகன் கோவில்களை நிர்மானித்துள்ள அறங்காவலர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்கும் இடம் இலவசமாக வழஙகப்படுவதுடன் உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள் நடைபெறும். மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவிலில் ரூ.98 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற்காக பழனி, திண்டுக்கல்லில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் ஆகஸ்ட்டு 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முன் பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் பங்கேற்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஆன்மிக பெரியோர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பழனி வந்தார்.

    அதிகாலையில் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் பரிவட்டம் கட்டி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானக் கூடம், பிரசாத ஸ்டால் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அதன் பின்பு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தலைமை தாங்கினார். மாநாட்டுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.

    மேலும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவதால் அவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்கரசி மற்றும் கோவில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24 , 25 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

    இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.7.2024-ம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் 10.7.2024-ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் இறையன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×