search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamallapuram"

    • கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
    • ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை.

    மாமல்லபுரம்:

    இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசோகி ஹிரோசி மாமல்லபுரத்துக்கு நேற்று சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு அவருடன் டெல்லியில் இருந்து வந்த ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை ஜப்பான் நாட்டு மொழியில் விளக்கி கூறினார்.

    பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.

    கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். ஜப்பான் தூதரின் பெண் உதவியாளர் தங்கள் நாட்டு தூதரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்கள் நாட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவரை மகிழ்ச்சி படுத்தினார்.

    நேற்று காணும் பொங்கல் விசேஷ தினம் என்பதால் தனக்காக இங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்புக்காக யாரும், தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், அவர்கள் வழக்கம் போல் சுற்றி பார்க்கட்டும் என்றும், நானும் அவர்களுடனேயே சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்று தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் அவர் தெரிவித்தார்.

    அதனால் ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

    • மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.
    • பிரதமர் மோடி-சீன அதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.

    சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், தற்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர். என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அரசின் அனைத்து துறையின் கவனமும் தற்போது மாமல்லபுரம் பக்கம் திரும்பி உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் என்றாலே சவுக்கு காடுகளும், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாததே நினைவுக்கு வரும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு இருட்டுவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள். இந்தநிலை தற்போது படிப்படியாக குறைந்து, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்து வசதி, நகரில் ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டது.

    மேலும் தொல்லியல்துறை சார்பில் புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

    கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தலைவர்கள் இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில அமர்ந்து ரசித்தனர். அங்குள்ள அனைத்து சின்னங்களையும் பார்வையிட்டு அதன் சிறப்புகளை பிரதமர் மோடி, சீன அதிபரிடம் விளக்கி கூறினார்.

    இதன் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் பல மடங்கு அதிகரித்தது. அதன் தொன்மை மற்றும் புராதன சின்னங்களின் வரலாறு குறித்த தேடுதல்கள் அதிகரித்தன.

    பிரமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர் மாமல்லபுரம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், புராதன சின்னங்களுக்கு இரவில் லேசர் ஒளி, கருங்கல் நடைபாதை, டிஜிட்டல் பலகைகள், நவீன தெரு விளக்குகள் என மேம்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு "சர்வதேச செஸ் ஒலிம்பியாட்" போட்டி இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை தமிழகத்தில் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றார். இந்த போட்டியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மாமல்லபுரத்தில் நடத்தியது கூடுதல் சிறப்பு ஆகும். இதன் பின்னர் மாமல்லபுரத்தின் பெயர் மற்றும் அங்குள்ள கற்சிற்பங்களின் மதிப்பு உலக அளவில் மேலும் உயர்ந்தது. இதனால் தற்போது மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.

    கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகையின் கணக்கெடுப்பில் உலக அதிசயமான டெல்லியில் உள்ள தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிவிட்டு மாமல்லபுரம் முதல் இடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மாமல்லபுரம் துணை நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் அழகிய முகம் மேலும் வளர்ச்சி அடைந்து மாறி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கைவசம் உள்ள ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் கூடுதலாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சென்னை நகரருக்கு இணையாக மாமல்லபுரம் மாறும் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து மால்லபுரம் பகுதி மக்கள் கூறும்போது, மாமல்லபுரம் துணை நகரமாவதால் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் உள்ளிட்ட நவீன வசதிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாமல்லபுரம் சுற்றுலா தலமாக இருந்தாலும் இதற்கு முன்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி-சீனஅதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்திய அளவிலும், உலக அளவிலும் மாமல்லபுரம் உச்சத்தில் உள்ளது. மாறி வரும் மாமல்லபுரத்தை நினைத்தால் இங்கு வசிப்பது பெருமையாக இருக்கிறது என்றனர்.

    • சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
    • 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.

    இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
    • பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.

    சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.

    பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது
    • புயலில் பாதிப்படைந்த மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் பாதித்த பகுதிகளை முன்னாள் அமைச்சரும், முன்னாள் தமிழக சட்டப்பேரவை தலைவருமான ஜெயக்குமார் புயலில் பாதிப்படைந்த மாமல்லபுரம் மற்றும் தேவனேரி மீனவர் பகுதி பொதுமக்களை சந்தித்து விபரங்களை கேட்டரிந்தார்.

    அவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது என கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு வழங்கினார்.

    பின்னர் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், துணைத்தலைவர் ராகவன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்கள் பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
    • பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

    மாமல்லபுரம்:

    தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15.08.2022 வரை மூன்று நாட்கள் நடைபெறும். இதில் 10 குழுக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 4 குழுக்களும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 6 குழுக்களும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.


    இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100 க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த பட்டம் விடும் விழாவானது சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.

    பட்டம் விடும் திருவிழா மதியம் 12 மணிக்கு துவங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும். மேலும் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6.00 மணி முதல் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று தாய் குடம் பிரிஜ்ட் பேண்ட் (Thaikkudam Bridge Band), 14.08.2022 மியூசிகல் பியூசன் (Musical Fusion) மற்றும் 15.08.2022 கிட்ஸ் டேலண்ட் ஷோ (Kids Talent Show) நடைபெறும்.

    பட்டம் விடும் திருவிழாவிற்கு கலந்துகொள்ள வரும் சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். மேலும் திருவிழா நடைபெறும் இத்திடலில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் சந்தர மோகன், சுற்றுலா இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாமல்லபுரம், சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் வளர்மதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்,

    • 5-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இலவசம்.
    • உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை :

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசு கடந்த 5-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 11 நாட்களுக்கு இந்தியா முழுவதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் இலவசமாக பார்த்து ரசித்தனர்.

    குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக நுழைவு கட்டண மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தனர்.

    நேற்றும் இலவச அனுமதியால் புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவுக்கு காணப்பட்டது.

    • சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது.
    • கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக "கைவினை சுற்றுலா கிராமம்" என்ற திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய "சிற்பக்கலைத் தூண்" அமைக்கப்பட்டுள்ளது. கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகைப் புரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பக்கலைத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மெய்யநாதன், மதிவேந்தன், எம்எல்ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், பாலாஜி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைக்கிள் அசோசியேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    சர்வதேச செஸ் ஒலிம்பி யாட் போட்டிகள் வருகிற ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் பொதுமக்களிடம்செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கங்கள் மற்றும் சைக்கிள் அசோசியேசன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணி பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து தொடங்கி பெரிய கடை தெரு வழியாக மணிகூண்டு சென்றடைந்தது. பேரணியில் சிறுவர்கள் சிறுமிகள் சிலம்பங்களை சுற்றிக்கொன்றே சென்றனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • செஸ் ஒலிம்பியாட் சுடர் ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்படவுள்ளது.
    • செஸ் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாமல்லபுரம், பூஞ்சேரியில் இன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு பின், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    44-வது செஸ் ஒலிம்பியாட் இதுவரை எந்த நாட்டிலும் இதுபோன்ற போட்டி நடத்தப்படவில்லை என உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரதமர் 19.06.2022 அன்று டெல்லியில் இப்போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். இந்த ஒலிம்பிக் சுடர் 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் போட்டி நடைபெறுகின்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

    இப்போட்டிக்காக சர்வதேச தரத்திலான 52-ஆயிரம் சதுர அடி பரப்பிலான நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கெனவே உள்ள 22- ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கமும் நவீனப்படுத்தப்படுகிறது. இதில் விளையாட்டு வீரர்களுக்காக 500 செஸ் போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. இப்போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. மின் வாரியம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளார்.

    இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 4 அணிகள் , பிற நாடுகளிலிருந்து 227 அணிகள் பங்கேற்கவுள்ளன. வீரர்களின் நலன் கருதி சுகாதாரமான உயர்தர நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை மூலம் மேற்கொளப்படும்.

    தமிழ்நாடு முதலமைச்சர், இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூபாய் 2 இலட்சம் காப்பீடு வசதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கடற்கரையில் தூக்கி வீசப்படும் குப்பைகளால் கடற்கரை பகுதி நாளுக்கு நாள், மாசடைந்து வருகிறது.

    இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்த யோகா கலைஞர்கள் ஒருங்கிணைந்து கடற்கரை கோயில் அருகில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது கடற்கரையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், காலணிகள், உணவு கழிவுகள், கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளால் தூக்கி வீசப்பட்ட பழைய துணிகள், காகித அட்டைகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட குப்பைககளை தரம் பிரித்து கடற்கரை மணலில் வண்ண கலரில் இந்திய வரைபடம் வரைந்து அதனை சுற்றி தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை காட்சி படுத்தினர்.

    பிறகு அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் இதுபோன்ற குப்பைகளால் கடற்கரை பகுதி மாசு ஏற்படுகிறது என்றும், அதனால் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்றும், குப்பைகளை கடற்கரையில் கண்ட இடங்களில் வீசாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது யோகா கலைஞர்கள் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி வட்ட வடிவில் நின்று மாமல்லபுரம் யோகாசன மூத்த பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    அப்போது இதனை காண வந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரிடமும் இதுமாதிரி குப்பைகளால் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்றும், இங்கு யாரும் குப்பைகளை போடாதீர்கள் என்று அறிவுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். காட்சி ஓவியம் வடிவில் என்ன மாதியான குப்பைகளால் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்பதை வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட காட்சி சுற்றுலா வந்த பயணிகளையும், பொதுமக்களையும் அதிகமாக கவர்ந்தது.

    மாமல்லபுரம் அருகே திருமணமாகி ஒரு வருடத்தில் மனைவி விவாகரத்து கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த வடகடம்பாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 36). சிற்பதொழில் செய்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபம் அடைந்த தீபா கடந்த மாதம் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் முருகன் மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே விவாகரத்து கேட்டு தீபா வக்கீல் நோட்டீசும் அனுப்பியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×