search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102691"

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் 11 அணைகள் உள்ளன. இதில் அதிக கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய அணையாக மணிமுத்தாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 118 அடி, மொத்த கொள்ளளவு 5511 மில்லியன் கன அடி ஆகும்.



    அதற்கு அடுத்ததாக பாபநாசம் அணை மிகப் பெரிய அணையாக உள்ளது. இதன் மொத்த அடி 143, கொள்ளளவு 5500 மில்லியன் கன அடி ஆகும். இது போக சேர்வலாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு என மொத்தம் 11 அணைகள் உள்ளன.

    இந்த 11 அணைகளில் பிரதான அணைகளான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய 3 அணைகளில் எப்போதும் தண்ணீர் இருப்பு இருக்கும். இந்த அணைகளில் தண்ணீர் இல்லாவிடில், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடும். தற்போது பாபநாசம் அணையில் சகதியும், தண்ணீரும் சேர்ந்து நீர்மட்டம் 9 அடி மட்டுமே உள்ளது.

    குடிநீருக்காக குறைந்தது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியே செல்கிறது.

    இதனால் குடிநீருக்காக மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது. மணி முத்தாறு அணையில் தற்போது 64.31 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த தண்ணீர் பச்சையாறு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து சேர்கிறது. இதனால் இப்போது பச்சையாறு பகுதியில் உள்ள ஆகாய தாமரைகள் தாமிரபரணி ஆறு வரை பரவி உள்ளது. இதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சேர்வலாறு அணையிலும் தற்போது 47.41 அடியாக நீர்மட்டம் உள்ளது.

    பாபநாசம் அணையும் சகதி தண்ணீர் மட்டும் உள்ளதால் அந்த அணையில் மற்ற பகுதிகள் வறண்டு விட்டது. அணையின் அடிப்பகுதியில் உள்ள மரங்களின் வேர் பகுதி மட்டும் காய்ந்து வெளியே தெரிகிறது.

    இதுபோல கடனாநதி, ராமநதியில் தண்ணீர் சுத்தமாக இல்லை. இங்கு பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் மணல் நிரம்பி சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது. இந்த அணைகளின் ஒரு ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் போல் லேசாக தண்ணீர் கசிந்து செல்கிறது.

    இதனால் இந்த அணைகளில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. கருப்பா நதியிலும் பல ஆண்டுகளாக தூர்வாராமல் 23 அடி வரை மணல் நிரம்பி உள்ளது. அதன் மேல் 1½ அடி உயரத்துக்கு சிறிதளவு தண்ணீர் உள்ளது. மற்றபடி அணை முழுவதும் வறண்டு காணப்படுகிறது.

    இதுபோல குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளிலும் சிறி தளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. நீரோட்டம் இல்லாததால் இந்த அணைகளும் வறண்டு விட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 அணைகளும் வறண்டு மழைக்காக காத்திருக்கிறது.

    எப்போதும் ஆர்ப்பரித்து தண்ணீர் விழும் அகத்தியர் அருவியில் தற்போது மிக குறைவாகவே தண்ணீர் விழுகிறது. குற்றால அருவிகளில் எந்த அருவியிலும் தண்ணீர் விழவில்லை. குற்றாலம் மெயினருவி முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது மணிமுத்தாறு அணை நீர்மட்டத்தை வைத்து குடிநீர் தேவை மட்டும் சமாளிக்கப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வேண்டும். சில ஆண்டுகளில் முன்னதாக மே கடைசி வாரமே தென்மேற்கு பருவ மழை பெய்து விடும். எனவே தென் மாவட்ட மக்கள் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். தென்மேற்கு பருவ மழை பெய்தால் தான் வறண்டு உள்ள 9 ஆணைகளுக்கும் தண்ணீர் வரும். இல்லாவிடில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi
    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.

    இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 

    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று  காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi 
    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.



    இந்நிலையில், சென்னை, நெல்லை மற்றும் நாமக்கல் உள்டபட 18 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் நாமக்கல்லில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. #LokSabhaElections2019 #ITRaids
    நெல்லை மாவட்டத்தில் வி‌ஷம் குடித்து 2 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி அடுத்த கீழ பாப்பாக்குடி காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). தொழிலாளி. இவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கோட்டியப்பன் (70). இவர் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் இறந்தார். இதுகுறித்து சின்ன கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று வரை ரொக்க பணம் ரூ.99 லட்சமும், பரிசு பொருட்களுடன் சேர்த்து ரூ.1 கோடி வரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இன்றும் பறக்கும் படை அதிகாரிகள் காலையிலேயே தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். பழைய பேட்டை செக் போஸ்ட் பகுதிகளிலும், கே.டி.சி. நகர் மேம்பாலம் அருகிலும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரத்தில் இன்று அதிகாலை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராஜபாளையத்தில் இருந்து நெல்லைக்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த கணேசனிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது. அதை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்துடன் வந்த காரில் ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் சிக்கியது. இதைத்தொடர்ந்து இன்று அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், அ.ம.மு.க. வேட்பாளர் ஞான அருள்மணி ஆகியோர் நெல்லை வந்தனர். அவர்களுடன் ஏராளமான கார்கள் வந்ததால், பாளை கே.டி.சி. நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் வரும் வாகனங்கள், வேன்கள் போன்றவற்றிலும் அதிரடி சோதனை நடந்தது.

    வேட்பாளர்களுடன் வந்த கார்களை, தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பு அதிகாரிகள் குழுவினர் வீடியோ எடுத்தனர். மேலும் தேர்தல் பிரசாரம் குறித்த பல்வேறு அம்சங்களையும் இன்று கண்காணிப்பு அதிகாரிகளின் குழுவினர் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவங்கள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.  #Parliamentelection #LSPolls
    நெல்லை அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு உட்பட்டு மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்க சமீபத்தில் நெல்லை பகுதியில் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கஞ்சா வியாபாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை பகுதியில் ஏராளமாக தடை செய்யப்பட்ட “போதை பாக்கு” உள்ளிட்ட தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    இதைத்தொடர்ந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை நெல்லை பேட்டை அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் செல்லும் ரோட்டில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ஒரு லாரி சந்தேகப்படும்படி சென்றது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டு முன்பு லாரி நிறுத்தப்பட்டது. அதில் இருந்து போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதை நோட்டமிட்ட போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து அவற்றை கொண்டு வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அருகில் நின்ற லாரி டிரைவர் சம்பத்(30), கிளீனர்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதை கவனித்த சிலர் அந்த வீட்டின் பின்பக்க கேட் சுவர் வழியாக தப்பி ஓடிவிட்டனர். உடனே அவர்களை போலீசார் விரட்டினர். போலீசார் சுற்றி வளைத்து மடக்கியதில் நெல்லையைச் சேர்ந்த அன்வர் என்பவர் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து போலீசார் வீட்டில் சோதனை போட்டனர்.

    பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல மூட்டைகளிலும் போதை பாக்குகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வீட்டின் அனைத்து அறைகளிலும் போதை பாக்குகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, சுத்தமல்லி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரிசித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வரை உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய நெல்லை வியாபாரி ஹனீபா உள்பட சிலரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    நெல்லை அருகே பள்ளி மாணவன் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து காமராஜ் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன். கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துச் செல்வம் (12). இவன் அதே பகுதி சங்கர் நகரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    முத்து செல்வம் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் சைக்கிளில் புறப்பட்டு சென்ற அவன் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் அவன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்செல்வத்திற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவன் முத்துசெல்வம் பரிதாபமாக இற‌ந்தான்.

    இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாளையங்கோட்டை அருகே 2 விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மகன்கள், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #NellaiDoubleMurder
    நெல்லை:

    பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழசெவல் நயினார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்குட்டி(வயது47). விவசாயி. இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு அம்மையப்பன் என்ற ஐயப்பன் (22), மகாராஜன் (20) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.

    செல்லக்குட்டியும், அவரது மனைவி செல்வியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். செல்வியுடன் அவரது இரண்டு மகன்களும் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ பெரியவர்கள் பலமுறை முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்கு பலன் இல்லை.

    செல்லக்குட்டி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி வேல்சாமி (40) என்பவருடன் சேர்ந்து தினமும் மது குடித்து வந்தார். இதனால் செல்லக்குட்டி மனைவி செல்வியுடன் சேர்ந்து வாழாததற்கு வேல்சாமி தான் காரணம் என்று அவரது மகன்களும், உறவினர்களும் நினைத்தனர்.

    ஆகவே அவர்கள் மது குடிப்பதை கைவிட வேல்சாமியிடமும், செல்லக்குட்டியிடமும் வலியுறுத்தினர். ஆனால் செல்லக்குட்டி மனைவியுடன் சேர்ந்து வாழாமல் நண்பருடன் சேர்ந்து தொடர்ந்து மது குடித்து வந்தார். இது செல்லக்குட்டியின் மகன்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் செல்லக்குட்டி மற்றும் அவரது நண்பர் வேல்சாமி ஆகிய இருவரையும் வெட்டிக்கொல்ல முடிவு செய்தனர். நேற்றிரவு செல்லக்குட்டியும், வேல்சாமியும் மது குடிப்பதற்காக வழக்கம் போல் ஊருக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றனர்.

    இதையறிந்த செல்லக்குட்டியின் மகன்கள் அம்மையப்பன் என்ற ஐயப்பன், மகாராஜன், அவர்களது மாமா ஹரிராமன், அவரது மகன்கள் ரமேஷ், மணி மற்றும் உறவினர் மாரியப்பன் உள்பட 8 பேர் அரிவாள், கம்பு, கத்தியுடன் செல்லக்குட்டியை தேடி காட்டு பகுதிக்கு சென்றனர்.

    ஆயுதங்களுடன் வந்த அவர்களை பார்த்ததும் செல்லக்குட்டியும், வேல்சாமியும் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். ஆனால் அவர்கள், செல்லக்குட்டி மற்றும் வேல்சாமியை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் செல்லக்குட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    வேல்சாமி படுகாயத்துடன் சாலை அருகே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் 2 பேரும் இறந்து விட்டார்கள் என நினைத்து தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். செல்லக்குட்டி மற்றும் வேல்சாமி வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நள்ளிரவில் பரவியது.

    இதுகுறித்து சிலர் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் உதவி கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரி யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    அப்போது வேல்சாமி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் செல்லக்குட்டியை இரவு முழுவதும் போலீசார் தேடினார்கள். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை போலீசார் மீண்டும் அந்த காட்டு பகுதியில் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது செல்லக்குட்டி அந்த பகுதியில் உள்ள ஒரு புதர் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். உடனடியாக போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இந்த நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வேல்சாமியும் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கீழசெவல் பகுதியில் ஒரே நாளில் 2 விவசாயிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் இரட்டை கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை தொடர்பாக செல்லக்குட்டியின் மகன்கள், உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #NellaiDoubleMurder

    நெல்லையில் இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் ராம்குமார் (வயது25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று விடுப்பு எடுத்துக்கொண்டு கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரசில் நெல்லைக்கு புறப்பட்டு வந்தார்.

    இன்று அதிகாலை அந்த ரெயில் நெல்லை தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தபடி வந்த ராம்குமார் திடீரென ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தின் நடுவே ஒருவர் இறந்து கிடப்பதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பது குறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ராஜன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் வாலிபர் ராம்குமாரின் உடலை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ராம்குமார் மரணம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம், எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #Stalin
    நெல்லை:

    நெல்லையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    எம்.ஜி.ஆர் தமிழக தலைவர் மட்டுமல்ல, தேசிய தலைவர். எம்.ஜி.ஆர் காலத்தில் தான் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. காவிரி பிரச்னைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக அரசு. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை. யாராலும் அழிக்க முடியாது.

    கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர். கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம். எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalanisamy #Stalin
    காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். #KaanumPongal
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையிலேயே வாசல்களில் வண்ணக் கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடினர்.

    மேலும் பொங்கலுக்கு மறுநாள் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கிராமங்களில் பசு உள்ளிட்ட மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் சென்று கொண்டாடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா, ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை பூங்கா, துறைமுக கடற்கரை பூங்கா பகுதிகளுக்கு மக்கள் சென்றனர். மக்கள் அந்த பகுதிகளில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு விளையாடி மகிழ்ந்தனர்.

    சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிட்டு விளையாடினர். கடற்கரை மற்றும் பூங்காக்களையொட்டி 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தின்பண்டங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று நேரத்தை செலவழிப்பது வழக்கம். காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் முயல் தீவு மற்றும் தெர்மல் நகர் கடற்கரை பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டம் முழுவதிலும் இருக்கும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், 1,800-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதிலும் உள்ள சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. குற்றங்களை தடுப்பதற்காக சாதாரண உடையிலும் போலீசார் வலம் வந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இடங்களிலும் ஏராளமான மக்கள் காணும் பொங்கலை கொண்டாடினார்கள். இப்பகுதியில் உள்ள பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    களக்காடு தலையணையில் காணும் பொங்கல் கொண்டாட்டம் களை கட்டியது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினர்களுடன் பச்சையாற்றில் குளித்தனர்.

    இந்தாண்டு புதியதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர்கள் விளையாடினர். வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்பட பொருட்கள் கொண்டு வருகிறார்களா? என கடும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு முதல் முறையாக கழிவறை, குடிநீர் வசதி, உடை மாற்றும் அறைகள் உள்பட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான அன்வர்தீன் உத்தரவின் பேரில் களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆலோசனையின்படி வனசரகர்கள் புகழேந்தி, பாலாஜி முன்னிலையில் வனத்துறையினரும், களக்காடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல களக்காடு தேங்காய் உருளி அருவி, பச்சையாறு அணை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்திருந்தனர். #KaanumPongal

    நெல்லையில் உள்ள டீ கடையில் டீ பார்சல் வழங்க ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது. அடையாளம் தெரியாதவர்கள் பார்சல் டீ கேட்டால், முன் பணம் ரூ.200 கட்டி எவர்சில்வர் பாத்திரத்தை வாங்கி செல்ல வேண்டும். #Plasticban
    நெல்லை:

    பிளாஸ்டிக் தடை காரணமாக நெல்லையில் பிளாஸ்டிக்குக்கு மாற்று பொருட்கள் உபயோகம் நடைமுறைக்கு வந்தது.

    நெல்லையில் டவுன் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள சுவீட்ஸ் கடைகளில் அல்வா மற்றும் ஜிலேபி, இனிப்புகள் அனைத்தும் பனை ஓலை பெட்டியில் வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பெரும்பாலான புரோட்டா கடையில் வாழை இலையில் பார்சல் செய்யப்பட்டு எவர்சில்வர் பேப்பரில் சால்னா வழங்கப்படுகிறது.

    பாளை வண்ணார்பேட்டையில் உள்ள டீ கடையில் டீ பார்சல் வழங்க ‘எவர்சில்வர்’ தூக்கு பாத்திரம் வழங்கப்படுகிறது.

    அடையாளம் தெரியாதவர்கள் பார்சல் டீ கேட்டால், முன் பணம் ரூ.200 கட்டி எவர்சில்வர் பாத்திரத்தை வாங்கி செல்ல வேண்டும். பாத்திரத்தை திருப்பி கொடுத்ததும் முன்பணம் ரூ.200 திருப்பிக்கொடுக்கப்படுகிறது.

    கடைகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் துணிப்பை கொண்டு செல்லாவிட்டால், கடைகளிலேயே துணிப்பை ரூ.5, ரூ.10 என்று இரண்டு வகைகளாக வழங்கப்படுகிறது.

    ஆனாலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கலந்து செய்யப்படும் பைகளை தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகிறார்கள். #Plasticban

    ×