search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்"

    தருமபுரி அருகே புள்ளி மானை வேட்டையாடி இறைச்சியை விற்க முயன்ற வாலிபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் வாதாப்பட்டி காப்பு காட்டையொட்டி அனுமன் தீர்த்தம்-அரூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒரு நபர் வாகனத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடிவிட்டார். அந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் பிளாஸ்டிக் பைகளில் பொட்டலங்களாக மான் இறைச்சி கட்டப்பட்டு மூட்டைக்குள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் தப்பியோடிய நபர் ஊத்தங்கரை அடுத்துள்ள நல்லவம்பட்டி புதூரை சேர்ந்த மகேஷ் (வயது35) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் மகேஷை வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் புள்ளிமானை வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    பின்னர் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 
    குடியாத்தம் அருகே மானை வேட்டையாடிய 2 பேரை கைது செய்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட வனஅலுவலர் முருகன் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர் ரவி, வனக்காப்பாளர்கள் பிச்சாண்டி, வெங்கடேசன், பூபதி மற்றும் வனத்துறையினர் பரதராமியை அடுத்த வீரிசெட்டிபல்லி காப்புக்காடுகள் கன்னிங்பாறை பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகமான முறையில் நடமாடிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தபோது பரதராமியை அடுத்த பூசாரிவலசை கிராமத்தை சேர்ந்த மணி (வயது 40), கோபி (32) என்பதும், அவர்கள் கம்பிவலை மூலம் பெண் மானை வேட்டையாடி கொன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து மான் தலை மற்றும் தோலை கைப்பற்றினர். மேலும் மணி, கோபி ஆகியோரை வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சீர்காழி அருகே உடலில் காயங்களுடன் கிடந்த மானை மீட்ட வனத்துறையினர் எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த தென்னலக்குடி வனப்பகுதியில் மான்கள்கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்னலக்குடியை அடுத்த கருக்குடி அய்யனார் கோவில் பகுதியில் உள்ள சேக்கணையில் ஆண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புள்ளி மானை மீட்டனர். அப்போது மானின் உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த மான் எப்படி இறந்தது என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்னலக்குடி பகுதியில் வசிக்கும் புள்ளி மான்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#tamilnews

    அருப்புக்கோட்டை அருகே நாய்கள் கடித்து குதறியதில் மான் சிகிச்சை பலனின்றி பலியானது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகேயுள்ள சின்னான்செட்டிப்பட்டி கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு ஒரு புள்ளிமான் வந்துள்ளது. அதனை நாய்கள் விரட்டியுள்ளன. சத்தம் கேட்டு எழுந்த கிராமத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே முட்புதருக்குள் புள்ளிமான் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் உடலில் நாய்கள் கடித்த காயங்கள் இருந்தன. இது குறித்து பந்தல்குடி போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். போலீசார், கால்நடை டாக்டர் சத்யபாமாவை அழைத்து வந்து மானுக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அதனை காப்பாற்ற இயலவில்லை. மான் இறந்துபோனது குறித்து வனத்துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். உயிரிழந்த அந்த ஆண் மானுக்கு 2½ வயது இருக்கும் என்று டாக்டர் தெரிவித்தார். 
    ×