search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது.
    • ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம்.

    ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் (Antioxidants) அதிகமாக உள்ளது.

    ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின் (Quercetin), பிளோரிசின் (Phlorizin), கிளோர்ஜெனிக் ஆசிட் (Chlorgenic acid) ஆகியவை இன்சுலின் எதிர்மறை நிலையை (Insulin Resistance) குறைத்து இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்தி, கணையத்தின் பீட்டா செல்களை இன்சுலினை அதிகமாக சுரக்க செய்கிறது.

    ஆப்பிளில் உள்ள அதிகமான நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே அதிகமாகாமல் தடுக்கிறது. ஒரு ஆப்பிளில் 104 கலோரிகள், 27 கிராம் மாவுச்சத்து, 14 கிராம் சர்க்கரை இருக்கிறது. ஆப்பிளில் அதிகமான அளவு மாவுச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகமான அளவு சாப்பிடக்கூடாது. வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் தோலில் இருப்பதால் தோலுடன் சேர்த்து தான் ஆப்பிளை சாப்பிட வேண்டும். ஜூஸ் வடிவில் குடிக்க கூடாது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒரு முட்டையில் கார்போஹைட்ரேட் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது.
    • ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை ஒரு மிகச்சிறந்த உணவாக இருப்பதற்கு கீழ்கண்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட் ஒரு முட்டையில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. (0.5 கிராம்). இதில் உள்ள அதிகமான அளவு புரதம் (புரோட்டீன்) (ஏறக்குறைய 7 கிராம்) செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது. முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12 ஆகியவையும் தசை மற்றும் நரம்புகளுக்கு தேவையான பொட்டாசியம், தோலுக்கு முக்கியமான வைட்டமின் பயோடின், மூளை வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் கோலின் ஆகியவை அதிக அளவில் இருக்கிறது .

    ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது. இதில் 15 கலோரிகள் வெள்ளைப் பகுதியிலும், 60 கலோரிகள் முட்டையின் மஞ்சள் பகுதியிலும் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாம். மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதி மட்டும் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம்.

    முட்டையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இதை ஒரு முழுமையான புரதம் (கம்ப்ளீட் புரோட்டின்) என்று அழைக்கிறார்கள். ஒரு முட்டையின் மஞ்சளில் கிட்டத்தட்ட 184 கிராம் கொலஸ்ட்ரால், 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதை தவிர்ப்பது நல்லது. முட்டையை அவித்து சாப்பிடுவது நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு தான் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த வருடம், அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கரூர், சேலம், வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது.

    அதாவது, தினமும் 102 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகிறது. கோடை வெயில் அதிகமாக இருப்பதால், மர நிழலை தேடி ஓடுவதை போல், குளிர்பானங்களை தேடி அதனை ஆசையாய் பருகிவருகிறோம். இந்த நிலையில் வெயில் காலங்களில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினை அதிகமாகி வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் டாக்டர் தினகரன் கூறியதாவது:-

    தற்போது வெயில் அதிகமாக இருப்பதால், உடலில் உள்ள நீர் சத்துகள் உடனடியாக குறைந்து விடுகிறது. அதனை அதிகப்படுத்துவதற்கு குளிர்பானங்களை சாப்பிடுகிறோம். அதாவது, குளிர்ந்த நீர், குளிர்ந்த பானங்களால் மூக்கடைப்பு பிரச்சினை, அடிக்கடி தும்மல் வரும். அதனை தொடர்ந்து, காது வலி வருகிறது. அதன்பின்னர், தொண்டை வலியும் வருகிறது. குளிர்பானங்களை காட்டிலும் எலுமிச்சை சாறு, டீ போன்றவற்றை அருந்தலாம். வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இதுபோன்ற உணவுகள் உள்ளது. முடிந்த வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான பானங்களை கோடைக்காலத்தில் அருந்த வேண்டும்.

    அதுபோல், வெயிலில் சென்று விட்டு உடனடியாக வீட்டிற்கு வந்த உடன், குளிர்ந்த பானங்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், உடலில் உள்ள வெப்பநிலையும், அறையில் உள்ள வெப்பநிலையில் சமமாக இருக்காது. எனவே, வெளியில் சென்று விட்டு வந்தால், குறைந்தபட்சம் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த பானங்களை சாப்பிடலாம்.

    வெயில் காலத்தில் பெரியவர்களும், குழந்தைகளும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும்.

    கோடைக்காலம் வந்தாலே காது, மூக்கு, தொண்டை பிரச்சினை தான் அதிக அளவில் வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகம் இருப்பதால் காது, மூக்கு, தொண்டை பிரிவிற்கு சிகிச்சைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரு மடங்கு வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும், வெதுவெதுப்பான தண்ணீராக இருந்தால் உடலுக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.
    • செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை டாக்டரான மாணிக்க வாசகம் கூறியதாவது:-

    பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வெப்பம் தொடர்பான நோய்களான அம்மை, சூட்டு கொப்பளம், கண் எரிச்சல், தலை சுற்றுதல், சிறுநீரக கல் உள்ள பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

    * வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படுவதால் தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும்.

    * நமது பாரம்பரிய பானங்களான நீர்மோர், பதநீர், நுங்கு, இளநீர், கூழ் வகைகள் எடுத்து கொள்ளலாம். இவற்றில் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைப்பதுடன், வெயிலால் வியர்வை மூலமாக உடலில் இருந்து வெளியேறும் உப்பு சத்துகளும் கிடைக்கிறது.

    * இயற்கையாக கிடைக்கும் கரும்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, இளநீர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு தேவையான சத்துகளை கொடுப்பதுடன், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

    * சித்த மருத்துவ மூலிகையான நன்னாரி வேரினை கொண்டு தயாரிக்கப்படும் மணப்பாகுவை தண்ணீரில் கலந்து குடித்தால் கண் எரிச்சலில் இருந்து பாதுகாக்கலாம். நமது தாகமும் தணியும்.

    * வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்த்து குளித்தால் அம்மை, சிறுநீரக கல் போன்றவை வராமல்பார்த்து கொள்ளலாம்.

    * இரவில் தூங்கும் போது கால் பாதத்தில் நெய் தேய்த்து கொண்டு தூங்கினால், கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும்.

    * குறிப்பாக நீர் காய்கறிகளான சுரைக்காய், புடலைங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

    * வெள்ளரிக்காய் சாப்பிடுவதுடன், உடலில் அதனை பூசிக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் தோல் அலர்ஜியில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    * எல்லாவற்றுக்கும் மேலாக குளிர்பானங்கள், குளிர்சாதன பெட்டிகளில் வைத்த குளிர்ந்த தண்ணீர், செயற்கை வேதிப்பொருட்கள் கலந்த பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    • வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.

    கிர்ணி பழத்தின் (Rock Meelon) ஆரஞ்சு நிற சதைப்பற்றான பகுதி ஊட்டச்சத்து நிறைந்தது. கிர்ணி பழங்களில், உயிர்ச் சத்து ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

    சாறு நிறைந்த கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதை உட்கொள்வதால் அழகான சருமம் கிடைப்பதுடன் பார்வைத்திறனும் மேம்படும். வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்.

    அமெரிக்காவின் கான்சஸ் மாநில பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை 2003-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், சிகரெட் புகைப்பவர்களின் நுரையீரல்களில் ஏற்படும் பாதிப்பை, உயிர்ச்சத்து 'ஏ' மூலம் ஓரளவு சீர்செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக, கிர்ணி பழத்தின் மூலம் இத்தகைய பாதிப்புகள் கட்டுப் படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டன.

    கிர்ணி பழத்தில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால், கண்ணின் விழித் திரை சேதமடைவதை, அதாவது வயதாவதால் பார்வைக் குறைபாடு ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும்.

    மிக மிகக் குறைவான கிளைசிமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்புடைய, நன்கு பலனளிக்கக்கூடிய பழமாக கிர்ணி பழம் விளங்குகிறது.

    சாறு நிறைந்த இதன் சதைப்பகுதியில், கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் தினசரி உணவில், கிர்ணி பழத்தை அதிகமாக சேர்த்துக்கொள்வதால், வயிற்றுக் கோளாறுகளைக் குறைக்க முடியும்.

    கவனம் தேவை

    வெட்டிய உடனே கிர்ணி பழத்தைச் சாப்பிட்டுவிட வேண்டும். கிர்ணி பழத்தை வெட்டி வைத்து, அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால், பழம் சீக்கிரம் கெட்டுவிடும். இதனால் பலன்கள் கிடைக்காமல் போகக்கூடும்.

    வெவ்வேறு பழங்கள்

    கிர்ணி பழத்தில் பலவிதமான வகைகள் இருக்கின்றன. மஸ்க் மிலான் மற்றும் ராக் மிலான்... இவை இரண்டுமே கிர்ணி பழங் களாகவே அறியப்படுகின்றன. சுவையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் உருவமும், நிறமும் மட்டுமே இவை இரண்டுக்கும் இடையில் சில வேறுபாடுகளை உண்டாக்குகின்றன.

    ராக் மிலான், அளவில் சிறியதாக இருக்கும். அதேபோல வெளிப்புற தோல் பகுதி பச்சை நிறம் கலந்திருக்கும். ஆனால் மஸ்க் மிலான், அளவில் பூசணி போல பெரியதாக இருக்கும். அதன் தோல் பகுதியானது, ஆரஞ்சு கலந்த பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வயதுக்கு ஏற்ப தூங்கும் கால அளவு இருக்கும்.
    • சராசரியாக 8 மணி நேர தூக்க அவசியம்.

    கோவை அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரும், மனநல டாக்டருமான ஜெ.ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:-

    ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்நாளில் 3-ல் ஒரு பங்கு காலம் தூக்கத்தில் கழிகிறது. எனவே தூக்கம் என்பது இன்றிய மையாதது. அது சோம்பேறித்தனம் அல்ல. தூக்கம் என்பது விழிப்புடன் வேலை செய்ய ஊக்கம் அளிப்பதாகவே இருக்கிறது.

    வயதுக்கு ஏற்ப தூங்கும் கால அளவு இருக்கும். சராசரியாக 8 மணி நேர தூக்க அவசியம். ஒவ்வொருவர் பார்க்கும் வேலையை பொறுத்து அதில் சற்று மாறுபாடு இருக்கலாம். இடையூறு இல்லாமல் தூங்கி அதிகாலையில் புத்துணர்வாக எழுவதே தரமான தூக்கம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை விட தரமான தூக்கமே முக்கியம். எனவே தூக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு படுக்கையை வேறு வேலை குறித்து திட்டமிடும் இடமாக மாற்ற கூடாது. அப்படி செய்தால் மூளை விழித்துக் கொள்ளும். தூக்கம் பாதிக்கும். தூங்கும் போது தான் உடல்உறுப்புகள், மூளை போன்றவை ஓய்வு கொள்ளும்.

    தூங்கும் நேரத்தை வரையறுத்துக் கொண்டு திட்டமிட்டபடி தூங்குவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். வயிறுமுட்ட சாப்பிட்ட உடனே தூங்க செல்வது, நிறைய தண்ணீர் குடித்து விட்டு தூங்க செல்லும் போது தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.

    மது குடித்தால் தான் தூக்கம் வரும் என்று கூறுவது உண்மை அல்ல. அப்படி ஒருவர் கூறினால் அவர் அந்த நோய்க்கு ஆளாகிறார் என்று அர்த்தம். நன்றாக தூங்குவதற்கு தூங்கும் அறையின் சூழலும் முக்கியம். பயமுறுத்தும் வகையில் இருளாகவோ, வெளிச்சமாகவோ இருக்க கூடாது. மங்கிய வெளிச்சத்தில் காற்றோட்டத்துடன் படுக்கை அறை இருக்க வேண்டும். பகல் நேரத்தில் நிறைய நேரம் தூங்குவது இரவு தூக்கத்தை பாதிக்கும். உடல் பயிற்சி மற்றும் உடல்உழைப்பு இருக்கிற போது தூக்கம் நன்றாக இருக்கும். தூக்கம் பாதிக்கப்பட்டால் இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், உடல் பருமன், மனச்சோர்வு மற்றும் செயல்திறன் குறைபாடு வரலாம்.

    ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை சம்மந்தப்பட்ட வியாதிகள் 40 சதவீதம் அதிகமாக உள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாதவிடாய், கர்ப்பம் தரித்தல், மாதவிடாய் நிறுத்தம் போன்றவை பெண்களின் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம்.

    இரவில் செல்போன் போன்ற டிஜிட்டல் திரைகளை பார்ப்பதால் தூக்கம் பாதிக்கிறது. இது பெரும் பிரச்சினையாக இளைஞர்கள் மத்தியில் உருவெடுத்து வருகிறது. தூங்க செல்வதற்கு முன்னதாக காபி, டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கனவுகள் ஆரோக்கியமான தூக்கத்தின் ஒரு பகுதியாகம். கெட்ட கனவுகள் அடிக்கடி வருவது, அதனால் தூக்கம் கெடுவது, இரவில் கெட்ட கனவுகளை நினைத்து பயப்படுவது போன்றவை இருப்பின் டாக்டர்களை அணுக வேண்டும்.

    மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் விஷயங்கள் அப்போது கனவுக ளாக வெளிப்படும். அதில் பெரும்பாலானவை மறந்து போகும். இரவில் தூக்கத்தில் எழுவது, நடப்பது போன்ற குறை பாடுகள் சிறு வயதில் வரும். நாளடைவில் தானாவே சரியாகி வில்லை. இல்லை என்றால் டாக்டரை அணுக வேண்டும். தூங்கும் போது குறட்டை வருவதும், அதனிடையே மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூக்கம் கலைவதும் இருப்பின் கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.
    • நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும்.

    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பின் அறிகுறிகள். இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

    பரம்பரை காரணம், அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலை, உயரமான இடங்களுக்குச் செல்வது, அதிகமாக உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

    புகைப்பவர்கள், மதுகுடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

    நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி, நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி, கடுமையான காச நோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும்.

    நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள் ஆகியோருக்கும் ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். குடல் புண் நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

    • வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது.
    • பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

    ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள், 27 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. வாழைப்பழம், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை தீர்மானிப்பது அதன் பழுத்த நிலை மற்றும் நாம் சாப்பிடும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை ஆகும். பொதுவாக பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும்.

    வாழைப்பழத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளது. பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

    பழுத்த வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு சற்று அதிகம். வாழைப்பழத்தில் அதிகமான அளவு பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

    நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், பச்சை வாழை போன்ற வாழை வகைகளை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் சாப்பிடலாம். பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழ வகைகளை தவிர்ப்பது நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் ரத்த கொதிப்பை குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது.

    சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அவர்களும் இரத்த தானம் செய்ய விரும்புவார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? இந்த கேள்வி பலரிடமும் இருப்பதால் இதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் போன்ற தன்னலமற்ற செயலை தாராளமாக செய்யலாம். கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது. அவை:

    1) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்,

    2) சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்,

    3) இன்சுலின் ஊசி் செலுத்தி கொள்பவர்கள்,

    4) உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள்,

    5) வயது 18-க்கும் குறைவானவர்கள்,

    6) ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்,

    7) ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்,

    8) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

    9) காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்,

    10) கடந்த 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

    11) ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி நோய் தொற்றுள்ளவர்கள்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானமும், 7 நாட்களுக்கு ஒரு முறையும் பிளேட்ளட் தானமும் செய்யலாம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை தூங்குவது சிறந்த பழக்கமாக கூறப்படுகிறது.
    • குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

    காலமிது காலமிது

    கண்ணுறங்கு மகளே...

    காலமிதை தவற விட்டால்

    தூக்கமில்லை மகளே...

    தூக்கமில்லை மகளே...

    என்ற பாடல் சித்தி என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி இடம் பெற்றது.

    அதில் பெண்களுக்கு தூங்ககூட நேரம் இல்லாத அளவிற்கு எப்போதும் வேலை இருக்கும். எனவே இப்போதே தூங்கிக் கொள் என்று பிறந்த மகளுக்காக தாய் பாடுவது போன்று பாடல் இடம் பெற்று இருக்கும். தூக்கத்தை இழக்கிற போது துக்கத்தை தேடிக் கொள்கிறோம் என்று தான் கூற வேண்டும்.

    நவீன தொழில்நுட்ப சாதனங்கள்

    எனவே இந்த ஆண்டுக்காக உலக தூக்க தினமான மார்ச் 17-ந் தேதியை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற கருப்பொருளில் கடைபிடிக்கிறார்கள். தூக்கம் கெட்டுப்போனால் ஆரோக்கியம் கெட்டுப்போய் விடும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. முந்தைய காலங்களில் மனிதர்களிடம் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள் இரவில் படுத்ததும் தூங்கி விடுவார் கள். ஆனால் தற்ேபாது உடல் உழைப்பு குறைந்து விட்டது. மேலும் டி.வி., செல்போன், சினிமா, இணையதளம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.

    அதில் குறிப்பாக செல்போன்களில் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு விதமான செயலிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் உலகிலேயே இந்தியர்கள் தான் மிக குறைந்த நேரம் தூங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தூக்கம் அவசியம்

    இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை அதாவது 8 மணி நேரம் தூங்குவது சிறந்த பழக்கமாக கூறப்படுகிறது. ஆனால் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். மேலும் இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை உடல் (கிடைமட்டமாக) படுக்கை நிலையில் இருக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

    ஆனால் ஒவ்வொருவருடைய பணி, குடும்ப சூழலை பொறுத்து தூங்கும் நேரம் மாறுபடுவது இயல்பாக இருக்கிறது. ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் தான் காலையில் புத்துணர் வுடன் செயல்பட முடியும். தூக்கம் என்பது மூளை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஒரு இயற்கையான வழி ஆகும்.

    ஆனால் இன்றைய காலகட்டத்தில் இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. போலீஸ், தீயணைப்பு, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், டாக்டர் உள் ளிட்ட மருத்துவ பணியாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், காவலாளிகள், டிரைவர்கள், போன்றோருக்கு இரவுப்பணி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

    அதற்கு ஏற்ப அவர்கள் தங்களின் தூக்கம் மற்றும் உணவு சாப்பி டும் நேரத்தை மாற்றிக் கொள்கின்றனர். இதன் காரணமாக அவர் களுக்கு உடல் மற்றும் மனஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இரவுப் பணி செய்யாதவர்கள் கூட மிகமிக தாமதமாகவே படுக்கைக்கு செல்கின்றனர். தூங்கும் நேரத்தில் விழித்து இருப்பதால் ஹார்மோன்கள் வழக்கம் போல் செயல்படுவது பாதிக்கப்படும். ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால் தூக்கம் இழந்து தவிப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டு விடும்.

    200 கோடி பேருக்கு பாதிப்பு

    அது போன்ற நிலை தொடர்வதால் தான் தூக்கமின்மை என்ப தும் தற்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் தூக்கமின் மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 200 கோடி பேர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    எவ்வித தடங்கலும் இன்றி தினமும் வழக்கமான நேரத்தில் தூங்குவதால் நாள்பட்ட நோய்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் குறையும் என்று 'வோர்ல்ட் ஸ்லீப் டே' நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

    போதுமான அளவு தூங்கவில்லை என்றால் கவனக்குறைவு, உணர்ச்சிவசப்படுதல், எரிச்சல், மன அழுத்தம், கோபம், சோகம் மற்றும் மனச் சோர்வு போன்றவை ஏற்படலாம். அது ஹார்மோன்களின் உற்பத்தியை சீர்குலைக்கிறது. அதோடு இரவில் நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து இருப்பதால் உடல் பருமன், சர்க்கரை வியாதி, இதய நோய், ரத்த கொதிப்பு, போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மூளையை தூண்டி தூங்குவதற்கான சிக்னலை கொடுக்க புரோலாக்டின், காபா, அடினோசின் போன்ற ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்க வேண்டும். ஆனால் இரவில் காபி, டீ குடித்தால் அதில் இருக்கும் ரசாயனம், அடினோசின் உற்பத்தியை குறைத்து விடும்.

    ஆரோக்கியத்திற்கு துணை புரியும்

    எனவே முடிந்தவரை தூங்க தயாராவதற்கு 2 அல்லது 1 மணி நேரத்துக்கு முன்பாகவே தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட வேண்டும். தூங்கும் போது கைக்கு எட்டும் தூரத்தில் செல்போனை வைக்க கூடாது. இரவு தூக்கத்தை கெடுக்கும் வகையில் பகல் நேரத்தில் தூங்க கூடாது. வாழ்க்கையில் வெற்றி பெற உழைப்பு அவசியம். அதற்கு பொழுதை வீணடிக்காமல் விழிப்புடன் இருந்து பாடுபட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் உழைக்க தேவையான ஆற்றலையும், புத்துணர்வையும் தர கூடியதாக தூக்கம் உள்ளது. எனவே இரவு இருளாக இருக்கும் வகையில் நன்றாக கண்மூடி தூங்குவதே ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழ துணைபுரியும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.
    • பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    கோடை காலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் வெப்பத்தை குறைத்து, உடலை குளிரவைக்கும் உணவுப் பொருளை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தி வருகிறோம். அதுதான் பெருஞ்சீரகம். இதனை பயன்படுத்தி கோடை காலத்தில் புத்துணர்வூட்டும் பானங்களை தயார் செய்து பருகலாம்.

    செலினியம், துத்தநாகம் போன்ற முக்கிய கனிமங்கள் இதில் நிரம்பி இருக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதிலும், மாதவிடாயை ஒழுங்குபடுத்துவதிலும் பெருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆன்டிஸ்ப்ராஸ்மோடிக் என்னும் வேதிப்பொருள் மாதவிடாய் கோளாறுகளை சீரமைக்க உதவுகிறது. வழக்கமாக பருகும் டீ, காபிக்கு பதிலாக பெருஞ்சீரக டீ பருகலாம். இது கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் வயிறு உபாதை சார்ந்த பிரச்சினைகளையும் போக்கும்.

    சாப்பிட்ட பிறகு சிறிதளவு பெருஞ்சீரகத்தை மெல்வது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். வாயு தொல்லை மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

    பல்வேறு உணவுகள், பானங்களில் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்துக்கொள்ளலாம். கோடை காலத்தில் பாலுடன் பெருஞ்சீரகத்தை பொடித்து சேர்த்து பருகி வர, பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

    பெருஞ்சீரகத்தை நீரில் காய்ச்சியும் பருகி வரலாம். இது இரைப்பை பிரச்சினைகளை தடுத்து செரிமானத்தை மேம்படுத்தும். காலை பொழுதை உற்சாகத்துடன் தொடங்குவதற்கும் வழிவகுக்கும். அகன்ற பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி சிறுதீயில் கொதிக்க விடவும். அதில் 2 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகத்தை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். அந்த நீரை வடிகட்டி குளிரவைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகலாம். தினமும் 2 கப் பருகுவது நல்ல பலனை கொடுக்கும். கோடை காலத்தில் பிரிட்ஜில் வைத்தும் பருகி வரலாம்.

    • 100 கிராம் பேரிச்சம் பழத்தில் கிட்டத்தட்ட 314 கலோரிகள் இருக்கிறது.
    • ஒரு தேக்கரண்டி தேனில் 17 கிராம் சர்க்கரை மற்றும் 64 கலோரிகள் இருக்கிறது.

    ஒரு தேக்கரண்டி தேனில் கிட்டத்தட்ட 17 கிராம் கார்போஹைட்ரேட், 17 கிராம் சர்க்கரை மற்றும் 64 கலோரிகள் இருக்கிறது. வெள்ளை சர்க்கரையின் கிளைசீமிக் இன்டக்ஸை தேனுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது கிட்டத்தட்ட அதே அளவு தான் தேனிலும், சர்க்கரையிலும் இருக்கிறது. மேலும் வெள்ளை சர்க்கரையில் இருக்கக்கூடிய அதே அளவு கார்போஹைட்ரேட் தேனில் இருப்பதால் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தக்கூடும். தேனில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள் இருப்பதால் எப்போழுதாவது சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

    தேனில் இருக்கும் நன்மைகளுக்காகவும் அது இயற்கையான பொருள் என்பதால் அது ஃபிட்னஸ் பிரியர்களுக்கான மாற்று வழியே தவிர சர்க்கரை நோயாளிகளுக்கு அல்ல என்கிறது.

    பேரிச்சம் பழங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருப்பதாலும், அதன் கிளைசீமிக் இன்டக்ஸ் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம். பேரிச்சம் பழங்களில் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால், அதிகமான அளவு உட்கொள்ளக் கூடாது. முறையான உணவுப்பழக்கத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு பேரிட்சைகளை சாப்பிடலாம். இதிலிருக்கும் அதிக நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு கண்டிப்பாக தேவை.

    100 கிராம் பேரிச்சம் பழத்தில் கிட்டத்தட்ட 314 கலோரிகள் இருக்கிறது. இது மிக அதிகம். வைட்டமின் ஏ, கே, பி, மக்னீசியம், இரும்பு, தாமிரம், பொட்டாசியம், மாங்கனிசு போன்றவை இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பழங்களை சாப்பிடலாம்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயபடிக் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    ×