search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106670"

    • தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.
    • மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    தினசரி யாருக்கு, எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின் படி,

    3 மாதம் வரையுள்ள குழந்தைகள் 14 - 17 மணிநேரம்,

    4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள் 12 - 16 மணிநேரம்,

    1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 11 - 14 மணிநேரம்,

    3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் 10 - 13 மணிநேரம்,

    6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 9 - 12 மணிநேரம்,

    13 - 18 வயது வரையுள்ள வளிரிளம் பருவத்தினர் 8 - 10 மணிநேரம்

    மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம், தினந்தோறும் தூங்க வேண்டும்.

    தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய், ஆஸ்துமா, உடல் பருமன், மனச்சோர்வு, குழப்பம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

    மேலும், தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.

    தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    ஒழுங்கற்ற தூக்க அட்டவணை, தூக்க நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, தூங்கும் அறையில் அதிகளவு வெளிச்சம் அல்லது சத்தம் இருத்தல் போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும். காஃபீன், நிக்கோட்டின், மது போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

    உளவியல் பாதிப்புகள், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா, மனச்சோர்வு நோய், இருமல் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் சில மருந்துகளும் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    -எம். எஸ். சீதாராமன்

    • எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்துவிடும்.
    • எலுமிச்சை பழச்சாற்றை அருந்தியவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும்.

    அமெரிக்கன் டயாபடீஸ் அசோசியேஷன் எலுமிச்சை பழத்திற்கு சூப்பர் புட் என்று பெயர் சூட்டியுள்ளது. ஏனென்றால் நீரிழிவு நோயாளிகளுக்கு இதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. ஒரு எலுமிச்சை பழத்தில் 29 கலோரிகள், 2.8 கிராம் நார்ச்சத்து மற்றும் ஒரு நாளின் வைட்டமின் சி தேவையில் பாதி அளவு இருக்கிறது.

    எலுமிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனே அதிகமாகாமல் பார்த்துக் கொள்கிறது. எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் சி, பாலிபெனால் போன்ற ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இன்சுலின் உணர் திறனை அதிகரித்து இன்சுலின் திறம்பட செயல்பட உதவி செய்கிறது.

    எலுமிச்சைப்பழத்தின் சர்க்கரை உயர்தல் குறியீடு 20 ஆகும். அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக தினமும் எலுமிச்சையை பழமாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எனினும் எலுமிச்சம் பழத்தில் ஆக்சலேட் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.

    எலுமிச்சம் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பற்களின் எனாமலை அரித்துவிடும். அதனால் எலுமிச்சை பழச்சாற்றை அருந்தியவுடன் வாய் கொப்பளிக்க வேண்டும். மேலும் வயிற்றில் அல்சர் அல்லது அசிடிட்டி இருப்பவர்கள் எலுமிச்சை பழத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி. சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • தற்போது இதய நோய் என்பது வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்கத்தொடங்கிவிட்டது.
    • இதய நோயில் இருந்து நிவாரணம் பெற பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன.

    இதய நோய் வராமல் தடுக்கவும், இதய நோயில் இருந்து நிவாரணம் பெறவும் பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன. அவற்றில் மிக எளிமையான சித்த மருத்துவ முறைகளில் ஒன்று தான் குடிநீர் வகைகள். சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த குடிநீரை பயன்படுத்தி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த குடிநீர் வகைகள் வருமாறு:

    குடிநீர் 1: மருதம் பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, சாதிக்காய், சாதிபத்திரி, நாவல் விதை இவற்றை சம அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி குடிநீராக்கி 60 மில்லி அளவு காலை, மாலையில் குடிக்கலாம்.

    குடிநீர் 2: பேரீச்சை, சிங்காரக் கிழங்கு (பண்ணிமோந்தான் கிழங்கு), நிலப்பனை, தண்ணீர் விட்டான், வில்வப் பட்டை, தாமரைக் கிழங்கு, மருதம் பட்டை இவற்றை தலா 35 கிராம் எடை அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இருந்து ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிநீராக்கி காலையில் மட்டும் குடிக்கவும்.

    குடிநீர் 3: வில்வப்பட்டை, தேவதாரம், குரோசாணி ஓமம், லவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, மருதம்பட்டை இவைகளை தலா 35 கிராம் அளவு எடுத்து 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து, எட்டில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்து 60 மில்லி வீதம் காலை, மாலை குடிக்கவும்.

    குடிநீர் 4: ஆட்டின் தமரகம் (இருதயம்) ஒன்றை எடுத்து அதை சிறிய துண்டுகளாக்கி அத்துடன் லவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி இவற்றின் பொடிகள் ஒரு சிட்டிகையும், உப்பு ஒரு சிட்டிகையும் சேர்த்து 200 மில்லி அளவு தண்ணீர்விட்டு நன்றாக காய்ச்சி சூப் போன்று தயாரித்து கொடுக்கலாம்.

    இது தவிர, வெண்தாமரை சூரணம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும். அதுபோல தேனில் ஊறவைத்த கர்ச்சூர் வகை பேரீச்சையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு நோய் வரும் ஆபத்தை தடுக்கலாம்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, எம்.டி, (சித்தா)

    • அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும்.
    • தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும்.

    இயற்கையின் நியதி அன்றும், இன்றும், என்றும் ஒன்றுதான். அதன் போக்கில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் அதை மாற்ற முயற்சிப்பது தனிமனித பேராசை தான். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அபாய மணி அடிக்கும் நிலை யில், அதற்கான காரணத்தையும் தெள்ளத்தெளிவாக தெரிவித்து விட்டனர். ஆனால் அதை எந்தநாடும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. எனவே இயற்கையின் தாக்கத்தில் இருந்து நம்மை நாமே தற்காத்து கொள்வது சாலச்சிறந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது.

    ஆரம்பமே அனல் பறக்கிறது. தொடக்கமே சுட்டெரிக்கிறது என்றால் போகப்போக .... தமிழ்நாட்டில் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது. அதிலும், அக்னி நட்சத்திரம் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் வெயில் வாட்டி வதைக்கும். அதற்கு முன்னதாக ஜனவரி முதல் மார்ச் வரையில் ஓரள வுக்கு மட்டுமே வெயில் நிலவும். ஆனால் இப்போதே அதிக வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க சர்க்கரை, ஐஸ் போடாமல் அதிக அளவில் பழச்சாறு குடிக்க வேண்டும். நீர்ச்சத்துள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் பருகுவது நன்று. மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்று வதை தவிர்ப்பது நல்லது. நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலத்தில் கடும் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்ப்பது சிறப்பு.

    நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும். கம்பில் அதிகநார்ச்சத்து, நீர்ச்சத்து உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். நுங்கு உடலிலுள்ள சூட்டை தணித்து, அம்மை மற்றும் வைரஸ் ஜூரம் ஏற்படுவதை தடுக்கும். நுங்கை தோலுடன் சாப்பிட்டால், வயிற்றுப் புண் குணமடைவதுடன், நுங்கிலுள்ள தண்ணீரை, வியர்குருவில் தடவினால் வியர்குருவும் குணமடை யும். வாரம் ஒரு முறை, சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெய்யில் பொறித்து, சூடு தணிந்ததும் அந்த எண்ணெய்யை உச்சந்தலையில் வைத்தும், உடலில் பூசியும் குளிக்கலாம்.

    * வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, கேழ்வரகு, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். காலையில் மோர், இளநீர் போன்றவையும், மதியம் தயிரும், மாலை வேளைகளில் தர்பூசணி பழச்சாறு, நுங்கு ஜூஸ் போன்றவற்றை அருந்துங்கள்.

    * வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை அருந்துவதை காட்டிலும் மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானை யில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடியுங்கள்.

    * ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளையும், ஜீன்ஸ் போன்றவற்றையும் தவிர்த்து பருத்தியில் (காட்டன்) நெய்யப்பட்ட உடைகளை அணியுங்கள். பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம்.

    * வெயிலில் வெளியே செல்பவர்கள் முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் கிரீம் தடவிவிட்டு வெளியே செல்லுங்கள். தரமான கூலிங்கிளாஸ் அணிவது நல்லது.

    * தினமும் இரண்டு முறை தலை முடியை தூய்மையான நீரில் நன்றாக அலசுங்கள். இரண்டு மூன்று முறை குளிக்கவும். வீட்டு வாசல்களில், ஜன்னல்கள் வெளியே வாழை இலையை தொங்க விடுங்கள்.

    * ஏ.சி. அறையில் அதிக நேரம் இருப்பவர்கள் காலை அல்லது மாலை வேளைகளில் வெயில் இல்லாத நேரத்தில் அரை மணிநேரம் நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதுபோன்று தற்காப்பு முறைகளை கடைப்பிடித்து இந்த கோடை வெயிலை அனைவரும் சமாளித்து பாதுகாப்பாக வாழ்வதோடு இயற்கையை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.

    • சிலருக்கு இந்த குறுகிய கால மயக்கம் ஏற்படுவதற்குமுன் படபடப்பும் ஏற்படும்.
    • தலைக்கு தலையணை வைக்கக்கூடாது.

    நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவதையும், அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்துகொள்வதையும் அறிந்து இருப்போம்.

    மயக்கத்தில் இருந்து அவர் விடுபட்டதும் சில நிமிடங்களுக்குக் கைகால்களில் நடுக்கமும் தசைத்துடிப்பும் ஏற்படும். சிலருக்கு இந்த குறுகிய கால மயக்கம் ஏற்படுவதற்குமுன் படபடப்பும் ஏற்படும். அடிக்கடி கொட்டாவி வருவது, ஊசி குத்துவது போன்ற உணர்வு, வியர்ப்பது, மூச்சு வாங்குவது, வாயைச் சுற்றி மதமதப்பு போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவை ஏற்பட்டதும் தரையில் அல்லது படுக்கையில் படுத்துவிட்டால் இந்த மயக்கம் வராது.

    ஒருவேளை மயக்கம் அடைந்துவிட்டால், அந்த நபரை உடனடியாக நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். ஆடைகளின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்திவிடுங்கள். தலை கீழேயும் பாதங்கள் மேல்நோக்கியும் இருக்குமாறு தரையில் படுக்க வையுங்கள். சில நிமிடங்களுக்கு பாதங்களை உயர்த்திப் பிடித்துக்கொள்வது நல்லது. தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வைத்தால் மூச்சுக் குழாய் அடைபடாமல் இருக்கும். தலைக்கு தலையணை வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, பாதங்களுக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம்.

    முகத்தில் 'சுளீர்' என தண்ணீர் தெளியுங்கள். அப்படிச் செய்யும்போது முகத்தின் நரம்புகள் தூண்டப்படுவதால், மூளை நரம்புகளும் வேகமாக வேலை செய்யும். அப்போது மயக்கம் தெளிந்துவிடும்.

    மயக்கம் தெளிந்தபின், குளுக்கோஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து குடிக்கத் தரலாம். 5 நிமிடங்களுக்குள் மயக்கம் தெளியாவிட்டால் அது நீண்டநேர மயக்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.. இதற்கு டாக்டர் உதவியை நாடுவதே நல்லது.

    வலிப்பு, இதய கோளாறு,, சிறுநீரகம், கல்லீரல் சார்ந்த நோய்கள், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு நீண்டநேர மயக்கம் வரும்.

    இதயத்துடிப்பு, ரத்தச்சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும்; மிக அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வர வாய்ப்பு உண்டு. அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளைச் சாப்பிடுவது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக்கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நீண்டநேர மயக்கம் ஏற்படலாம்.

    • நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.
    • பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.

    பழங்களை பழமாகவே சாப்பிடுவது தான் சிறந்தது.

    அதைச் சாறாக்கி கூழாக்கி குடிப்பது சிறந்தததன்று.

    பழமாக உண்ணும் போது இன்னும் அதிகமான நார்ச்சத்து கிடைக்கும்.

    மேலும் பழச்சாறில் சீனி / சர்க்கரை கலந்து பருகுவது மிகப்பெரும் தவறு.

    அது அந்த பழத்தின் இயற்கை சுவையை மறக்கடித்து விடுகிறது. மேலும் இனிப்பு கலந்த பழச்சாறு நன்மை தருவதை விட கேட்டைத்தான் அதிகமாக தரும்.

    ஆனால் நானும் பழச்சாறுக்கடைகளில் பார்த்து விட்டேன். சீனி இல்லாமல் எங்கும் விற்பனை நடப்பதில்லை. பழத்தை உண்ணுங்கள்.

    சாறாக பருகவேண்டும் எனில் இனிப்பு சேர்க்காமல் அந்த பழத்தின் இயற்கை சுவையோடு பருகுங்கள்.

    ஒரு செயற்கை குளிர்பானம் குடிப்பதை விடவும் பழச்சாறு குடிப்பது சிறந்தது தான்.

    ஆனால் அதில் சீனி/ சர்க்கரை சேர்க்கும் வரை மட்டுமே அது செயற்கை குளிர்பானங்களை விடச் சிறந்தது என்பதை அறிக. சிறார் சிறுமியருக்கு பேக்கரி உணவுகளைக் காட்டிலும் பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.

    நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.

    பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.

    பழங்களில் மேற்படி இனிப்பை சேர்ப்பது என்பது அதில் இருக்கும் நன்மைகளை மழுங்கடிக்கச் செய்து விடுகிறது .

    -டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • கோடை வெயில் தற்பொழுதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது.
    • படுக்கை விரிப்புகள் காட்டன் வகை துணியாக இருப்பது நல்லது.

    பருவநிலை மாற்றங்களால் இயற்கை மாறுவது வழக்கமே. இதுபோன்ற பருவகால மாற்றங்கள் பல்வேறு வகையான நோய்களையும், குறிப்பாக தொற்று நோய்களையும் ஏற்படுத்துகிறது. கோடை வெயில் தற்பொழுதே வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக கொடிய கொரோனா தொற்று நோயை எண்ணி பயப்படாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு நோயின் தொற்றும், பாதிப்பும் அதிகமாக இருந்தது. அது இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் இன்னொரு தொற்று நோய் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது ஒருபக்கம், கோடை கால தொற்று நோய்கள் மறுபக்கம் என நோய்களின் ஆதிக்கம் எல்லா காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

    வெயில் காலம் என்று சொல்லக் கூடிய கோடை காலத்தில் அம்மைநோய், குடற்புண்கள், மூலம், பவுத்திரம், சிறுநீரக தொற்று, வியர்க்குரு, மஞ்சள் காமாலை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்றவை அதிகமாக காணப்படும். தொற்று நோய்கள் என்பவை உணவு, குடிநீர், காற்று மற்றும் தொடுதல் மூலமாக வைரஸ் கிருமிகள் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவி குறி குணங்களை ஏற்படுத்தும்.

    சித்த மருத்துவத்தில் பலவித தொற்று நோய்கள் பற்றிய குறிப்புகளும், அந்நோய்களுக்கு மருத்துவ தீர்வுகளும், நோய்கள் ஏற்படாமல் இருக்க தற்காப்பு முறைகளையும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கோடை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையாக விளங்குவது அம்மை நோயாகும்.

    அம்மை நோய் நோய் வரும் வழி

    நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும், சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். நோயாளி இருமும் போதும், தும்மும்போதும் காற்றில் பரவுவதாலும், அவர்களின் உடைமைளை கையாள்வதன் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவும். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    அம்மை நோயில் பெரியம்மை, சிறியம்மை, பூட்டுத்தாளம்மை, தட்டம்மை என பல வகைகள் உண்டு. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோயும், பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரசால் பூட்டுத்தாளம்மையும், ரூபியோலா வைரசால் தட்டம்மையும் ஏற்படுகிறது.

    பொதுவாக அனைத்து வகை அம்மை நோய்களிலும் ஜூரம், உடல்வலி, தலைவலி, உடல் சோர்வு, உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல், பின் உடலில் ஆங்காங்கு சிறு கொப்புளங்கள் ஏற்படும். ஏழாம் நாளில் ஜூரம் முழுவதும் நீங்கி கொப்புளங்கள் சுருங்கி, பின் பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். இருப்பினும் அம்மைநோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவை பாதித்து பிறவி ஊனத்தையும் இது உண்டாக்கலாம்

    அம்மை நோயை பொறுத்த வரையில் அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்ற சித்தர்கள் வாக்கிற்கிணங்க சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு நமது உடல் தட்பவெட்ப மாறுதலடையும். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் மனித உடலில் வெப்பம் அதிகரித்து, பித்தம் அதிகரிக்கும். இந்நிலையில் மழை பெய்யும் போது கபகுற்றம் சேர்ந்து, உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால், வைரஸ் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு இந்நோய் உண்டாகிறது. அதனால் இந்நோயில் அதிகரித்த பித்தத்தையும், கபத்தையும் சரி செய்ய வேண்டும். இப்படி முக்குற்றத்தை சமப்படுத்தி தகுந்த உணவு, தகுந்த சித்த மருந்துகளை நம் முன்னோர்கள் கொடுத்து கட்டுப்படுத்தி தீவிர நிலை பாதிப்பை குறைத்து குணம் கண்டு நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

    அவைகளில் முத்துப்பற்பம், பவள பற்பம், சிருங்கி பற்பம் மற்றும் ஜூரத்தை குறைக்க சாந்த சந்திரோதய மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பிரம்மானந்த பைரவ மாத்திரை, தாளிசாதி சூரணம், சந்தநாதி மாத்திரை, கோரைக்கிழங்கு சூரணம் போன்றவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கிருமிகளை அழிக்க சொடக்கு தக்காளி அல்லது மிளகு தக்காளி என்ற மூலிகையின் கற்கம் நெல்லிக்காய் அளவு (5 கிராம்) உள்ளுக்குள் நான்கு முதல் ஐந்து நாட்கள் வழங்க நோய் கிருமியின் தாக்கம் குறையும். நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமலிருக்க வேப்பிலை, துளசி, மஞ்சள், பூங்கற்பூரம் நான்கையும் சேர்த்து கரைத்த நீரினால் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

    நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர் அறைக்கு யாரேனும் ஒருவர் உடல் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அதாவது உடல் ஆரோக்கியமாக இருப்பவர் மட்டுமே செல்வது, உணவு வழங்குவது, குளிப்பாட்டுவது என இருக்கவேண்டும். மற்றவர்கள் இடைவெளி கடைபிடிப்பது தொற்று பரவாமல் தடுக்க உதவும். முகக்கவசம், கையுறை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    படுக்கை விரிப்புகள் காட்டன் வகை துணியாக இருப்பது நல்லது. மேலும் வைரஸ் தடுப்பு மூலிகைகள், வேப்பிலை, துளசி இலைகளை படுக்கை தலைமாட்டில் மற்றும் வீட்டின் வாசலில் சொறுகி வைக்கலாம். மேலும் படுக்கை விரிப்புகள் மஞ்சள் கலந்த நீரில் முக்கி நிழலில் உலர்த்தி தினசரி தலையனை உள்பட மாற்றவேண்டும்.

    நீர்ச்சத்து குறையாமல் இருக்க பழச்சாறு, இளநீர், நீர், மோர் கொடுக்கலாம். மலக்கட்டு இல்லாமல் இருக்க திரிபலா சூரணம், மாத்திரை அல்லது கடுக்காய் சூரணம் மருத்துவர் ஆலோசனை பெற்று கொடுக்கலாம். மேலும் வேப்பிலை, துளசி, மஞ்சள், சந்தனம் நான்கையும் வேண்டிய அளவு எடுத்து சேர்த்து அரைத்து மேற்பூச்சாக பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் தீவிரம் குறைந்து விரைவில் குணமடையும், தழும்பு ஏற்படாது.

    வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் அம்மை நோய்கள் பரவாமல் தடுக்கவும் சித்த மருத்துவம் கூறும் அறிவுரைகள்:

    உணவில் அதிக அளவு தயிர், மோர், கீரை, காய்கறிகள், மலை வாழைப்பழம் தர்பூசணி, இளநீர், கரும்புச்சாறு, பழைய நீராகாரம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், கருப்பு திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் உட்கொள்ள வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது. நீராகாரம், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்றவற்றை தயிர், மோர் சேர்த்து அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இளநீர், நுங்கு, வெட்டிவேர் மற்றும் நன்னாரி ஊறவைத்த குடிநீர், நெல்லிக்காய் ஊறல் குடிநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும். அதிக காரம், புளிப்பு, மசாலா அடங்கிய உணவுகள், கேக், பிஸ்கட், பரோட்டா போன்ற மைதா மாவினால் செய்த உணவு தின்பண்டங்கள், துரித உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும், சூடாக எதையும் கொடுக்க கூடாது. காட்டன் வகை ஆடைகள் அணியவேண்டும். இருக்கமாக ஆடை அணியக்கூடாது, உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. இதனால் அம்மை புண்கள் அழுத்தி வேதனையை உண்டாக்கும்.

    குளிர்ந்த நீரில் சிறிது வேப்பிலை, துளசி மற்றும் மஞ்சளை கலந்து ஊற வைத்து குளிப்பதால் அம்மை நோயின் தாக்கம் குறையும். பருத்தியினால் செய்யப்பட்ட உடைகளை அணிய வேண்டும். வேப்பிலை விரிப்புகள் வைரஸ் வீரியத்தை நிச்சயமாக குறைக்கும்.

    மற்றபடி நோய் வராமலிருக்க மலக்கட்டு கூடாது, இரவில் கண் விழித்தலை தவிர்க்க வேண்டும், சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இயற்கை உபாதைகளை அடக்க கூடாது. நல்லெண்ணெய் குளியல் வாரம் இருமுறை மேற்கொள்ளவேண்டும்.

    வீட்டில் வெட்டிவேர், தர்ப்பைப்புல், கோரைப்புல் பாய்களை விரிப்புகளாக பயன்படுத்தலாம், எப்பொழுதும் நல்லது. ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். காட்டன் துணியை உடுத்த வேண்டும். இரவில் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இருக்கும் அறை, தூங்கும் அறைகள் காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும். அதிக காரம், அதிக புளிப்பு சுவையை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். மண்பானையில் தண்ணீர் வைத்து குடிக்கவும். துரித உணவு, பதப்படுத்தி பாக்கெட் மற்றும் டின்களில் அடைத்து வைத்து விற்கப்படும் அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்து பழச்சாறு பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். மது, புகையை குறைக்கலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். போதிய அளவில் உறக்கம், ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலாக மனது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    மேற்கண்ட வாறு சித்த மருத்துவத்தில் கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்தால் கோடை காலத்தில் வரும் அம்மை நோய் மற்ற தொற்றுகளிலிருந்து (அதாவது மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, மூலம், பவுத்திரம், மலக்கட்டு, பலவித வைரஸ் தொற்று காய்ச்சல் போன்றவை) நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம், பிறருக்கும் பரவாமல் தடுக்கலாம்.

    மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
    • இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும்.

    ரத்தக் கொதிப்பு (ஹை பிரஷர்) வந்தவர்கள் குறைக்க வேண்டியது எதை? என்ற கேள்விக்கு கட்டாயம் அனைவரும் கூறும் பதிலாக "உப்பு" என்பதாக இருக்கும் .

    கட்டாயம் நிறுத்த வேண்டியது எதை என்று கேட்டால் பெரும்பான்மையினர்,

    "முட்டையின் மஞ்சள் கரு"

    "மட்டன்"

    என்று கூறுவதையே காண முடியும்.

    ஆனால் ரத்தக்கொதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் நிறுத்த வேண்டியது ,"சீனி / நாட்டு சர்க்கரை இனிப்புகளைத் தான்.

    என்ன? பிரஷருக்கு உப்ப தான குறைக்க சொல்லுவாங்க? நீங்க என்ன இனிப்ப நிறுத்த சொல்றீங்க?

    இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது. அதில் இருந்து க்ளூகோஸ் ரத்தத்தில் கலப்பதால் கணையத்தின் "இன்சுலின்" சுரப்பைத் தூண்டிக் கொண்டே இருக்கும். எனவே ரத்தத்தில் எப்போதும் இன்சுலின் பிரவாகம் எடுக்கும். அதிகமாகவே இருக்கும்.

    இதை "இன்சுலின் மிகை நிலை" என்கிறோம். இன்சுலின் மிகை நிலையில் இருக்கும் போது சரியாக அதன் பணிகளை செய்யாது. இதன் விளைவாக "இன்சுலின் எதிர்ப்பு" நிலை தோன்றுகிறது.

    இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது.

    இதனால் உடல் பருமனாகிறது.

    ட்ரைகிளசரைடுகள் கூடுகின்றன .

    ஊறு செய்யும் ஆக்சிடைஸ்டு எல்.டி.எல் அளவுகள் கூடுகின்றன.

    ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

    இதன் விளைவாக ரத்த நாளங்கள் தங்களின் நெகிழ்வுத் தன்மையை இழக்கின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் உயர்கிறது. கூடவே இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும். சோடியத்துடன் சேர்த்து அதிகமான நீரும் சேமிக்கப்படும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் மேலும் கூடுகிறது.

    இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றிலும் இனிப்பு சுவை கொண்ட சீனி நாட்டு சர்க்கரை போன்றவற்றை உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாம் அறிவது யாதெனில் நீரிழிவில் மட்டுமல்ல ரத்தக் கொதிப்பிலும் சீனி மற்றும் நாட்டு சர்க்கரையை கைவிட்டால் சிறப்பான கட்டுப்பாடு கிடைக்கும் என்பது புலப்படும்.

    -டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.
    • பாகற்காயில் உள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

    கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

    * பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசிய நாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

    * குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.

    * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

    * சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

    * பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற பிளோவனாய்டுகள் இதில் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிகஅளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.

    * ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.

    * வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

    பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.

    • மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம்.
    • பரோட்டா பொதுவாக மைதாவில் செய்யப்படுகிறது.

    மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான்.

    பரோட்டா பொதுவாக மைதாவில் செய்யப்படுகிறது. மைதா என்பது கோதுமை சுத்திகரிக்கப்படும் போது அதன் தவிடு நீக்கப்பட்டு அதன் விதை கூழ் தசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

    பொதுவாக தவிட்டில் தான் மெக்னீசியம், மேங்கனீஸ், இரும்புச்சத்து, செலினியம் போன்ற தனிமங்கள் இருக்கும். விதைக்கூழ் தசையில் அதிகமான மாவுச்சத்து இருக்கிறது. ஒரு கப் மைதாவில் 496 கலோரிகளும், 107 கிராம் மாவுச்சத்தும் இருக்கிறது. பரோட்டாவின் சர்க்கரை உயர்தல் குறியீடு 71 ஆகும். அதனால் பரோட்டா சாப்பிட்ட உடனே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.

    இதில் உள்ள அதிகமான அளவு மாவுச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மேலும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து ஜீரண கோளாறுகள் ஏற்படுத்தும். மைதாவில் வெள்ளை நிறத்தை ஏற்படுத்துவதற்காகவும், அது மென்மையாக இருப்பதற்காகவும், பென்சைல் பெர் ஆக்சைடு மற்றும் அலோக்சான் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

    மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முக்கியமான விஷயம் மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்?

    இது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும். மேலும் எலிகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் அலோக்சான் சர்க்கரை நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் மைதா பரோட்டாவை தவிர்ப்பது நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா),

    • பிளாஸ்டிக் பொருட்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றன
    • செப்பு, நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டது.

    நமது முன்னோர்கள் சமையலுக்கும், உணவு பொருட்களை சேமித்து வைப்பதற்கும் செப்பு பாத்திரங்களைதான் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.

    செப்பு பாத்திரங்களில்தான் தண்ணீரை சேமித்து பருகியும் வந்தார்கள். கால மாற்றமும், நாகரீக மோகமும் செப்பு பாத்திரங்களை புழக்கத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டன. அவற்றின் இடத்தை பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்துவிட்டன.

    பிளாஸ்டிக் பொருட்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் சூழ்ந்திருக்கின்றன. அதுபற்றிய விழிப்புணர்வு பெருகி வருவதால் பெரும்பாலானோர் மீண்டும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். மேலை நாடுகளில் கூட செப்பு பாத்திரங்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. குடிநீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள், உணவு பொருட்களை சேமிக்கும் பாத்திரங்கள் என செப்பு பாத்திரங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    செப்பு, நுண்ணிய ஊட்டச்சத்து கொண்டது. இது உடல் நலனுக்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதோடு செரிமானம் சீராக நடைபெறவும் துணைபுரியும். புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும். ''செப்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி அமில, கார சமநிலையை பராமரிக்கும். உணவுகள், சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை செப்பு பாத்திரங்களில் பாதுகாக்கலாம். மேலும் செப்பு பாத்திரத்தில் இரவில் நீரை ஊற்றி வைத்துவிட்டு காலையில் பருகுவது நல்லது'' என்கிறார், ஊட்டச்சத்தியல் நிபுணர் கவிதா தேவ்கன்.

    அடிக்கடி காய்ச்சலுக்கு ஆளாகுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படும். உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும். உணவு பொருட்களில் பாக்டீரியாக்கள் பெருகுவதை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. பாக்டீரியாக்கள் மூலம் நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கும்.

    • தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள்.
    • வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

    வெயில் காலம் கடுமையாக ஆரம்பமாகிவிட்டது. என் டாக்டர் நண்பர்கள் கூறிய எளிய கூல் டிரிங்ஸ்!

    நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது, ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள். எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல இருக்க வேண்டும் என்றார்.

    ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம். வெயில் காலத்திற்கு நல்ல எனர்ஜி டானிக். செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள் என்றார்.

    பாட்டியின் அனுபவ பகிர்வு : கோடை காலத்தில் நாவறட்சி தீர, இயற்கை பானங்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சர்பத், தர்பூசணி பழம் எடுத்து கொள்ளலாம். இவற்றோடு பானகம் ஒன்றையும் அவ்வப்போது தயார் செய்து அருந்தலாம். இதற்கு வெறும் புளி, கருப்பட்டி, தண்ணீர் போதும்.

    புளியை தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். கருப்பட்டியை தட்டி அதோடு நன்கு கலக்க வேண்டும். பாத்திரத்தில் துணியால் வடிகட்ட வேண்டும். சுக்கும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். பானகம் ரெடி. இந்த பானக தயாரிப்பு இப்போது மெல்ல மறைந்து வருகிறது.

    கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும். பழரசத்தை விட நல்லது இந்த பானகம்.

    இதன் பார்முலா : கால்சியம் + இரும்பு சத்து + விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்.

    இரும்பு சத்தை அமினோ அமிலங்களை பனைவெல்லத்தில் இருந்தும், புளியிலிருக்கும் விட்டமின் சி-யானது பனைவெல்லத்துடன் இணைந்து, உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது. சுக்கின் நன்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஏலக்காய் உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்யும். அற்புதமான பானகம். இந்த வெய்யிலுக்கு தயாரிப்பதும் எளிது.

    எது எப்படியோ, இவைகளுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    ×