search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111149"

    நீலகிரியில் சூறாவளிக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன.
    ஊட்டி:

    கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை அல்லது இரவில் பரவலாக கோடை மழை பெய்தது. முதுமலை ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதால் வாழைகள் சரிந்து விழுந்தன. இதில் அப்பகுதி விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இடியுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11 மணி முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பாண்டியாறு, மாயார், பொன்னானி உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு முழுவதும் மழையுடன் காற்று வீசியதால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

    புளியாம்பாரா மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான கரளிக்கண்டி, அத்தூர், கொல்லூர், காபிக்காடு, கொட்டக்குன்னி, கறிக்குற்றி, புளியம்வயல், மஞ்சமூலா, முன்டக்குன்னு, பாடந்துரை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் காற்றில் சாய்ந்து விழுந்தன. இதேபோல் தேவர்சோலை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளிலும் வாழைகள் சரிந்து விழுந்தன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்துள்ளன.

    இதை அறிந்த தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் ஆனந்த் தலைமையிலான அலுவலர்கள், கூடலூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, தேவர்சோலை வருவாய் ஆய்வாளர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் நூர்ஜகான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பந்தலூர் தாலுகா பகுதியிலும் பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, முள்ளன்வயல் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் எருமாடு கூலால், மண்ணாத்திவயல், பள்ளிசந்திப்பு ஆகிய பகுதியில் மரங்கள் விழுந்து வீடுகள் சேதம் அடைந்தன. கக்குண்டி பகுதியில் ரவீந்திரகுமார், காளிமுத்து, சசி, பாபு, பிஜூ ஆகியோரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

    இதேபோல் நெல்லியாளம் டேன்டீ, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, அம்பல மூலா, முள்ளன் வயல் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, எருமாடு வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், ஸ்ரீஜா, உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேதம் அடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதேபோன்று வால்பாறையில் பலத்த சூறாவளிக்காற்றுடன் கனமழைக்கு 15 வீடுகள் சேதம் அடைந்தன. மரம் விழந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வால்பாறை அருகே உள்ள முடீஸ் வட்டார பகுதியில் தோனிமுடி எஸ்டேட் முதல்பிரிவு, ஆனைமுடி, தாய்முடி, சோலையார் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் மட்டும் மழை பெய்தது.

    குடியிருப்புக்கு அருகில் இருந்த 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூமரம் சாய்ந்து சாலையில் விழந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக்கு கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 678 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த போக்குவரத்து கழகங்களுக்கு 555 புதிய பஸ்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 140 புதிய பஸ்கள் வந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர்-திருப்பூர், குன்னூர்- சேலம், கோத்தகிரி-பெரம்பலூர், கோத்தகிரி-மதுரை, கோத்தகிரி-திருச்சி, கோத்தகிரி-ஈரோடு, கூடலூர்-சேலம், கூடலூர்-திருப்பூர், கூடலூர்- ஈரோடு, கூடலூர்-கோவை, அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டலத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிளை-2-ல் இருந்து ராஜபாளையம், ஈரோடு, ஊட்டி-துறையூர், ஊட்டி-கள்ளிகோட்டை, ஊட்டி-ஈரோடு, ஊட்டி-சேலம் ஆகிய வழித்தடங்களில் 20 புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து 20 புதிய பஸ்கள் இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் அதில் ஒரு புதிய பஸ்சை பார்வையிட்டார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் கடந்த ஆண்டு 19 புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது நடப்பாண்டில் ரூ.5 கோடியே 40 லட்சம் மதிப்பில் 20 புதிய பஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது என்றார்.

    அரசு போக்குவரத்துக் கழக நீலகிரி மண்டல பொது மேலாளர் மோகன், சாந்தி ராமு எம்.எல்.ஏ., கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புதிய பஸ்களுக்கு மாலை போடப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
    நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிரான கேரட் 2300 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் கேரட் நள்ளிரவில் கூலி ஆட்கள் கொண்டு அறுவடை செய்யப்பட்டு காலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் சமூகப் பிரச்சினைகள் மற்றும் காட்டு விலங்குகள் விவசாய கூலி ஆட்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இனி வரும் நாட்களில் கேரட் நள்ளிரவு சமயத்தில் அறுவடை செய்வதை தவிர்த்து காலை 6 மணியளவில் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட வேண்டும். கேரட் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் இதன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகள் காலை 10 மணியளவில் கேரட் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அனைத்து கேரட் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்து இம்முறையினை தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதையடுத்து கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர். #NortheastMonsoon #Rain
    கோவை:

    வட கிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்தது.

    கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. கோவை மாநகரில் அதிகாலை மழை பெய்தது. பின்னர் தூறிக்கொண்டே இருந்தது.

    இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

    மேட்டுப்பாளையத்தில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வால்பாறை அருகே உள்ள ஆழியாறு, அட்டகட்டி பகுதியில் லேசான தூறல் அடித்தது. வால்பாறையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாரல் மழை பெய்தது. காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் இந்த மழை நீடித்தது. இன்று காலை தூறிக்கொண்டு இருந்தது. மழை காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. #NortheastMonsoon #Rain

    நீலகிரி மாவட்ட வாகனங்களை அடையாளம் காண ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த பாதையில் செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகளால் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரில் சென்ற 5 சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் சாலை பாதுகாப்பு கருதியும் விபத்துகளை குறைக்கவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை கல்லட்டி மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ உதவி மற்றும் அவசர காலங்களில் போலீசாரின் அனுமதி பெற்று வாகனங்களை இயக்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்த வாகனங்களை அடையாளம் காணும் வகையில் போலீசார் சார்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை ஊட்டி அருகே உள்ள தலைகுந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறையின் ஆலோசனையின் பேரில் 2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். இதனால் டிரைவர்கள் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், இருப்பிட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் ஊட்டியில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து போலீசாரின் ஆய்வுக்கு பிறகு சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். தலைக்குந்தா மற்றும் கல்லட்டி பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள 233 இடங்களின் வரைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். அரசு முதன்மை செயலாளர் நிர்வாக இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரகாந்த் பி.காம்ளே தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ளே கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பொழிகின்றது. வடகிழக்கு பருவமழையின்போது நிலச்சரிவு, மரம் விழுதல், வெள்ள அபாயம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு அண்டை மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இரண்டு நாட்களுக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும்.

    உள்ளுர் மக்கள் இரண்டு நாட்களுக்கு வீடுகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் இருக்குமாறு தெரிவித்தார்.

    மேலும் 233 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டு, அதன் வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை அலுவலர்களுடன் கூடிய 35 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

    இதுவரையில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. மழையினால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    2 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள், மணல் மூட்டைகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் போன்றவை தயாராக உள்ளது. மின்வாரியத்துறை தனி குழு அமைத்து அதன் மூலம் பணி மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சந்திரகாந்த் பி.காம்ளே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் தீயணைப்பு நிலையம் சென்று, வடகிழக்கு பருவழையால் ஏற்படும் வெள்ளத்திலிருந்து பொதுமக்களை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு, அதன் செயல் விளக்கத்தினையும் பார்வையிட்டார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட, கொடநாடு, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூரில் நேற்று இரவு மழை பெய்தது. மழை காரணமாக ஊட்டிக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 2 நாட்கள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறும் போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் தற்போது மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களை இயக்கி வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் 2 நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வன பகுதி வழியாக செல்லும் இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு பயணம் செய்வார்கள்.

    தற்போது ஊட்டியில் பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மலை ரெயில் சேவை 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    ஊட்டி - குன்னூர் சாலை தலையாட்டு மந்து பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் பன்சிட்டி பகுதியில் தடுப்பு சுவர் கட்டப்பட்ட இடத்தில் ஒரு வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஊட்டி-குன்னூர் சாலையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட கன ரக வாகனங்கள் செல்வதால் அதிர்வு காரணமாக சாலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. இரு புறங்களிலும் ஒவ்வொரு வாகனமாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்பதால் இதனை கடந்து செல்ல 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    மழை காரணமாக பாதிப்பு ஏற்படும் இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற் கொள்ள அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    குன்னூரில் பெய்த மழையால் சிங்கார தோப்பு, பாபு கிராமம், லூர்துபுரம் ஆகிய இடங்களில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த மலை காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருப்பூர், உடுமலை, அவினாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    உடுமலையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வன பகுதியில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது. மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இந்த வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது. இதனால் கோவிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டது.திருமூர்த்தி மலையில் மலை வாழ் மக்கள் வசிக்கும் செட்டில் மெண்ட் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர்.

    கோவையிலும் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
    கனமழை காரணாக நீலகிரி, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRain #SchoolHoliday #RedAlert
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கனமழை பெய்து வரும் பகுதிகளில், சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடிப்பதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் அறிவித்துள்ளார்.



    திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில்  பள்ளி,  கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று  விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். காரைக்காலில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை நாட்காட்டியின்படி இன்று மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். #TNRain #SchoolHoliday #RedAlert
    கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, நீலகிரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். #TNRain #SchoolClose
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

    இந்தநிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை  அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (6/10/2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    இதேபோல, நீலகிரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
    திருப்பூர், கோவை, நீலகிரியில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    திருப்பூர்:

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூரில் திடீரென மேகம் திரண்டு பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது.

    இந்த மழை இரவு 7 மணி வரை 2 மணி நேரம் நீடித்தது. இதே போல் தாராபுரம், காங்கயம், மூலனூர், அவினாசி, பல்லடம், உடுமலை பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை நீடித்தது.

    திருப்பூரில் பெய்த மழை காரணமாக அங்குள்ள ஈஸ்வரன் கோவில் வீதி பாலம், அவினாசி சாலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    அவினாசி - 10.6, திருப்பூர் -28, பல்லடம் -17, தாராபுரம்-16, காங்கயம் -4, மூலனூர் -21, உடுமலை பேட்டை - 5.40.

    கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. கோவை நகரில் லேசான மழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. வால்பாறை சத்தி எஸ்டேட் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    செம்மண் நிறத்தில் தண்ணீர் கொட்ட தொடங்கியது. அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். பொள்ளாச்சியிலும் மழை பெய்தது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பைக்காரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மழை நீடித்தது. அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.

    மழை காரணமாக இன்று ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #SchoolCollege #Holiday
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. தேன் வயலில் உள்ள வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆதிவாசி கிராமத்தில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    தொடர் மழையால் அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, அப்பர் பவானி, முக்குருத்தி, பைக்காரா, கிளண்மார்கன் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டன. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தெங்குமரஹாடா பகுதி மக்கள் ஆற்றை கடந்து பவானிசாகர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.   #HeavyRain #SchoolCollege #Holiday
    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதன் காரணமாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னை:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானதன் காரணமாக கோவை, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைபெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடமேற்கு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த தாக்கத்தாலும், கர்நாடகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதாலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்று வலுப்பெற்று உள்ளது.

    இதன் காரணமாக கோவை, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) சில இடங்களில் கனமழை பெய்யும். இது தென்மேற்கு பருவமழைதான்.

    தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வானம் மேக மூட்டமாக இருக்கும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். மீனவர்கள் வட மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மத்திய பகுதிக்கும், அந்தமான் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு போகவேண்டாம்.

    கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இதுவரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை 143 மில்லி மீட்டர். ஆனால் பெய்த மழை 125. எனவே தமிழகத்தில் மழை குறைவுதான். ஆனால் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக கூடுதலாக பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    பொள்ளாச்சி 10 செ.மீ., சின்னக்கல்லார் 9 செ.மீ., வால்பாறை 8 செ.மீ., தேவலா 7 செ.மீ., நடுவட்டம் 6 செ.மீ., கூடலூர் பஜார் 5 செ.மீ., பாபநாசம்(திருநெல்வேலி), கன்னியாகுமரி, குந்தாபாலம் தலா 3 செ.மீ., ஊட்டி, பெரியாறு, குழித்துறை, பூதப்பாண்டி, மைலாடி, தக்கலை, பேச்சிப்பாறை தலா 2 செ.மீ., இரணியல், கொளச்சல், நாகர்கோவில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 
    ×